தோல்விக்கான காரணமும், வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளும்!
பெரும்பாலானவர்கள் தங்கள் முயற்சி தோல்வியடைந்தால் மனம் தளர்ந்து விடுவார்கள். சிலர் தோற்றுப் போவதற்கு பயப்படுவார்கள். தோல்விக்கான காரணங்களையும் வெற்றி பெறுவதற்கான வழிமுறை களையும் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
தோல்விக்கான காரணங்கள்;
1. ஒருவர் தன்னுடைய முயற்சியில் தோற்று விட்டால் இத்தோடு தன் எதிர்காலம் அவ்வளவுதான். வாழ்க்கையே முடிந்து விட்டது என்று அஞ்சுவார்கள். மனதில் சோகம் பதட்டம் மன அழுத்தம் ஆத்திரம் போன்ற உணர்வுகள் உண்டாகிறது. அவை மனரீதியாக அவர்களை பலவீனமாக்குகிறது.
தோல்வி மனப்பான்மையை மறக்காமல் மனதில் இருத்தி வைப்பதால் மீண்டும் மீண்டும் தோல்வியை தழுவுகிறார்கள். முதல் தோல்வியிலிருந்து மீளாமல் மனப் பதற்றத்துடனே மீண்டும் முயல்வதால் இந்த தோல்வி நிகழ்கிறது.
3. தான் எதற்கும் லாயக்கு இல்லை என்கிற மனப்பான்மை சிலருக்கு தோற்றதும் வந்து விடுகிறது. அவர்கள் ஆழமாக நம்பத் தொடங்குகிறார்கள். மனதில் கடந்த காலத்தை நினைத்து ரீவைண்ட் செய்து செய்து சோர்ந்து போகிறார்கள்.
4. தோல்வியின் மீது இருக்கும் பயம் காரணமாக அவர்களது தன்னம்பிக்கை தளர்ந்து போகிறது. மீண்டும் முயல்வதற்கு தைரியம் வருவதில்லை. முயற்சியில் தோல்வியும் ஒரு அனுபவம் தான் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
5. தோல்வி அடைந்தவுடன் மனச்சோர்வு கவலை வருத்தம் போன்ற உணர்வுகள் சூழும். சிலர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இந்த உணர்வுகள் தங்களை மேலும் ஆக்கிரமிக்க செய்வார்கள். தோல்வியில் இருக்கும்போது தனிமை தீர்வு அல்ல.
வெற்றிக்கான வழிமுறைகள்;
1. தோல்விகளை எதிர் கொள்ளும்போது இது வாழ்வில் சகஜம் என்கிற மனப்பான்மையை கற்றுக்கொள்ள வேண்டும். சிலர் தேர்வு, காதல், திருமண வாழ்க்கை போன்றவற்றில் தோற்றுப் போகும் போது மனமுடைந்து விடுகிறார்கள். வாழ்க்கையில் எப்போதும் மாற்று என்று ஒன்று உண்டு. இதைவிட நல்ல வேலையோ வாழ்க்கைத் துணையோ கிடைக்கும் என்கிற நம்பிக்கை வர வேண்டும்.
2. வாழ்க்கை பல அற்புதங்களை நிகழ்த்தக்கூடியது. அடிக்கடி எரிமலை குழம்பு வெடிக்கும் ஜப்பானிலும் சுனாமி வந்து போகும் இந்தோனேஷியாவிலும் நம்மை போன்ற மக்கள்தான் வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கைக்கு அஞ்சுவதில்லை. நாம் ஒரு சிறிய தோல்விக்கு போய் பயப்படுகிறோமே என்று எண்ணும் போது தோல்வி மீது பயம் வராது.
3. தோல்வி என்பது ஒரு ஆசான் மட்டுமே. அதில் இருந்து நல்ல பாடங்களையும் அனுபவங்களையும் கற்றுக்கொண்டு மீண்டும் முயற்சி செய்யும்போது முன்னர் செய்த தவறுகளை கவனமாக தவிர்க்க வேண்டும்.
4. எதனால் தோல்வி ஏற்பட்டது என்பதை அமைதியாக சிந்தித்தால் அதற்கான விடை கிடைக்கும். முயற்சியில் இன்னும் தேவைப்படுபவை எவை என்பதை ஆழமாக யோசித்தால் ஒரு தெளிவு கிடைக்கும். அவற்றை ஒரு பட்டியல் போட்டுக் கொள்ள வேண்டும்.
5. அந்தப் பட்டியலின்படி புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவோ அல்லது புதிய ஆலோசனைகளை கேட்டு தெரிந்து கொள்ளவோ வேண்டும். தகுந்த நபர்களை தேடிச் சென்று அவர்களின் வழிகாட்டுதலை கேட்டுப் பெற வேண்டும்.
6. தோல்வியில் சோர்ந்து போவதை விட மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டால் அது உற்சாகமாக வேலை செய்ய உதவும். மனது மகிழ்ச்சியாக இருக்கும் போது செய்யும் செயலும் சிறப்பாக இருக்கும். விளைவுகளும் பயனுள்ளவைகளாக இருக்கும்.