'இல்லை' சொல்ல தயங்காதீர்கள்: நரியும் மயிலும் சொல்லும் சுயமரியாதை பாடம்!

Fox and Peacock - Self-Respect Story
Fox and Peacock - Self-Respect StoryCredit: AI image
Updated on

ஒருவர் உங்களிடம் உதவி என்று கேட்கும்போது, 'முடியாது' என்று சொல்லத் தயங்கும் நபரா நீங்கள்?

அன்பு என்பது மற்றவர்களுக்காக நம்மை இழப்பதல்ல; நம்மைத் தொலைக்காமல் மற்றவர்களை நேசிப்பதே உண்மையான அன்பு. சில நேரங்களில் நாம் சொல்லத் தயங்கும் ஒரு சிறிய 'வேண்டாம்' என்ற வார்த்தை, நம் வாழ்நாள் முழுமைக்குமான நிம்மதியையும் அடையாளத்தையும் காப்பாற்றும். அந்த உண்மையை விளக்கும் ஒரு குட்டிக்கதை (Self-Respect Story).

ஒரு காட்டில் நரியும் மயிலும் நண்பர்களாக இருந்தன. அந்த மயிலுக்கு நரியை மிகவும் பிடிக்கும்; நரி என்ன கேட்டாலும் மயில் செய்துகொடுக்கும். அப்படியிருக்கையில், ஒருநாள் நரி மயிலிடம் வந்து அதனுடைய இறகு ஒன்றை கேட்டது. மயிலைப் பொறுத்தவரையில் அது வெறும் இறகாக இருந்தாலும், அதைப் பிய்த்து எடுக்கும்போது வலிக்கத்தான் செய்யும். இருந்தாலும், மயிலால் நரியிடம் 'No' என்று சொல்ல முடியவில்லை.

"சரி எடுத்துக்கொள், ஆனால் எனக்கு வலிக்காமல் பிய்த்துக்கொள்," என்று மயில் சொன்னது. நரியும் ஒரு இறகைப் பிய்த்து எடுத்துக்கொண்டது. அடுத்தடுத்த நாட்களில், மயிலிடம் நரி ஒவ்வொரு இறகாகக் கேட்டு வாங்கிக்கொண்டது.

"எனக்கு வலிக்கிறது, பிய்க்க வேண்டாம்," என்று மயில் நரியிடம் சொல்லியிருக்கலாம். ஆனால், அப்படிச் சொன்னால் நரியின் நட்பு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம் அதற்கு இருந்தது. அதனால் தன் வலியைப் பொறுத்துக்கொண்டு நரிக்கு உதவியது. இப்படியே இறகுகளைப் பிய்த்துப் பிய்த்து, ஒருநாள் மயிலிடம் ஓர் இறக்குகூட இல்லாமல் போனது. என்றைக்கு மயிலிடம் இறகுகள் தீர்ந்தனவோ, அன்றிலிருந்து மயிலைப் பார்க்க நரி வருவதில்லை.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

யார் ஒருவரிடம் நாம் 'No' சொல்லத் தயங்குகிறோமோ அல்லது நம்மை விட்டுப் போய்விடுவார்களோ என்று பயந்து எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கிறோமோ, அந்த நபர் இறுதியில் நம்மை விட்டுவிட்டுத்தான் போவார். அதற்கு நாம் முதலிலேயே எச்சரிக்கையாக இருக்கலாம்; வலியில்லாமல் இருக்கலாம். குறைந்தது, நம் இறகுகளையாவது பாதுகாத்துக் கொள்ளலாம்!

இதையும் படியுங்கள்:
'நான் இல்லனா எதுவும் நடக்காது' - இந்த எண்ணம் ஆபத்தானதா?
Fox and Peacock - Self-Respect Story

சுயநலமான மனிதர்களுக்கு நீங்கள் செய்யும் தியாகங்கள் ஒருபோதும் நன்றியாகத் திரும்பாது. உங்களிடம் 'இல்லை' என்று சொல்ல ஏதுமில்லாதபோது, அவர்கள் உங்களைத் தேடி வரமாட்டார்கள். எனவே, மற்றவர்களுக்காக உங்களை அழித்துக்கொள்வதை நிறுத்துங்கள். உங்களுக்கு நீங்களே உண்மையாக இருங்கள். சரியான நேரத்தில் சொல்லப்படும் 'No', உங்களை மட்டுமல்ல, உங்கள் அடையாளத்தையும் பாதுகாக்கும்.

logo
Kalki Online
kalkionline.com