யார் மனதையும் எளிதாக வெல்ல உதவும் ரகசிய ஆயுதம்!

Power of gratitude
Power of gratitudeAI Image
Updated on

னிதர்களின் உறவுகளை வளப்படுத்தும் மிக எளிய, ஆனால் ஆழமான சக்தி “நன்றி” மற்றும் “பாராட்டு” ஆகும். இவை செலவில்லாதவை; ஆனால் அளவற்ற பலன்களைத் தருபவை. ஒரு நல்ல சொல், ஒரு சிறு புன்னகை, ஒரு சிறிய பாராட்டு — இவற்றால் ஒரு மனம் மலர்கிறது, ஒரு உறவு வலுப்படுகிறது, ஒரு மனிதன் உயர்கிறான்.

பொதுவாக, ஒருவர் செய்யும் செயல்களுக்காக நாம் மனதார, உண்மையாகப் பாராட்டும் போது, நாம் அவர் மனதைத் தொட்டுவிடுகிறோம் (Power of gratitude); அவர்களின் மனதில் இடம்பிடித்துவிடுகிறோம்.

  • ஒருவரைப் பாராட்டும் போது அது அவருக்கு உற்சாகம் தரும். அந்தப் பாராட்டு அவரை மேலும் மேலும் நல்ல செயல்களைச் செய்யத் தூண்டும்.

  • ஒருவரது அழகு, அன்பு, கல்வி, பதவி, திறமை என எந்தவொரு நல்ல பண்பையும் நாம் உண்மையாகப் புகழ்வதன் மூலம் நம்மை நாமே உயர்த்திக் கொள்கிறோம். அதோடு அவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்து ஊக்கப்படுத்துகிறோம்.

  • நம் குழந்தைகள் செய்யும் சிறிய நல்ல செயல்களைக் கூட கவனித்துப் பாராட்டிப் பாருங்கள். அவர்களின் நடத்தையில் நல்ல முன்னேற்றம் தெரியும்; மேலும், இந்த நல்ல பண்பு அவர்களுக்குள்ளும் இயல்பாகவே வளரத் தொடங்கும்.

பாராட்ட நேரம், காலம் என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை; அதற்குப் பெரிய தகுதியும் தேவையில்லை. ஆனால், அதற்காக எப்போதும் பாராட்டிக்கொண்டே இருக்க வேண்டியதில்லை; உண்மையான இடத்தில் சொல்லப்படும் பாராட்டே மதிப்புடையது.

பாராட்டு என்ற மந்திரத்தை நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தலாம்.

  • ஒரு இடத்திற்குச் செல்ல 'கால் டாக்ஸி' அழைத்திருந்தால், இறங்கும்போது ஓட்டுநரிடம் “நன்றி” என்று சொல்லிப் பாருங்கள்.

  • அதேபோல், நம் வீட்டிற்கு அதிகாலையில் நாளிதழ் கொண்டு வருபவர்களுக்கும், துப்புரவுப் பணியாளர்களுக்கும் நலம் விசாரித்து, அவர்களின் பணிக்குப் பாராட்டு தெரிவித்துப் பாருங்கள்.

  • இவ்வாறு நன்றி கூறி அவர்களைப் பாராட்டும் போது, அவர்கள் உங்கள் அன்பால் ஈர்க்கப்படுவார்கள்; மேலும் உற்சாகத்துடனும் சிறப்பாகவும் தங்கள் பணியைச் செய்வார்கள்.

நம்மில் பலர் அன்பானவர்களாக இருப்போம். ஆனால், வெளிப்புற நிலையைப் பார்த்து மனிதர்களை அணுகும்போது, உள்ளத்தில் இருக்கும் நேசத்தை வெளிப்படுத்தாமல் தவறான மதிப்பைச் சம்பாதித்துவிடுகிறோம்.

  • ஒருவரை ஒரு நற்செயலுக்காகப் பாராட்டுவது அவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கும். அதுமட்டுமல்லாமல், அந்த நல்ல குணம் மேலும் செம்மையடைய உதவும். இதனால் நட்பும் உறவும் வலுப்பெறும்; உங்கள் மீது பிறரது மதிப்பும் மரியாதையும் உயரும்.

  • பாராட்ட வேண்டும் என்ற உணர்வு தோன்றும் பொழுதே அதை வெளிப்படுத்துவது முக்கியம். மனதில் இருக்கும் அன்பை மறைத்து வைக்காமல் நேர்மையாக வெளிப்படுத்தும்போது, அது மற்றவர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
தனிமை உங்களை நெருங்கும் முன்... வாழ்வை ருசிக்கத் தொடங்குங்கள்!
Power of gratitude

“மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது” என்ற பழமொழியைப் போல, பாராட்டு என்பது சிறிய செயல்தான். ஆனால், அது தரும் பலன் மிகப் பெரியது. ஒரு நல்ல வார்த்தை ஒருவரின் மனநிலையை மாற்றக்கூடிய சக்தி கொண்டது.

  • பாராட்டு, துவண்டு விழுந்தவரை எழச் செய்கிறது. அது அவர்களுக்கு ஓர் உற்சாகத்தை ஊட்டும் சக்தியாகச் செயல்படுகிறது; வெற்றிக்கான முதல் படியாகவும் அமைகிறது.

  • பாராட்டு என்பது பெரிய சொற்களாக இருக்க வேண்டியதில்லை; ஒரு எளிய புன்னகையும் கூட மற்றவரின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

நாம் ஒருவரைப் பாராட்டுவதை மற்றவர்கள் கவனிக்கும் போது, அவர்கள் அந்த நல்ல பண்பை நம்மிடமிருந்து கற்றுக்கொள்வார்கள்.

உலகில் உள்ள ஒவ்வொருவரும் பாராட்டை எதிர்பார்க்கிறார்கள்; அது கிடைக்கும் போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். எனவே, பாராட்டக் கற்றுக்கொள்வது வாழ்க்கையில் மிக முக்கியமான பண்பாகும். பாராட்டு என்பது வெறும் சொற்கள் அல்ல; அது மனிதர்களை இணைக்கும் பாலம். நன்றி என்பது ஒரு நல்ல பழக்கம் மட்டுமல்ல; அது மனிதநேயத்தை வளர்க்கும் உயர்ந்த பண்பு.

நாம் அன்றாட வாழ்க்கையில் நன்றி கூறவும் உண்மையாகப் பாராட்டவும் தொடங்கினால், நம்மைச் சுற்றியுள்ள உலகமே இனிமையாக மாறும். ஒரு நல்ல பாராட்டு ஒரு நல்ல மனிதரை உருவாக்கும்; பல நல்ல மனிதர்கள் ஒரு நல்ல உலகை உருவாக்குவார்கள்.

logo
Kalki Online
kalkionline.com