
அந்தக்காலத்தில் ஆரோக்கியமான உடலைப் பெற்று 100 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர்கள் நிறைய பேர் உண்டு. அவர்கள் கூறிச்சென்ற வயதின் ஆரோக்கிய ரகசியங்களை நாமும் பின்பற்றினால் நூறு வயதுக்கு மேல் இல்லை என்றாலும் இருக்கும் வரை ஆரோக்கியமாக வாழலாம்.
இதோ 103 வயது வரை வாழ்ந்த பெங்களூரை சேர்ந்த பொறியியல் மேதை டாக்டர் விஸ்வேஸ்வரய்யா கூறிய 100 ஆண்டுகள் வாழத் தேவையான டிப்ஸ்கள் இங்கு. யோசனைகள் அவருடையது பின் வரும் ஆலோசனை நம்முடையது.
எப்போதும் மகிழ்ச்சியாக இரு
சிலர் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். அவர்களுடன் இருந்தால் நாமும் மகிழ்ச்சியாக இருப்பது போலவே உணர்வோம். அவர்கள் எது நடந்தாலும் அந்தந்த நிமிடங்களிலேயே மறந்துவிட்டு மனதளவில் மகிழ்ச்சியுடன் இருப்பதால் ஆரோக்கியத்துடனும் இருப்பார்கள்.
அளவோடு சாப்பிடு
அமிர்தமே என்றாலும் அளவோடு உண்டால்தான் அதில் பயம் இருக்கும். தற்போது மேலைநாட்டு உணவுகளில் நாக்கு அடிமைப்பட்டு போனதால் தொலைக்காட்சி அல்லது செல்போனை பார்த்தபடியே அதிக அளவு உட்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. இதை விடுத்து அளவோடு சாப்பிட பழகுவோம்.
மனசாட்சிக்கு விரோதமான செயலை செய்யாதே
எதற்கு பயப்படவில்லை என்றாலும் நம் மனசாட்சிக்கு நாம் பயப்பட்டே தீரவேண்டும். ஒரு குற்ற செயல் செய்தால் சமூகம் ஏசுவதை விட நம் மனசே நம்மை தூங்கவிடாமல் செய்துவிடும். ஆகவே மனசாட்சிக்கு விரோதமான செயலை செய்யாமல் ஒழுக்கமுடன் வாழ்வதே பிற்கால வாழ்க்கை சுகமாக இருக்க உதவும்.
நாள்தோறும் குறித்த நேரத்தில் தூங்கச் செல்
தற்போது செல்போன் மற்றும் தொலைக்காட்சி நமது இரவு நேரங்களை ஆக்கிரமித்து தூங்கவிடாமல் செய்கின்றன. ஒரு மனிதனின் ஆயுள் நீடிக்க வேண்டும் என்றால் அவசியமான அளவு தூக்கம் நிச்சயம் தேவை. ஆகவே சரியான நேரத்திற்கு தூங்க சென்று சரியான நேரத்தில் விழிப்பது ஆரோக்கியத்துக்கு உதவும்.
கடன் வாங்காமல் வருமானத்துக்குள் வாழ்க்கை நடத்து
பெருகிவரும் நாகரிக வசதிகளுக்கு தேவைப்படும் கடன்களை வாங்கும் முன் யோசிக்க வேண்டும். திரும்ப கட்ட முடியுமா? அதற்குண்டான வருமானம் நம்மிடத்தில் இருக்கிறதா? என்று சிந்திக்க வேண்டும். கடன் என்பது அத்தியாவசிய தேவைக்கு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அநாவசியமான ஆடம்பர செலவுகளுக்கு இருந்தால் அதுவே நமக்கு எமன் ஆகிவிடும். முடிந்தவரை வருமானத்துக்குள் வாழ்க்கை நடத்துவதே நிம்மதி தரும்.
சம்பாதிக்கும்போது சேமி
எவ்வளவு பணம் வந்தாலும் ஏதோ ஒரு தருணத்தில் அத்தனையும் காலியாகிவிடும் சூழலும் வரும். இது போன்ற நெருக்கடிகளை தவிர்க்க நாம் சம்பாதிக்கும்போதே அதிலிருந்து ஒரு பங்கை எடுத்து வங்கியிலோ அல்லது வேறு முதலீடுகளிலோ சேமித்து வைப்பது பயன் தரும்.
எப்போதும் சுறுசுறுப்புடன் இரு
களைப்பு ஏற்படும் வரை வேலை செய். மனித வாழ்க்கை என்பது சோம்பித்திரிவதற்கு அல்ல. எப்போதும் ஏதோ ஒரு செயலை செய்து தேடலுடன் இருந்தாலே மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். அத்துடன் ஆக்கபூர்வமான செயல்களில் கவனம் செலுத்துவதும் களைப்பு ஏற்படும் வரை ஓயாமல் உழைப்பதும் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த வழி.
ஒரு குறிக்கோளை நோக்கி வாழ்க்கையை நடத்து
'பிறந்தோம் வளர்ந்தோம் இறந்தோம்' என்று எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் வாழாமல் நம் திறமைக்கேற்ற சூழலுக்கேற்ற ஏதேனும் ஒரு குறிக்கோளை நிர்ணயித்து அதை நோக்கி நமது வாழ்க்கை அமைந்தால் சாதித்தோம் என்ற மனத்துருப்தியுடன் நம் பெயரை இந்த உலகில் பதித்து நம் சந்ததிக்கு உதாரணமாகலாம். இந்த குறிக்கோள் அல்லது கனவு நமது ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று.