
நல்ல நடத்தை, நல்ல பழக்கம் என்பதெல்லாம் ஒரே நாளில் சுற்றுக் கொண்டு விடுகிற விஷயமல்ல; அதற்கு இடைவிடாத முயற்சி தேவை; இடையறாத பயிற்சி தேவை. குழந்தை வளர்ப்பில் பெற்றோர் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் இது. ஆரம்ப நாளில் எதை கற்றுக்கொண்டோமோ அதுதான் பழக்கம் ஆகிறது. வாழ்நாள் முழுக்க தொடர்கிறது. ஈர்த்துக்கொள்ளும் திறமை எல்லோருக்கும் பிறவியிலேயே அமைந்துவிடுவதில்லை.
அடுத்தவர்களுடன் எப்படி பழகுவது என்பதை கற்றுக்கொள்ள வேண்டிய நிலைதான் பெரும்பாலோருக்கு உள்ளது. இறுக்கமான சூழ்நிலையை இதமாக மாற்றிவிடுகிற ராசி ஒரு சிலருக்கு உண்டு. அவர்கள் உள்ளே நுழைந்துவிட்டால் அறையின் வெப்பநிலை தணிந்துவிடும்; கனமான பிரச்சினை இலேசாகி விடும்.அவர்களுடைய நகைச்சுவை உணர்வு கலந்த புத்திசாலித்தனம்தான் இதற்கு காரணம். விளையாட்டு போலவே அடுத்தவர் வலியைப்போக்கி விடுவார்கள்.எதிராளியின் சமூக அந்தஸ்து பற்றிய மிரட்சி அவர்களுக்குக் கிடையாது.
"மக்களுடன் கலந்து பழகும் திறமை ஒன்றும் கம்பச்சித்திர வேலை இல்லை. கடையில் காபித்தூள் சர்க்கரை வாங்குகிற மாதிரி எளிதான சமாச்சாரம் தான்" என்கிறார். ஜான். டி. ராக்பெல்லர்.
நல்ல நடத்தைகள்தாம் நல்ல உறவுகளை உருவாக்கிக் கொள்ள உதவும்; அடுத்தவர் ஆதரவை, ஒத்துழைப்பைப் பெற்றுத்தரும்.
வயதில் பெரியவர்களுக்கு மரியாதை அளிப்பதும், அவர்கள் முன்னிலையில் கடுமையான வார்த்தைகள் பேசாதிருப்பதும் இளைய தலைமுறையினரின் நற்பண்பாகக் கருதப்படுகிறது.
உலகெங்கிலும் நன்னடத்தைக் கோட்பாட்டை அரசியல் நிபுணர்களுக்கும், ராணுவத்தில் உயர்பதவி வகிப்பவர்களுக்கும் நிறுவன மேலதிகாரிகளுக்கு ஒரு பாடமாகவே போதிக்கிறார்கள், பயிற்சி அளிக்கிறார்கள்.
இன்று நன்னடத்தைக் கோட்பாடுகளை அப்படியே யாரும் கடைபிடிக்காவிட்டாலும், சில ஏற்கத்தக்க அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருக்க முடியாது. விருந்து, திருமணம், சாவு, கருத்தரங்கம், ஆராய்ச்சி மாநாடு போன்ற நிகழ்ச்சிகளில் சில சம்பிரதாய நடைமுறைகளை பின்பற்றியே ஆகவேண்டி இருக்கலாம்.
நல்ல நடத்தைகளை வளர்த்துக்கொண்டு அவற்றை எப்போதும் பயன்படுத்துகிறவர் சமூக இக்கட்டுகளை வெகு எளிதாக சமாளித்துவிடலாம். காரணம் அந்த நடத்தைகள், அல்லது பண்புகள் மூலம் அவர் பெற்ற தன்னம்பிக்கை, நாகரீகம், பண்பட்ட நடத்தைஇவற்றில் நம்முடைய திறமைகள் ஒருபோதும் வீணடிக்கப்பட்டதாகிவிடாது.
இங்கிலாந்து அரசியல் நிபுணர் ஒருவர் ராஜதந்திரிகளின் கூட்டம் ஒன்றுக்குப் போய்க்கொண்டிருந்தார். வழியில் அவருடைய செயலாளர். ஐயா! இந்த சம்பிரதாயம் எல்லாம் அபத்தம், சகிக்க முடியாத உஷ்ணக்காற்று மாதிரி" என்று அதிருப்தியாகப் பேசினார்.
"சரிதான் கண்ணு, நம்ம கார் டயர்ல காற்று இல்லேன்னா என்ன ஆகும் கொஞ்சம் யோசி'" என்றார் நிபுணர். செயலாளர் சிந்திக்கத் துவங்கிவிட்டார்.
உங்களுடைய நடத்தை, போக்கு, மனச்சார்பு மற்றும் நடைதாம் உங்களது வாழ்க்கையை வடிவமைக்கும்.
உலகம் உங்களைக் கவனித்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கணத்திலும், உங்களுடைய பண்பாட்டை மதிப்பீடு செய்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நமது வாழ்க்கையை வாழ நினைத்தால் நிச்சயம் வெற்றிதான்.
உறவுகள்தரும் உன்னதம் உயர்வானது.