

இந்தியாவின் தேசிய கீதமான 'ஜன கண மன' பாடலை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர் தன்னுடைய ஓய்வு நேரங்களில் படகு வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கி படித்து ஓய்வு பெறும் பழக்கம் கொண்டவர். ஒரு நாள் படகு வீட்டில் இரவு நேரத்தில் இருந்த போது குரோஸ் என்ற அறிஞர் எழுதிய 'அழகியலின் தத்துவம்' என்ற நூலை படித்துக் கொண்டிருந்தார்.
ஏரியில் அமைந்த படகு வீட்டில் குளிர்ந்த காற்றும், அடர்ந்த மரங்களும் ரம்மியமான சூழலை உருவாக்கி இருந்தன. அவர் படித்துக் கொண்டிருந்ததோ அழகியலின் தத்துவம் நூல். இந்த நிலையில் அழகு உள்ளே இருக்கிறதா! வெளியே காணப்படுகிறதா! என்ற பல்வேறு சிந்தனைகளுடன் தாகூர் படித்துக் கொண்டிருந்தார். படித்து முடித்த பிறகு விளக்கை அணைத்துவிட்டு தாகூர் தூங்கச் சென்று விட்டார்.
விளக்கை அணைத்ததும் நிலவின் மெல்லிய ஒளி ஜன்னல்களின் துவாரங்களின் வழியாகவும், கதவின் இடைவெளி வழியாகவும் உள்ளே பாய்ந்தது. இதைப் பார்த்த தாகூர் அந்த ஒளியின் அழகில் ஒரு சில நிமிடங்கள் தன்னையே மறந்து படகு வீட்டின் வெளியே மெதுவாக வந்து பார்த்தார்.
அழகிய மரங்களின் அசைவும், அழகிய வெண்ணிலாவின் ஒளியும் அந்த இரவை அழகாக்கியது. தன்னை மறந்த தாகூர் புதிய உலகில் பிரவேசித்து மனம் தெளிவு பெற்றார். கிரேஸின் புத்தகத்தில் அழகை பற்றி படித்துக் கொண்டிருக்கின்றேனே! ஆனால் இங்கே நேரடியாக அழகின் பரிமாணம் கொட்டு கிடக்கிறதே என பிரமித்து, வேகமாக தன் அறைக்கு சென்று காகிதங்களை எடுத்து அந்த நிலவொளியில் அற்புதமான ஒரு வரியை எழுதினார்.
"என்னைச் சுற்றிலும் அழகானது முழுவதுமாக பரந்து விரிந்து இருக்கிறது. ஆனால் சிறிய விளக்கானது அதை தடுத்துக் கொண்டிருந்தது . விளக்கின் ஒளியால் நிலவின் வெளிச்சம் நுழைய முடியவில்லை" என்று அழகாக எழுதியிருந்தார்.
இந்த அழகான வரியில் 'விளக்கு' என்பது நமது அகங்காரம் 'நிலவொளி' என்பது பேரறிவு என குறிப்பிட்டு, நமது அகங்காரம் பல சமயங்களில் பேரறிவினை பெறவிடாமல் மறைத்து விடுகின்றது. நம்மை விட்டு அகங்காரம் செல்லும்பொழுது தான் அறிவு புலப்படுகிறது என்ற வாழ்க்கையின் தத்துவத்தை அழகாக எழுதியிருந்தார்.
நம்மால் தீர்க்க முடியாது என நினைத்த பல பிரச்னைகளுக்கான தீர்வு பல சமயங்களில் நம் அருகிலேயே இருந்தாலும் நம் கண்களுக்கு தெரிவதில்லை. யாரோ ஒரு எளிய மனிதரின் அறிவுரை சில சமயங்களில் நமக்கு தீர்வாக அமையும். ஆகவே அகங்காரத்தை விட்டு ஆழமாக சிந்தித்தால் பாதை தெளிவாகும்.