

உலகில் அவதரித்த அனைவருமே வாழ்வில் வெற்றி காண முயற்சிப்பதுண்டு. ஆனால், பலருக்கும் வெற்றி எட்டாக்கனியாகத் தான் இருக்கிறது. வெற்றியை அடைய சந்தர்ப்பங்களை எப்படி பயன்படுத்துவது என்பதை எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.
நம் இலக்கு எதுவென்று அறியாமலேயே பலரும் தங்களது வாழ்க்கைப் பயணத்தைக் கடக்கின்றனர். ஏதோ ஒரு சூழலில் நமக்குள் இருக்கும் திறமை நிச்சயமாக ஒருநாள் வெளிப்படும். அதனைக் கண்டறிந்து அந்த வழியில் சென்றால் போதும், நம் இலக்கை நிர்ணயித்து வெற்றிப் பாதையில் பயணித்து விடலாம். ஆனால், நம்முள் இருக்கும் திறனை அறியாமலேயே இங்கு பலரும், நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய, நிற்காது ஓடுகின்றனர். அவ்வப்போது கிடைக்கும் சந்தர்ப்பங்களை சிந்தித்து நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாய்ப்பு நம்மைத் தேடி வராது. நாம் தான் வாய்ப்பைத் தேடிச் செல்ல வேண்டும். சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த உலகில் சாதித்தவர்கள் அனைவரும் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தியவர்கள் தான். ஒருவேளை இவர்கள் கிடைத்த சந்தர்ப்பங்களை கோட்டை விட்டிருந்தால், யாரும் அறியாத சாதாரண மனிதர்களாகத் தான் இருந்திருப்பார்கள்.
அனைவருக்கும் உலகப்புகழ் பெற்ற அறிவியல் மேதை சர்.சி.வி. ராமனைத் தெரியும் அல்லவா! வானம் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது என்பதை கண்டறிந்து, இந்தியாவிற்கு முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்த மாபெரும் விஞ்ஞானி. இவர் முதலில் படித்த பட்டம் அறிவியல் கிடையாது. ஏனெனில் அன்றைய காலத்தில் பி.ஏ., எம்.ஏ. போன்ற பட்டப்படிப்புகள் தான் இருந்தன. இவர் இந்த இரண்டு பட்டப்படிப்புகளையும் சென்னையில் பயின்று, கொல்கத்தாவில் ஏறத்தாழ 15 ஆண்டுகள் பணிபுரிந்தார். ஒருநாள் டிராம் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த ராமன், திடீரென ஒரு அறிவிப்பை பார்க்கிறார்.
“லண்டன் அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதிவித்தொகையுடன் பயில விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்” இது தான் அந்த அறிவிப்பு. அதனைப் பார்த்தவுடன் ஓடும் வண்டியிலிருந்து கீழே குதித்து அப்பொழுதே லண்டனில் பயில விண்ணப்பித்தார்.
அன்று சர்.சி.வி. ராமன் தனது கண்ணில் பட்ட அறிவிப்பை தனக்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டார். ஒருவேளை அன்று அந்த சம்பவம் நடக்காதிருந்தால் இன்று நாம் அவரைப் போற்றி புகழ்ந்திருப்போமா அல்லது இந்தியாவுக்கு நோபல் பரிசு தான் கிடைத்திருக்குமா!
இதிலிருந்து நாம் ஒன்றைத் தெளிவாக புரிந்து கொள்ளலாம். நமக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அல்லது சந்தர்ப்பங்களை காலம் தாழ்த்தாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் சாதாரண மனிதர்களைப் போல நாமும் இருக்க வேண்டியது தான்.
சர்.சி.வி. ராமன் மட்டுமல்ல, இவரைப் போன்ற சாதனையாளர்கள் ஒவ்வொருவருக்குமே ஏதேனும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். அதனை அவர்கள் காலம் தாழ்த்தாமல் பயன்படுத்தியதால் தான், அவர்களை நாம் காலம் கடந்தும் நினைவில் வைத்திருக்கிறோம்.
வாய்ப்புகளைத் தேடுதல் வேண்டும். தேடல் ஒன்றே நமக்கான சந்தர்ப்பத்தையும் உருவாக்கித் தரும். நிகழ்ந்தவற்றை மாற்ற இயலாது; நிகழப்போவதை உங்கள் வெற்றிக்கான இலக்காகக் தீர்மானிக்கலாம் அல்லவா! முயற்சி செய்து கொண்டே இருங்கள்; வாய்ப்பும் வசப்படும்; வெற்றியும் உங்கள் வசமாகும்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here