

'கற்றது கைமண் அளவு...' ஆனால் அந்தக் கற்ற வித்தையே தற்பெருமையால் வீணாகிப்போனால்?
மந்திரவாதியாகத் துடித்த ஒரு வாலிபன், ஒரு துறவியிடம் கற்ற விசித்திர வித்தையும், அவனது கர்வத்தால் நேர்ந்த கதி என்ன? என்பதை விளக்கும் ஒரு சுவாரசியமான கதை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஒரு ஊரில் ஒரு வாலிபன் இருந்தான். அவனுக்கு மந்திரவாதியாக வேண்டும் என்று மிகவும் ஆசை. அப்போது, மலைமேல் ஒரு துறவி இருக்கிறார் என்றும் அவருக்கு மந்திரம் பற்றி நன்றாகத் தெரியும் என்றும் அவன் கேள்விப்படுவான். அவரைப் போய்ச் சந்தித்து,
"எனக்கும் மந்திரம் சொல்லித்தாருங்கள்" என்று கேட்பான்.
ஆனால் துறவியோ, "எனக்கு மந்திரம் எதுவும் தெரியாது; துறவறம் தான் தெரியும்," என்று சொல்லிவிடுவார்.
அதில் அவனுக்கு நம்பிக்கை வராது. எனவே, "எனக்கும் துறவறம் சொல்லிக்கொடுங்கள்" என்று கூறி அங்கேயே தங்கிவிடுவான்.
அந்தத் துறவி அவனுக்கு நிறையக் கடுமையான வேலைகளைக் கொடுப்பார். அதைச் செய்ய அவனுக்கு விருப்பமில்லை என்றாலும், அங்கு ஏதாவது ஒரு ரகசியத்தைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்பதற்காக அதையெல்லாம் செய்வான்.
ஒருநாள் அவன் அதைக் கண்டுபிடித்தும் விடுவான். அன்று இரவு ரகசியமாக எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கும்போது, அந்தத் துறவி உண்மையிலேயே மந்திரம் செய்து கொண்டிருப்பார். அதைப் பார்த்ததும் அவனுக்கு ஆர்வம் வந்துவிடும்.
அடுத்த நாள் துறவியிடம் சென்று, "நீங்கள் என்னிடம் பொய் சொல்லிவிட்டீர்கள். உங்களுக்கு மந்திரம் தெரியும். நான் இங்கு இரண்டு மாதம் கஷ்டப்பட்டு வேலை செய்ததற்காகவாவது, கூலியாக எனக்கு மந்திரம் சொல்லிக்கொடுங்கள்," என்று கூறினான்.
துறவியும் அவனுக்கு ஒரு மந்திரம் சொல்லித்தர ஒத்துக்கொள்வார்; ஆனால் ஒரு நிபந்தனையுடன். "இந்த மந்திரத்தைச் சொல்லும்போது மனதில் அழுக்கோடு சொல்லக்கூடாது; முழு நம்பிக்கையுடன் சொல்ல வேண்டும்," என்று கூறுவார்.
இப்படிச் சொல்லிவிட்டு அவனுக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லிக் கொடுப்பார். அது எப்படிப்பட்ட மந்திரம் என்றால், அதைச் சொல்லிக்கொண்டே சுவரை நோக்கிச் சென்றால், சுவரில் முட்டிக்கொள்ளாமல் சுலபமாகக் கடந்து செல்ல முடியும். இவனும் அதைச் செய்து பார்ப்பான்; அந்த இடத்திலேயே அது பலிக்கும். பயங்கர சந்தோஷத்துடன் வீட்டிற்குச் சென்றுவிடுவான்.
வீட்டிற்குச் சென்று அவன் மனைவியிடம் தான் பல மந்திரங்கள் கற்றுக்கொண்டதாகக் கதை விடுவான். பிறகு அந்த மந்திரத்தை முயற்சித்துப் பார்ப்பான். ஆனால், அந்த மந்திரம் பலிக்காது; அவன் சுவரில் சென்று முட்டிக்கொள்வான்.
கதையின் முடிவில் அந்தத் துறவி சொல்வார்: "என்னதான் படித்திருந்தாலும், என்னதான் பல வித்தைகள் கற்றிருந்தாலும், தற்பெருமை என்பது மனதில் வந்துவிட்டால் அது எதற்கும் பிரயோஜனம் இல்லை."