மகிழ்ச்சியைத் தேடுவதென்பது உலக அளவில் அனைவரது விருப்பமாகவே உள்ளது. ஆனால் உண்மையில் மகிழ்ச்சி என்றால் என்ன? அதை நம் வாழ்வில் எப்படி ஏற்படுத்திக் கொள்வது?.
சமீபத்திய ஆண்டுகளில் உளவியல் துறையால் மகிழ்ச்சியின் அறிவியல் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒரு நபரின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கும் விஷயங்கள் என்ன என்பதை சொல்ல முடியும். இந்தப் பதிவில் மகிழ்ச்சியின் அறிவியல் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.
மகிழ்ச்சி என்றால் என்ன?
மகிழ்ச்சி என்பது ஒரு நபருக்கு ஏற்படும் கணநேர இன்பத்தை விட அதிகமாக இருப்பதாகும். உளவியலாளர்கள் மகிழ்ச்சியை வாழ்க்கையின் ஒட்டுமொத்த திருப்திநிலை என்று வரையறுக்கின்றனர். இது நேர்மறை உணர்ச்சி, வாழ்க்கையின் நோக்கம் மற்றும் அர்த்தம் சார்ந்த விஷயங்களை பூர்த்தி செய்வது, உறவுகளை வளர்ப்பது மற்றும் சாதனை புரிவது போன்ற தனிப்பட்ட வளர்ச்சியின் எல்லா வகையான உணர்வுகளையும் உள்ளடக்கியதாகும்.
மரபியல் மற்றும் சூழ்நிலைகளின் பங்கு: ஒரு நபரின் வருமானம், சமூக அந்தஸ்து, வாழ்க்கை சூழ்நிலைகள் ஒருவரது மகிழ்ச்சியை நிர்ணயம் செய்வதாக சொல்லப்படுகிறது. நமது மகிழ்ச்சிக்கு 50 சதவீதம் மரபணுவே காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன. அதே நேரம் வெறும் 10 சதவீதம் மட்டுமே வெளிப்புற சூழ்நிலைகள் காரணமாக உள்ளன. மீதமுள்ள 40% நமது கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்கள் மற்றும் நமது மனநிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
நேர்மறை உணர்வு: நேர்மறை உணர்வு இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியும். மனநிறைவு, மகிழ்ச்சி, அன்பு போன்ற உணர்வுகளை அனுபவிப்பது, அந்தந்த தருணங்களில் மட்டுமல்லாமல், நமது உளவியல் மற்றும் உடல் ஆரோக்கியத்திலும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துமாம். குறிப்பாக நாம் நமக்குப் பிடித்த விஷயங்களை செய்யும்போது, நேர்மறை உணர்வால் அதிக மகிழ்ச்சி ஏற்படுவதாக அறிவியல் சொல்கிறது.
உறவுகள்: குடும்பம், நண்பர்கள், வாழ்க்கைத் துணை மற்றும் சமூக உறவுகள் நமக்கு உணர்வுபூர்வமான ஆதரவைக் கொடுப்பதால், வாழ்க்கையின் ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கு உறவுகள் பங்களிக்கின்றன. எனவே அர்த்தமுள்ள உறவுகளை வளர்ப்பது, குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது போன்றவை உங்களது மகிழ்ச்சியை மேம்படுத்தும்.
வாழ்க்கையை ஏதோ ஒரு குறிக்கோளுடன் வாழ்வது மகிழ்ச்சியாக இருப்பதற்கு முக்கியமானது. உங்களது மதிப்பை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபடுவது, தனிப்பட்ட வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது மற்றும் ஏதோ ஒரு செயலை தைரியமாக செய்வது போன்றவை உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்க பெரிதளவில் உதவும். இதன் மூலமாக நமது ஒட்டுமொத்த நல்வாழ்வும் மேம்படும் என சொல்லப்படுகிறது.