ஒரு வரியில் பேச வேண்டியதை ஒன்பது வரிகளில் பேசுகிறோம். பல சமயம் யாரிடம் பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம், எந்த இடத்தில் பேசுகிறோம் என்பதைப் பற்றிய சிந்திக்காமல் நமக்கு தெரிந்ததை பேச வேண்டும் என்பதை மட்டுமே எண்ணி பேசிக்கொண்டே இருக்கிறோம்.
ஆனால் புத்திசாலிகள் மற்றவர்களை பேசவிட்டு தேவைப்படும் இடத்தில் மட்டுமே பேசி தன் இருப்பை மற்றவருக்கு உணர்த்துகிறார்கள்.
மௌனத்தைப் பற்றி பழமொழிகள்:
மௌனம் சர்வார்த்த சாதகம் -பேசாமல் இருப்பதே பல காரியங்களையும் அனுகூலமாக முடிக்க உதவும்.
பேச்சு வெள்ளி மௌனம் பொன்னானது -பேச்சை விட மௌனத்தின் மதிப்பு அதிகம்.
மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி.
மௌனம் கலக நாசம் -மௌனமாய் இருத்தல் கலகம் (சண்டை) எதுவும் வராமல் இருக்கும். அதாவது மௌனமாக இருப்பது கலகம் முடிந்ததற்கு சமம்.
வார்த்தைகளால் பேச முடியாத போது மௌனம் பேசுகிறது. மௌனமாக இருப்பது முட்டாள்களை கூட புத்திசாலியாக காட்டும். மௌனமாக இருப்பதால் எதிராளியை சிந்திக்க வைத்து பிரச்னைகளை அலசி ஆராய வைக்கிறது.
சிக்கலான மனிதர்களை கையாளும் வழியில் முக்கியமானது மௌனம் தான். அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை விட அமைதியாக இருந்து விடுவது நல்ல பலனை கொடுக்கும்.
பிரச்னைகள் அதிகமாகும் போது கவனமாக இருப்பது பல பிரச்சினைகளை தீர்க்க உதவும் மௌனமாக இருப்பது பலவீனம் அல்ல பலம்தான்.
அதேபோல் ஏதேனும் குழப்பத்தில் இருந்தால் அமைதியாய் அதைப் பற்றிய சிந்தனையை ஒத்தி போடுவது நல்லது. பிறகு மனம் நன்கு தெளிவடைந்த பிறகு நல்ல யோசனை உருவாகும். அதுவரை பொறுத்திருந்து முடிவெடுப்பது நல்லது.
வார்த்தைகளால் சாதிக்க முடியாததை மௌனம் சாதித்து விடும். உதாரணமாக நெருங்கிய உறவினர் ஒருவர் நம்மைப் பற்றி தவறான கருத்தை கூறும்போது அதற்கான விளக்கத்தை கூறாமல் மௌனமாக அந்த இடத்தை விட்டு அகன்று விடுதல் நல்லது. அப்படி செய்யும்போது நாம் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருப்பதுடன் எதிராளியை இவர் ஏன் இப்படி செய்தார் என்று சிந்திக்க தூண்டு வதுடன் அடுத்த முறை நம்மை பார்க்கும்போது இவர் நல்லவர்தான் போலும் நாம் தான் இவரை தவறாக புரிந்து கொண்டு விட்டோம் என்று எண்ணி நம்மை மதிப்புடன் நடத்த தொடங்குவார்.
உறவினர்களுடன் மட்டுமல்ல நம் மேலதிகாரி நம்மை காரணம் இல்லாமல் குற்றம் சாற்றும் போதும், நம் வார்த்தைக்கு மதிப்பில்லாத இடங்களிலும், தேவையில்லாமல் வாக்குவாதம் செய்பவர்கள் இடத்திலும் மௌனமாக இருந்து விடுதலே நல்லது.