மௌனம் காக்கும் மனிதர்கள் ஏன் அதிகம் வெற்றி பெறுகிறார்கள் தெரியுமா?

வாக்குவாதங்களை வெல்வதை விட, மன அமைதியைக் காப்பதே உண்மையான புத்திசாலித்தனம். மௌனத்தின் ரகசியங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!
A Quiet Man | Power of silence
A Quiet Man | Power of silenceImg credit: AI Image
Updated on

பதிலுக்கு பதில் பேசுபவர்கள் அறிவாளியும் அல்ல; மௌனமாய் விலகி நிற்பவர்கள் முட்டாளும் அல்ல! இந்த வாசகம் வாழ்க்கையின் முதிர்ச்சியையும், பக்குவத்தையும் உணர்த்தும் ஆழமான தத்துவமாகும். பதிலுக்கு பதில் பேசுவது கோபத்தையும், மௌனமாக விலகி நிற்பது பொறுமையையும் காட்டுகிறது. மௌனம் (power of silence) பெரும்பாலும் பலவீனம் அல்ல; அது ஒரு சிறந்த ராஜதந்திரம் மற்றும் மன அமைதிக்கான வழியும் கூட.

எதற்கெடுத்தாலும் உடனடியாக எதிர்வினை ஆற்றுபவர்களால் எதையும் சாதிக்க முடியாது. ஏனெனில் அது பல நேரங்களில் தேவையற்ற வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும். ஆனால் அதே சமயம் சூழலைப் புரிந்து கொண்டு மௌனமாய் விலகி நிற்பது நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்க விரும்பாத முதிர்ச்சியாளர்களால் தான் முடியும். நம்மை காயப்படுத்துபவர்களைக் கூட புன்னகையுடன் கடந்து செல்வது தேவையற்ற மன உளைச்சலைத் தராது; நம் மன அமைதியை காக்கும்.

பதிலுக்கு பதில் பேசுவதோ, கோபப்படுவதோ எதையும் சாதித்து விடாது. எனவே தேவையில்லாத விவாதங்களில் இருந்து விலகி இருக்கக் கற்றுக் கொண்டால் கோபதாபங்கள் எழாது. எதையும் இழக்க வேண்டி வராது. எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக அணுகத் தெரிந்தால் போதும். பதிலுக்கு பதில் பேசுபவர்கள் பொதுவாக தங்களை நிரூபிக்க வேண்டும் என்ற ஆவேசத்திலோ அல்லது கோபத்திலோ பேசுவார்கள். இது அறிவான செயல் அல்ல.

இப்படி உணர்ச்சி வசப்பட்டு பேசுவதால் பல நேரங்களில், பின்பு அதை நினைத்து யோசித்து வருந்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். மௌனமாய் விலகி நிற்பது தான் சிறந்தது. மௌனம் காப்பது ஒன்றும் கோழைத்தனம் அல்ல. இது சூழ்நிலையை கையாள்வதற்கான முதிர்ச்சியான முடிவாகத்தான் இருக்கும். நம்மை காயப்படுத்துபவர்களைக் கண்டு கோபப்படாமல், புன்னகைத்து கடந்து செல்வதே புத்திசாலித்தனம்.

பதிலடி கொடுப்பது ஒன்றும் திறமை அல்ல. சில நேரங்களில் பேசாமல் மௌனம் காப்பதும் திறமையை வெளிப்படுத்தும். எந்த இடத்தில் பேச வேண்டும்; எந்த இடத்தில் மௌனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பதே உண்மையான புத்திசாலித்தனம்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையை மாற்றும் A to Z சூத்திரம் - வெற்றிக்கான ஒரே வழி இதுதான்!
A Quiet Man | Power of silence

எல்லா விவாதங்களுக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. சில நேரங்களில் மௌனமே சிறந்த பதிலாக இருக்கும். மன நிம்மதி வேண்டுமென்றால் சில இடங்களில் குருடாகவும், சில இடங்களில் செவிடாகவும், பல இடங்களில் ஊமையாகவும் இருக்கப் பழக வேண்டும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து அமைதியாக இருப்பதே உண்மையான முதிர்ச்சியும் அறிவாற்றலும் ஆகும்.

சூழ்நிலையின் ஆழம் உணர்ந்து தர்க்கம் செய்வதை விட அமைதி காப்பவர்கள் பலவீனமானவர்கள் அல்ல; மனமுதிர்ச்சி மற்றும் பொறுமையின் அடையாளமாகத் திகழ்பவர்கள். கோபத்திலோ அல்லது பழிவாங்கும் எண்ணத்திலோ, உடனுக்குடன் பதிலடி கொடுப்பது தற்காலிகமாக திருப்தியைத் தந்தாலும் அது சிறந்த அறிவாளிக்கான இலக்கணம் அல்ல. கிருஷ்ணர் உத்தவருக்குக் கூறியது போல சூழ்நிலையை சமாளிக்கும் திறனே முக்கியம். உணர்ச்சி வசப்பட்டு பேசுவதை விட நிதானத்தை கையாள்வது சிறந்தது என்பது உண்மைதானே நண்பர்களே! 

logo
Kalki Online
kalkionline.com