வெற்றிக்கான விதையை தோல்வியில் காணலாம்!

Motivation articles
Motivation articlesImage credit - pixabay.com
Updated on

தோல்விகள் இல்லாத வாழ்க்கை என்பது உண்மையல்ல. நாம் செய்வதெல்லாம் வெற்றியாக அமையப்போகிறது  என்று நம்புவோமானால்   நம்மை விட முட்டாள் யாருமில்லை. முதல் மதிப்பெண் வாங்கும் பெண் மூன்றாம் மதிப்பெண் எடுத்தபோதுதான் மிகவும் தாழ்ந்ததாக எண்ணி முடங்கிப் போனாள். மனவியல் அறிஞர்கள் பட்டுப் பூச்சி கூட்டுக்குள் வளர்வதுபோல் குழந்தைகளை வளர்க்காதீர்கள். குழந்தைகள் எல்லாவித அனுபவங்களும் பெறட்டும். காரில் போய் இறங்கும்  குழந்தை வீட்டுக்கு நடந்து வருவதிலிருந்து  அனாதை இல்லத்தையும் பார்க்க வையுங்கள் என்றார்கள்.

தோல்வி என்பது வாழ்வின் ஒரு பகுதி. தோல்வி ஏற்படும் என்பதை அவர்கள் உணரவேண்டும். மாவீரன் நெப்போலியன் வாட்டர்லூ போரில் தோர்க்கவில்லையா? உலகையே வென்ற ஹிட்லர் தோற்கவில்லையா ? இளவயதிலேயே எதையும் சகஜமாக எடுத்துக்  கொள்ளும்  விளையாட்டு வீரனின் மனோபாவத்தை இவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இடுக்கண் வருங்கால்  நகுக என்றார் வள்ளுவர். துன்பத்தைக் கண்டு சிரித்தால் புது வலிமை பெறுவோம். அது அடுத்த முயற்சிக்கு ஆதாரமாக அமைந்து வெற்றி தரும். தோல்வியைக் கண்டு  நகைக்க வேண்டும். ‌அது அடுத்த முறை வெற்றியைத் தரும். வெற்றி தோல்வியை சமமாக எடுத்துக்கொள்ளும் மனோபாவத்தை விளையாட்டு  உணர்த்துகிறது. இதனால்தான் பாரதியார் ஓடி விளையாடு பாப்பா என்று பாடினார்.

வாழ்க்கையை ஒரு விளையாட்டுப் பந்தயமாக எடுத்துக் கொள். தோல்வியைக்கண்டு சிரி. அடுத்த முறை நான்தான் வெற்றி பெறப்போறேன் என்று போராடு. தோல்வியை சமாளிக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள். வெற்றியைக் கண்டு பெருமைப்படும்  மகிழ்வையும் வளர்த்துக்கொள். தோல்வியை எதிர்பார்த்து  யாரும் செயல்படுவதில்லை. விளையாட்டு விரன்போல் சிரித்துக் தோல்வியை எதிர்கொள். தோல்வியைக் கையாளுவதில் மனிதர்கள் வேறுபடுகிறார்கள். எல்லோரும் என்ன நினைப்பார்கள்  என்கிற அவமான உணர்வுகள் எழுகின்றன. எல்லாம் கொஞ்ச நேரம்தான். நான் மீண்டும் பழைய மனிதனாக வெளிவருவேன். யாரும் என்னை வீழ்த்த முடியாது என்று நமக்கு நாமே சொல்லவேண்டும். தோல்வி ஏற்படும்போது மனஉறுதி குறையும். அது தாற்காலிகம்தான். வாழ்க்கை இருக்கும்வரை அது ஒரு இனிமையான விளையாட்டுப் போட்டிதான்.

இதையும் படியுங்கள்:
மனக்கவலை… மாற்றல் எளிது!
Motivation articles

பலமுறை ஓட்டப் பந்தயங்களில் வெற்றி பெற்ற வீரரிடம் "ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்  என்று கேட்கப்பட்ட போது  அந்த வீரன்  முதலில் பந்தயத்தில் கலந்து கொள்ளவேண்டும்" என்றான். நமது வாழ்க்கையும் நமது முயற்சிகளும் ஒரு ஓட்டப்பந்தயம்தான்.  வெற்றி பெற நாம் முதலில் பந்தயத்தில் கலந்து கொள்ள வேண்டும். இரண்டாவதாக பந்தயத்தில் வெற்றி‌. தோல்வி உண்டு. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு என்பார்கள். அந்த வீரனாக நாம் விளங்க வேண்டும். வீரன் தோல்வியிலும் வெற்றிக்கான விதையைக் காண்கிறான். எனவே தோல்வியும் அவனுக்கு வெற்றிதான். யானை படுத்தாலும் குதிரை மட்டம் அல்லவா?.

logo
Kalki Online
kalkionline.com