நீ முன்பு மாதிரி இல்லை. எதற்கெடுத்தாலும் எறிஞ்சு விழறே. அந்த ஆள் என்ன பார்த்தும் பார்க்காத மாதிரி போறான். அநேகமாக எல்லோரும் யாராவது ஒருவரைப் பற்றி. இப்படி புலம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒன்று தெரியுமா?... வருத்தம், கவலை, பயம், அவமானம், குற்ற உணராச்சி வேறு யாரிடமிருந்தும் வருவதில்லை. இவை எல்லாமே நீங்கள் பார்க்கும் கோணத்தை வைத்து உங்களுக்குள் ஓடும் எண்ண ஓட்டங்கள், மனத்திரையில் எழும் காட்சி அமைப்புகள், சுழன்று எழும் வார்த்தை பிரவாகங்கள் என உங்கள் கருத்துகளுக்கு உங்கள் உடல் தரும் ஃபீட் பேக் தான்.
உதாரணமாக ஒரு திருமணத்திற்கு செல்கிறீர்கள். அங்கே எதிர்பார்க்கும் வரவேற்பு கிடைக்காதபோது அதை நீங்கள் அவமானமாக நினைத்தால் மனம் உடனே அதைச் செய்தியாக மூளைக்கு அனுப்புகிறது. அடுத்த நொடி அதற்கான கெமிகல் ஹார்மோன்கள் சுரந்து அது உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் சென்று மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
கல்யாண வீடு அப்படித்தான் இருக்கும் என்று எந்த சூழலிலும் எதையும் எதிர்மறையாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் எதிர்மறை சுரப்பிகள் உண்டாகாது. நீங்கள் உங்கள் நண்பருடன் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த சூழலை மகிழ்வாக உணர்ந்தால் அவரைப்பற்றிய பதிவாக மன அகராதியில் பதிவாகிறது.
மற்றொரு சமயத்தில் அவர் சற்று மாறாக நடந்து கொண்டாலும் ஏற்கெனவே உள்ள பதிவிலிருந்து அவர் மாறுபட்டு செயல்படுவதாக நினைத்து எதிர்மறை உணர்வுகள் ஏற்படுத்தி சுரப்பிகளை சுரக்க வைக்கின்றன. கொஞ்சம் யோசியுங்கள். அவருடைய செய்கை எதுவும் வருத்தம் தரவில்லை. அவரைப்பற்றி நீங்கள் பதிந்து வைத்திருப்பதற்கு ஏற்ப உங்கள் மனம் கொடுக்கும் அர்த்தமே உங்களை வருந்த வைக்கிறது.
உங்கள் உணர்வுகள்தான் எண்ணங்களாக ஆழ்மனதில் பதிகின்றன என்பதை உணருங்கள். ஒவ்வொரு சூழலிலும் வீணாக உணர்ச்சி வசப்படாமல் அதற்கான காரணத்தை, தீர்வை கண்டுபிடிப்பை சவாலாக நினையுங்கள். அதை வெளியே தேடாமல் உங்களுக்குள் உற்றுப் பார்த்து பிரச்னையின் காரணத்தைக் கண்டு பிடியுங்கள். அப்படிச் செய்தால் உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் நீங்கள் முடிவு செய்த வகையில் பாசிடிவாகவே இருப்பீர்கள். பிறர் எந்த அர்த்தத்தில் எது செய்தாலும் நீங்கள் அதனை நல்ல அர்த்தத்துடனேயே காண்பீர்கள்.
காற்றில் இழுத்துச் செல்லப்படும் சிறு இறகாக நீங்கள் உணர்ச்சிகளால் இழுத்துச் செல்லப் படாமல் உண்மையான இயல்போடு இருப்பீர்கள். பிறரையும் அன்போடும் அனுசரணையோடும் புரிதலோடும் பார்க்கத் தொடங்கி விடுவீர்கள். அப்புறம் என்ன? எந்த சூழலிலும் உங்கள் மனதில் பாசிடிவ் எனர்ஜியே பரவும். அதனால் உங்களுக்குள் மகிழ்ச்சி சுரக்கும். அது உங்களைச் சுற்றி இருப்பவர்களிடமும் தொற்றிக் கொண்டு எங்கும் எப்போதும் சந்தோஷம் நிறையும்.