

தன்னம்பிக்கை நூல்கள் பல எழுதிய புகழ்பெற்ற நெப்போலியன் ஹில் தன்னுடைய இளம் வயதில் அமெரிக்க இரும்புத் தொழிலில் ஜாம்பவானாக திகழ்ந்த கார்னகியை சந்தித்தார்.
நெப்போலியன் ஹில் கார்னகியின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுத விருப்பம் தெரிவித்ததோடு, உங்களது வெற்றிக்கு காரணம் என்ன? என்று கேள்வி கேட்டார்.
இதைக் கேட்ட ஹில்லை, கார்னகி உற்று நோக்கி, இந்த கேள்விக்கான பதிலை கூறுவதற்கு முன்னால் வெற்றி என்பது எதை வைத்து நீங்கள் சொல்லுகிறீர்கள்? என்பதை தெரிந்து கொள்ளலாமா? என பதில் கேள்வி கேட்டார்.
நெப்போலியன் ஹில் இந்த கேள்வியை சற்று எதிர்பாராததால் இதற்கு பதில் சொல்ல முடியாமல் யோசித்துக் கொண்டிருந்தார்.
நீங்கள் வெற்றி என்று கூறுவது என்னிடம் உள்ள பணத்தின் அளவை வைத்து தானே என கார்னகி கேட்க, நெப்போலியன் ஹில் "ஆமாம்". பெரும்பாலான மனிதர்களின் வெற்றி இவ்வுலகில் பணத்தை வைத்து தான் நிர்ணயிக்கப்படுகிறது என்று பதில் கூறினார்.
பணத்தை வைத்து என்னை வெற்றியாளனாக கருதினால் என்னுடைய தொழிலில் அதிக பணம் கிடைத்தது பற்றி உங்களுக்கு பதில் கூறுகிறேன்.
என்னுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் பலரின் சக்தியையும் கூட்டாக பயன்படுத்தி 'MASTER MIND' உத்தியைக் கையாண்டு இலக்கை அடைந்தேன்.
என்னுடைய பணியாளர்கள் அனைவரும் திறமைசாலிகள். ஆனாலும் அவர்களின் தனிப்பட்ட அறிவாற்றலை பயன்படுத்துவது பற்றி நான் யோசிப்பதில்லை. பணியாளர்கள் அனைவரும் கூட்டாக இணைந்து செயலாற்றி குறிப்பிட்ட இலக்கினை அடைய உத்தியை பயன்படுத்துவதால் நாங்கள் வெற்றி அடைகிறோம்.
இணைந்து செயல்படுவதால் இலக்கினை எளிதிலும் குறுகிய காலத்திலும் அடைய முடிகிறது என இரும்புத்தொழில் ஜாம்பவான் கார்னகி தெரிவித்தார்.
'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு' என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதேபோல் திறமைசாலிகள் அனைவரும் தனித்தனியாக செயல்படாமல் கூட்டாக பணியாற்றினால் அந்த நிறுவனம் மென்மேலும் வளர்ச்சி அடையும்.
பொறியியல் வல்லுநர்கள், அறிவியல் அறிஞர்கள், வேதியியல் நிபுணர்கள், இயந்திர வடிவமைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், கணக்காளர்கள், பல நிலை ஊழியர்கள் என பலதரப்பட்ட ஊழியர்களையும் இலக்கை நோக்கி பணியாற்ற 'கூட்டாற்றல்' சக்தியை கையாண்டதால் சாதனை நிகழ்ந்தது. எந்த தனி நபரின் சக்தியும் கூட்டாற்றல் சக்திக்கு நிகராக இருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.