

குழந்தைகள், பெரியவர், முதியவர், நோயாளி, விஞ்ஞானி, குடும்பத் தலைவி, பொறியாளர், முதலீட்டாளர், எழுத்தாளர், நடிகர், பணியாளர், அரசியல்வாதி, வியாபாரி என அனைவருமே வெற்றியை விரும்புகிறார்கள். இவர்களுக்குள் வெற்றிக்கான முயற்சியில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் ஒன்றாக இருக்கிறது.
வெற்றி அனைவருக்கும் தேவை என்றாலும் வெற்றிக்கான பந்தயத்தில் ஓடும் போது சிலர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் பங்கு பெற்றோம் என்ற நிலையிலேயே இருக்கிறார்கள்.
வெற்றி பெற்றவர்கள் 'வித்தியாசமான விஷயங்களை' செய்வதில்லை. மாறாக 'செய்யும் விஷயத்தில் வித்தியாசம்' காட்டுகிறார்கள். அதனாலேயே வெற்றி பெறுகிறார்கள்.
1970 காலகட்டத்தில் வியாபாரிகள் பலரும் ரேடியோ, தையல் மெஷின், டெலிவிஷன் விற்றுக் கொண்டிருந்தனர். வியாபாரம் என்னவோ சுமாராக இருந்தது. இவ்வளவுதான் வியாபாரம் என்று இருந்த நிலை. இந்த நிலையை மாற்றி வியாபாரத்தை வேறு விதமாக செய்து ஒருவர் வெற்றி பெற்றார்.
வித்தியாசமான பொருளை அவர் விற்பனை செய்யவில்லை. மாறாக வியாபார முறையில் வித்தியாசம் செய்தார். அதுவே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
மொத்த பணத்தையும் கொடுத்து பொருளை வாங்குவது தான் அப்போதைய நடைமுறை. அவரோ, பொருளைக் கொடுத்து தவணை முறையில் பணத்தை பெற்றுக்கொள்வது. ஒரு சிறு தொகையை கட்டிவிட்டு பொருளை வாடிக்கையாளர் எடுத்துக் கொண்டு போகலாம். பிறகு மாதா மாதம் தவணை முறையில் மீதிப் பணத்தை கட்டிக் கொள்ளலாம் என்ற வித்தியாசமான வியாபாரம் செய்தார்.
இந்த தவணை முறை வியாபாரத்தால் முழு தொகை கொடுத்து பொருள் வாங்க முடியாத நடுத்தர வர்க்கத்தினர், மாதச் சம்பளம் வாங்குபவர்களால் ஈர்க்கப்பட்டு மிகப்பெரிய வியாபார வாய்ப்பு ஏற்பட்டது. அதேபொருள், அதே வியாபாரம், ஆனால் வித்தியாசமான வியாபார முறையால் கை மேல் பலன் கிடைத்து மிகப்பெரிய வெற்றி பெற்றது தவணை முறை வியாபாரம்.
இந்த முறையை முதன்முதலில் நம் மாநிலத்தில் செய்தவர் மறைந்த வி.ஜி. பன்னீர் தாஸ். இந்த தவணை முறையால் தான் இன்று வீட்டுமனை, பிளாட், கடன்கள் பிரபலமாகி வெற்றி பெற்றுள்ளன. உழைப்பால் வெற்றி வரும் என்றாலும் புத்திசாலித்தனத்துடன் கூடிய உழைப்பால் மிகப்பெரிய வெற்றி வரும் என்பதற்கு தவணை முறை வியாபார யுத்தி மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.