வாழ்க்கையில் கஷ்டம் என்பது யாருக்குதான் இல்லை? வாழ்க்கை என்பது முற்றிலும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. நாம் அனைவருமே மகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் துன்பமான அனுபவங்களை எதிர்கொள்கிறோம். சில நேரங்களில் கடந்த கால துன்பங்கள் நம்மை ஆழமாக பாதித்து முன்னேற முடியாமல் தடுக்கிறது. இந்தப் பதிவில் கடந்த கால துன்பங்களை மறந்து வாழ்க்கையை சிறப்பாக வழி நடத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றி பார்க்கலாம்.
கடந்த கால துன்பங்களை எதிர்கொள்ளும் யுத்திகள்:
துக்கம், கோபம், பயம் போன்ற உணர்வுகளை மறைக்க முயற்சிக்காமல் அவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள். இத்தகைய உணர்வுகளைப் பற்றி நம்பகமான நபர்களிடம் வெளிப்படையாக பேசுங்கள். அல்லது ஒரு புத்தகத்தில் அவற்றை எழுதி வையுங்கள். இது உங்கள் மனதிற்கு நிம்மதியைக் கொடுத்து வாழ்க்கையை அடுத்த கட்டங்களை நோக்கி நகர்த்தும் தைரியத்தைக் கொடுக்கும்.
ஒருவேளை கடந்த காலத்தில் நீங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்கு நீங்களே தண்டித்துக் கொள்ளாமல், தவறு செய்வது மனித இயல்பு என்பதை ஏற்றுக்கொண்டு அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு முன்னேற முயற்சி செய்யவும்.
எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த உதவியாக இருக்கும்.
தேவையில்லாமல் கடந்த கால துன்பங்களை நினைத்து வருத்தப்படாமல் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள் என்பதை தீர்மானித்து அவற்றை அடைய திட்டமிடுங்கள். இலக்குகளை அடைவதன் மூலம் உங்கள் சுயமரியாதை மற்றும் நம்பிக்கை அதிகரித்து, வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல உதவும்.
எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக இருப்பதைத் தவிர்த்து ஓய்வு நேரங்களில் உங்களுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபடுங்கள். இது மன அழுத்தத்தைக் குறைத்து உங்களது மகிழ்ச்சியையும் அதிகரிக்க உதவும்.
கெட்ட விஷயங்களை நினைத்து வருத்தப்படாமல் உங்கள் வாழ்க்கையில் உள்ள நல்ல விஷயங்களுக்கு நன்றியுடன் இருங்கள். வாழ்க்கையில் நிகழும் சிறுசிறு நன்மைகளில் கூட மகிழ்ச்சியைக் கண்டறிய கற்றுக் கொள்ளுங்கள். குறிப்பாக மற்றவர்களுக்கு உதவி செய்வது மூலமாக உங்கள் வாழ்க்கைக்கான அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
கடந்த கால துன்பங்களை உங்களால் தனியாக சமாளிக்க முடியவில்லை என்றால் ஒரு நல்ல மனநல மருத்துவரின் உதவியை நாடுவதில் தவறே கிடையாது. அவர்கள் உங்களுக்கு ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்கி, வாழ்க்கையில் நல்ல திசையில் பயணிக்க வழிநடத்துவார்கள்.
இந்த விஷயங்கள் அனைத்தையும் நீங்கள் பின்பற்றினால் கடந்த கால துன்பங்களை மறந்து வாழ்க்கையை சிறப்பாக கொண்டு செல்ல முடியும். உங்களுக்கு வாழ்க்கை மீதான நேர்மறை சிந்தனை அதிகரித்து மகிழ்ச்சியான மற்றும் நிறைவான உணர்வைக் கொடுக்கும்.