இயற்பியல் பாடம் மிகவும் சுவாரசியமான ஒன்று. இதை படிப்பதில் ஒரு சில நன்மைகள் உண்டு. சில சமயங்களில் அது நமக்கு வாழ்க்கைப் பாடங்களை கற்றுக் கொடுக்கும்.
வெறுமனே தியரிகளை மட்டுமே சொல்லிக் கொடுக்காமல் அதில் தத்துவங்களையும் கலந்து சொல்லி கொடுக்கும்போது பிரமிப்பாக இருக்கும். அதை நன்றாக புரிந்து கொண்டு வாழ்வில் பயன்படுத்தி கொள்வது நம்முடைய சாமர்த்தியமாகும்.
ஆப்பிள் விழுந்தால் எடுத்து சாப்பிட்டு விட்டு போகும் ஆயிரம் நபர்களாக இல்லாமல், ஏன் கீழே விழுகிறது என்ற யோசிக்கும் ஒருவராக இருப்பின் உங்களுக்கு அந்த ஞானம் கிடைக்கும்.
பிரசிஸ்டோக்ரோன் வளைவைப் பற்றி கேள்விப் பட்டதுண்டா? இது இயற்பியலில் உள்ள ஒரு பரிசோதனையாகும். அதாவது மூன்று பந்துகளை வெவ்வேறு பாதைகள் வழியாக அனுப்பும்போது எந்த பாதையின் வழியிலே இருந்து வந்த பந்து முதலில் இலக்கை அடைகிறது என்பதை சோதித்து பார்ப்பதே பிரசிஸ்டோக்ரோன் வளைவாகும்.
இதில் இரண்டு வளைவான பாதைகளும், ஒரு நேர் பாதையும் இருக்கும். அதிசயம் என்னவென்றால், வளைவான பாதைகள் வழியாக வரும் பந்துகளே முதலில் வந்து இலக்கை அடையும். இத்தனைக்கு அந்த பந்துகள் எவ்வளவு கனமாக இருந்தாலும் சரி ஈர்ப்பு விசையினை தாண்டி முதலில் வந்து இலக்கை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோலத்தான் நம் வாழ்வில் சிலருக்கு எந்த பிரச்சனைகளுமேயில்லாத நேர் பாதை கிடைக்கும். சிலருக்கோ எல்லா பிரச்சனைகளையும் கொண்ட கரடுமுரடான பாதை கிடைக்கும். எனவே நேர்பாதையில் வருவதால் அவர்கள் இலக்கை முதலில் அடைந்து விடுவார்கள் என்று அர்த்தமில்லை. கரடு முரடு பாதை நம்மை இலக்கை அடைய தாமதப்படுத்தும் என்றும் பொருளில்லை.
நாம் வாழ்வில் ஜெயிப்பதற்காக எவ்வளவு முயற்சி எடுக்கிறோம், எவ்வளவு தாக்குப்பிடிக்கிறோம் என்பதை பொருத்தே வெற்றி அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த தடையும் இன்றி வேகமாக வந்த முயல் வெற்றியடையவில்லை பொறுமையாக வந்தாலும் நிதானமாக இருந்த ஆமையே வெற்றி பெற்றது. எனவே நம் வாழ்க்கையில் வேகத்தை விட நிதானமே முக்கியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
இலக்கை அடைவதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். அதற்காக எடுத்துக்கொள்ளும் நேரமோ வழியோ நம் வெற்றியை தடுப்பதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இதைப் புரிந்து கொண்டு உழைத்தால், வெற்றி நிச்சயம் நமக்கே உரித்தாகும்.