

மனிதர்களாகிய நாம், நமது வாழ்க்கையில் கிடைக்கும் அனைத்தையுமே நிலையானது, நிரந்தரமானது என நினைத்தபடியே வாழ்நாளைக் கடத்துகிறோம். பொதுவாகவே எதுவுமே நிரந்தரம் கிடையாது. எல்லாமும் நிரந்தரமாகிவிடும் என்ற நோக்கத்தில், ஒரே குறிக்கோளோடு வாழ்ந்து வரும் நிலையில், ஏதாவது ஒரு தேவையற்ற நிகழ்வு வாழ்க்கையில் நடந்துவிட்டால், அதனால் சமுதாயத்தில் நாம் பலவீனப்படுத்தப்படும்போது அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பலரிடம் இருப்பதில்லை. அதனால் ஏற்படும் அவமானமும் வலியும் சொல்லிமாளாதது. பலரும் பலவிதமாக நம்மைப் பேசிவிடுவார்கள்.
ஆனால், எந்தப் பேச்சுகளையும் அவமானத்தையும் வலியாக எடுத்துக் கொள்ளவே கூடாது. இங்கே எல்லாமும் சுயநலமே! கைதூக்கிவிடும் நபர்களைவிட, கீழே தள்ளிவிடுபவர்களே அதிகம். அந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலிக்கும்; ஆனால் வலிக்காதது போலவே வாழ்ந்தாக வேண்டுமே!
இதைத்தான் "சாட்ஷெல்பெர்க்" எனும் அறிஞர் தனது கூற்றாக, "உங்கள் தலையைத் தொங்கப் போடாதீர்கள்; என்னால் முடியாது என எண்ணி மருகாதீர்கள்; இன்னொரு வழி இருக்கும் என்பதைக் கண்டறியுங்கள்!" எனச் சொல்லியிருப்பார். அதேபோலச் சிறிய விஷயங்களையெல்லாம் பெரிதுபடுத்தாமல், அதிகத் தாக்கமும் முக்கியத்துவமும் கொடுக்காமல், "இதுவும் கடந்து போகும்" என நினைத்து மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள்.
நடக்கக் கூடாத தவறு நடந்துவிட்டது; அது எதனால் என்பதைத் தெளிந்து, குடும்பத்தினர்களுடன் கலந்து பேசி ஒரு தீர்க்கமான முடிவுக்கு வாருங்கள். மெகா தொடருக்கு விளம்பர இடைவேளை விடுவது போல இழுக்காமல், அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள். வாழ்வின் வீண்பழியை "விதிவிட்ட வழி" என நினைப்பதோடு, அதை கர்மா என எண்ணி மேலே மேலே படியேறி அதைக் கடந்துவிடுவதே நல்லது.
அதேபோல வாழ்க்கையில் எந்த நிலையிலும், எந்தத் தருணத்திலும் 'சந்தேகம்' என்பதே வரக்கூடாது. அது பல சங்கடங்களை நமக்கு உதவாத பரிசாகக் கொடுத்துவிடும். அது ஒரு தீராத நோய். "இந்தச் சம்பவம் நடந்ததற்கு யார் காரணமாக இருக்கக்கூடும்? இவரா? அவரா?" என்ற நிலைப்பாடே வேண்டாம்.
இதைத்தான் ஷேக்ஸ்பியர் தனது கருத்தாக, "ஒரு மனிதனின் மிகப்பெரிய எதிரி சந்தேகம்தான்; அது உங்களால் எட்டக்கூடிய வெற்றிகளைக் கூட மறைத்துவிடுகிறது!" எனச் சொல்லியிருப்பார். ஆகவே, ஒரு விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்துவிட்டால், அதனால் ஏற்படும் அவமானங்களையும், அந்தச் சம்பவத்திற்குப் பின்னால் துணைபோனவர் யார் என ஆராய்ச்சி செய்து சந்தேகப்படாமலும் இருக்க வேண்டும்.
நேர்மறையான சிந்தனைகளோடு, இறைவழிபாட்டின் மூலமாக, மௌனமாகத் தொடரும் வாழ்க்கைப்பாதையில் (Secret to happy life) கரடுமுரடான பள்ளமான இடங்களில் கால் வைக்காமல், மனோதிடம் மற்றும் உறுதி தளராமல், "நமது வாழ்க்கை நமக்கானதே" என நினைத்து வாழ்ந்து பாருங்கள்.