வெற்றியோ, தோல்வியோ பெறுகிற பட்டத்தை வைத்தோ பரிசை வைத்தோ தீர்மானிக்கப்படுவதில்லை. மலினமான நோக்கத்துடன் பெறுகிற வெற்றியை விட, மகத்தான நோக்கத்தை மனதில் வைத்து போராடி வியர்வை சிந்தி பெறுகிற தோல்வி உயர்ந்தது. நாம் வெற்றியை தோல்வியின் எதிர்ப்பதமாக பார்ப்பதுதான் நம்முடைய மிகப்பெரிய பிரச்னை. வெற்றி என்பது தோல்வியின் இன்னொரு பக்கமே தவிர முரண் அல்ல. வெற்றி பெறுபவர்கள் மீதே விளம்பர வெளிச்சம் விழுகிறது. அதன் காரணமாக உண்மையான மனிதர்கள் தோற்கடிக்கப்படுவதோடு அவர்களை சீண்டுபவர்கள் யாரும் இல்லை என்ற பரிதாப நிலை உருவாகி விடுகிறது.
வெற்றி இரண்டு வகைப்படும். நீண்ட கால வெற்றி, குறுகிய கால வெற்றி. குறுகிய கால வெற்றியைப் பெறுகிறபோது அதிகப்படியான நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டு இனிமேல் நமக்கு வெற்றியே கிட்டும் என்ற வேகத்தைக் குறைத்துக் கொண்டு நீண்ட கால வெற்றியைத் தவறவிட்டு விடுவார்கள். பணியைப் பொறுத்தே வெற்றி வரையறுக்கப்படுகிறது.
ஒரு மருத்துவருக்கு நோயாளி குணம் பெற்றதைப் பார்க்கிறபோது பெறுகிற மகிழ்ச்சி அதற்கான கட்டணத்தைச் பெறுகிறபோது ஏற்படுகிற மகிழ்ச்சியை விட அதிகம் இருந்தால்தான் அவர் சிறந்த மருத்துவர்.
சிறந்த பொறியாளர் தான் கட்டிய கட்டடம் மற்றவரால். பாராட்டப்படுகிறபோது வெற்றி பெற்றதாகக் கருதுகிறார். ஒவ்வொருமுறை கட்டத்தைத் தாண்டிச் செல்லும் போது வெற்றி பெற்றதாக நினைப்பார். பல பொறியாளர்கள் ஏற்கனவே இருக்கும் வடிவமைப்பை நகலெடுத்து பல கட்டடங்கள் கட்டியிருப்பார்கள். ஆனால் அந்த கட்டடங்களைக் தாண்டிச் செல்லும்போது வெற்றி பெற்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படாது. வெற்றி அடைவதற்கான சரியான வழி ஒன்று உண்டு வெற்றிக்கான பாதையை எளிய குறியீடுகளாக குறித்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு குறியீடும் எட்டக்கூடியதாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும். தாராளமான கால அளவை நிர்ணயித்துக் கொள்வதில் தவறு இல்லை. குறிப்பிட்ட நேரத்தில் ஒவ்வொரு பணியையும் தாண்டுகிறவன் முழு இலக்கையும் எளிதில் அடைந்த விடுகிறான். வெற்றி பெறவேண்டுமென்று நினைப்பவர்கள் பலவற்றை இழக்கக் தயாராக இருக்க வேண்டும். இழப்புகளின் தழும்புகளே வெற்றிகள். பதக்கங்கள் தெரிகிற அளவுக்கு அவற்றின் அடியில் இருக்கும் காயங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. வெற்றியாளர்கள் ஆணவம் கொள்வதில்லை. அதை சமூகத்திற்கு ஒப்படைத்து விடுகிறர்கள். வெற்றி பெற்ற யாரும் நான் செய்தேன் என்று சொல்வதில்லை. நாம் செய்தோம் என்றே கூறுகிறார்கள். எவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும் ஒருவர் அடிக்கடி ஊடகங்களில் அடிபட்டால் சமூகம் அவர்களை உற்று நோக்குகிறது. அப்போது அவர்களை அறியாமல் பதற்றம் ஏற்பட அவர்கள் தவறு செய்யத் தொடங்குகிறார்கள்.
நேரத்தை மதிப்பதும் பொறுமை காண்பதும் மிகவும் முக்கியம். உணர்ச்சி மேலாண்மையும், எதிலும் அதிக பிடிப்பற்ற தன்மையும் இருப்பவர்கள் தாங்கள் பெற்ற வெற்றியைக் கடந்து முன்னேற்றக் கொண்டே இருப்பார்கள். தன்னுடைய சாதனைகளை தானே முறியடிப்பதுதான உண்மையான வெற்றி. தன்னைத்தானே ஓடிக் கடப்பதே மகிழ்ச்சி.