ஒரு மனிதனின் அர்த்தமுள்ள வாழ்வின் அடையாளமாக திகழ்வது அவனுடைய 'உடல் ஆரோக்கியமே'! (1) நோய்கள் வந்து பயத்தில் வாழ்வதை விட அது வராமல் தடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை. உங்கள் ஆரோக்கியத்திற்கு இவை மூன்றுமே போதும். அவை சுறுசுறுப்பாக செயல்படும் நீரோட்டமான உடல், போதிய சத்துள்ள உணவு, இரவில் நிம்மதியான தூக்கம் இவையே உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
உலகில் இருப்பவர்கள் எல்லோரும் உங்கள் பக்கம் இருந்து, உங்களின் செயல்கள் அனைத்தையும் கை தட்டி பாராட்ட மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். (2) வாழ்வில் 'ஏற்றுக் கொள்வது' மிகவும் முக்கியமானது. அது உங்கள் பலவீனங்கள் ஆகட்டும், தோல்விகள் ஆகட்டும், தவறுகள் ஆகட்டும், எதுவாக இருந்தாலும் சரி.
வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது முக்கியமானது தான். (3) பணத்தை விட உங்கள் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது மிகவும் மதிப்புமிக்கது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பணத்தை தேடுவதற்குள் நிம்மதி தொலைந்து விடுகிறது. நிம்மதி தேடும்பொழுது வாழ்க்கை முடிந்து விடுகிறது.
பணமும், பதவியும் இறைவன் கொடுத்த வாய்ப்பு அதனை கொண்டு அதிகார தோரணையில் (4) அடாவடியாக பேசித்திரிவதை விட அமைதியாக இருப்பதே மேலானது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அன்பான சொல் மட்டுமே ஒருவரின் மனநிலையை மாற்றும். துன்பத்தை விலக்கும். இல்லாததை அடைவதில் இல்லை மகிழ்ச்சி. இருப்பதை உணர்தலே மகிழ்ச்சி.
உலகில் சிறந்த நல்ல நண்பர்கள் அளவில் குறைவே, எனவே அவர்களுடன் முடிந்த மட்டும் நெருக்கமாக இருங்கள். (5) நண்பர்களை விட்டு பிரிந்து விடாதீர்கள். வாழ்க்கையில் உங்களை அலட்சியமாக நினைப்பவர்களை விட்டு துணிந்து விலகுங்கள். உங்களைப் பொக்கிஷமாக நினைப்பவர்கள் இருப்பார்கள். அவர்களுடன் இணைந்து பயணத்தை தொடங்குங்கள் வாழ்க்கை நலம்பெறும்.
வேண்டாம் என எண்ணினாலும் வராமல் இருக்கப் போவதில்லை துன்பங்கள்; வேண்டும் என்று எண்ணினாலும் எளிதாக கிடைக்கப் போவதில்லை இன்பங்கள். (6) நமக்கானது மட்டுமே நமக்கு வந்து சேரும் என்று ஆர்ப்பாட்டம் இல்லாமல், பகட்டு இல்லாமல் அமைதியாக இருக்கும் மனமே உங்கள் வாழ்க்கையின் வெற்றி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை நம்பாதீர்கள். உங்களின் நல்ல பழக்க வழக்கங்களே உங்கள் எதிர்கால வாழ்க்கையை நல்லதாக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்; புரிந்து கொள்ளுங்கள். (7) உங்கள் வெற்றியின் ரகசியம் உங்களுடைய தினசரி செயல்பாட்டின் மூலமே நிர்ணயம் செய்யப்படுகிறது. வாழ்க்கை உங்களை ஏமாற்றுவதில்லை. அளவுக்கு அதிகமான உங்கள் எதிர்பார்ப்பே உங்களை ஏமாற்றுகிறது.
வாழ்வில் அந்தஸ்து தேடி அதன் பின்னே ஓடாதீர்கள். திறமை மற்றும் ஒழுக்கத்தின் பின்னே ஓடுங்கள். (8) நல்லது ஒரு போதும் வீணாகாது; கெட்டது ஒரு போதும் தப்பாது. இதுவே கர்மாவின் நித்திய நீதி.
இக்கட்டான காலகட்டத்தில் யாரும் உங்களை காப்பாற்ற வரமாட்டார்கள். அதிலிருந்து மீண்டு வரும் முழுப் பொறுப்பும் உங்களது தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். (9) நிறை குறை கலந்தது தான் வாழ்க்கை. அதில், நிறைகளை மட்டுமே நினைவில் கொண்டால் எதையும் வெல்லலாம்.
முதுமை காலத்தில் எளிமையாக இருப்பது தான் சிறந்தது. (10) முதுமையில் எளிமைக்கே மதிப்பு. எளிய உணவு, எளிய வாழ்க்கை முறையே உங்கள் வாழ்நாளை அதிகரிக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.