

நம்மில் பல பேருக்கு தன்னை தானே சிதைத்துக் கொண்ட அனுபவம் இருக்கிறது. அதாவது எப்படி என்றால், சில நேரங்களில் மற்றவர்களை திருத்துவதில் சில பேர் மும்முரமாக இருப்பார்கள். இந்த பயணத்தில் யார் திருந்த வேண்டுமோ அவர்கள் நிச்சயமாக திருந்த மாட்டார்கள்; மாறாக திருத்த முயற்சிப்பவர்கள் மனம் உடைந்து சிதைந்து போவார்கள். நிறைய பேருக்கு இந்த அனுபவம் இருக்கிறது.
சில பேரை மட்டும் தான் நம்மால் திருத்த முடியும் . இந்த குறிப்பிட்ட நபர்களை இனிமேலும் நம்மால் மாற்ற முடியாது மற்றும் திருத்த முடியாது என்று உங்களுக்கு எப்போது தோன்ற ஆரம்பிக்குமோ, அப்போதே நீங்கள் உங்கள் முயற்சியை கை விட வேண்டும். இல்லை, நான் எப்படியாவது மாற்றி விடுவேன் என்று சபதம் எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கினால், நிச்சயமாக சிதைந்து போவது நீங்கள் தான்.
உதாரணத்திற்கு ஒரு கயிறிலோ அல்லது நாடாவிலோ முடிச்சு விழுந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம் அந்த முடிச்சு மணி முடிச்சாக இருந்தால் நாம் எத்தனை அவிழ்க்க முயற்சி செய்தாலும் அது இன்னமும் அதிகமாக இறுகிவிடும். அதை அவிழ்க்க முயற்சிப்பது என்பது ஆகாத காரியம் அதை போலத் தான் ஒரு சில பேரையும் நம்மால் மாற்றவோ திருத்தவோ முடியாது.
அந்த முடிச்சை எத்தனை முயற்சி செய்தாலும் அவிழ்க்க முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் என்ன செய்வோம். மிகவும் போராடி பார்ப்போம்; வரவில்லை எனும் பட்சத்தில் நாம் கத்திரிக்கோலை வைத்து அதை கட் செய்வோம் இல்லையா அதை போல தான்.
நம்முடைய வாழ்க்கையிலும் ஒரு சில பேரை மாற்றவோ திருத்தவோ முடியாது என்று நினைக்கும் பட்சத்தில் அவர்களிடமிருந்து முற்றிலுமாக விலகி இருப்பது நல்லது. ஏனென்றால் நம்மால் அவர்களுக்கு ஒரு பிரச்னை வராது. ஆனால். அவர்களை திருத்தப் போய் நம்மை நாமே அழித்துக் கொள்ள வேண்டி இருக்கும். இத்தகைய செயலானது அவர்களை திருத்துகிறேன் என்று கூறிக் கொண்டு தனக்குத் தானே குழியை தோண்டி கொள்வதற்கு சமம். அந்த படுகுழியில் அவர்கள் எக்காரணத்தை கொண்டும் விழ மாட்டார்கள். அவர்களை திருத்த போய் நாம் தான் சிதைந்து போய் விழுந்து விடுவோம். ஆகவே தயவு செய்து திருத்தவே முடியாது என்று நினைப்பவர்களை எக்காரணத்தை கொண்டும் திருத்த முயற்சி செய்யாதீர்கள். உங்களை நீங்களே சிதைத்து கொள்ளாதீர்கள்.