சாதிக்க நினைப்பவர்கள் வெகு கவனமாக இருக்க வேண்டிய ஒன்று நிமிடங்கள். சில நிமிடம் தானே என்று நிமிடங்கள் வீணாவதை அலட்சியம் செய்யாதவர்களே வெற்றியாளர் ஆகமுடியும்.
நிமிடங்களை வீணாக்குவது என்பது நம்மை நாம் சிறிது சிறிதாக வீணாக்கிக் கொள்கிறோம் என்பது பொருள். நிமிடங்கள் தாம் யுகங்களாக மாறுகின்றன. ஒவ்வொரு நிமிடமும் வாழ்நாளில் விலை மதிக்க முடியாத ஒரு சிறு பகுதி என்பதை உணர வேண்டும்.
உலகத்திலே நாம் எதை இழந்தாலும் மீண்டும் கிடைக்காதது நேரங்கள், நல்ல வாய்ப்புகள், இவைகளில் எதை இழந்தாலும் மீண்டும் கிடைப்பது கடினம் . நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் நேரத்தின் ஒவ்வொரு மணித்துளியும் பொன்னானது. இழக்கக் கூடாதது மானம் மரியாதை மட்டுமல்ல அவற்றைப் பெற உதவும் நிமிடங்களையும்தான்.
ஒரு நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பணி அவருக்கு. அங்குமிங்கும் அலைந்து திரிந்து அவர் நிறுவனத்துக்கு தேவையான ஸ்பான்சர்களை பெறுவதுதான் அவருடைய அன்றாடப் பணி. ஒரு முறை நகரிலேயே பிரபலமான எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் மேனேஜரை சந்திக்க வேண்டி நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தது. அந்த மேனேஜர் இந்த நேரத்தில் இங்கு இருப்பார் அந்த நேரத்தில் சரியாக சென்று பாருங்கள் என்று அந்த மெசேஜில் கூறப்பட்டிருந்தது.
இவரும் உண்மையில் நேர நிர்வாகத்தில் சிறந்தவர்தான். ஆனால் அன்று எதிர்பாராமல் சிக்னலில் மாட்டிக் கொண்டார். ஏதோ ஒரு கட்சி மீட்டிங் என்று கட்சியினர் வழி விடாமல் போக அவரால் குறிப்பிட்ட அந்த நேரத்துக்கு அந்த மேனேஜரை சந்திக்க செல்ல முடியவில்லை. இவர் அங்கு செல்லவும் மேனேஜர் வெளியே வரவும் சரியாக இருந்தது. அப்போது அந்த மேனேஜர் அவரிடம் சொன்ன ஒரு வார்த்தை "நிமிடங்கள் என்பது உயிரை விட மேலானது. உங்களுக்கு நான் தந்த நிமிடம் முடிந்து விட்டது. மீண்டும் அடுத்த முறை அப்பாயின்மென்ட் வாங்கி என்னை வந்து பாருங்கள்" என்று சொல்லிவிட்டு பறந்து விட்டார். இதில் என்ன விசேஷம் என்றால் அவர் குறிப்பிட்டிருந்த நேரத்தை விட இவர் செல்ல ஒரு நிமிடமே அதிகம் ஆகியிருந்தது.
அவருக்கோ நல்லதொரு வாய்ப்பை இழந்துவிட்ட வேதனை. அதுவுமின்றி கம்பெனி முதலாளி என்ன சொல்வாரோ என்ற மனதில் ஒரு கலக்கம். இருப்பினும் அன்று அந்த மேனேஜரிடம் இருந்து நிமிடத்தின் வலிமையை கற்றுக் கொண்டார். அவர் இன்னும் சற்று முன்னதாக வந்திருந்தால் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கும். அதை நழுவ விட்டு விட்டோமே என்று நிமிடத்தின் அருமையை உணர்ந்து கொண்ட அவர் அதன் பின் இன்னும் அதிக கவனத்தை நிமிடங்கள் மீது வைக்கத் துவங்கி விரைவில் தவற விட்ட வாய்பை விட மதிப்பு மிக்க வாய்ப்பை பெற்று மகிழ்ந்தார்.
ஆகவே ஒவ்வொரு மணித்துளியையும் மிகவும் உபயோகமாகச் செலவிட வேண்டிய அவசியத்தில் இன்று நாம் இருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்தால் வெற்றி நிச்சயம்.