

திறமை அங்கீகாரம் பெறுவதில் ஏற்படும் தடைகளை உடைத்தெறிவது எப்படி?
அங்கீகாரம் என்பது ஒருவருடைய திறமை கண்டறியப்பட்டு தகுதி உடையவர்களுக்கு தகுதி உடையவர்களால் தானாக வழங்கப்படும் பொழுதுதான் அதற்குரிய மரியாதை கிடைக்கும். அப்படிப்பட்ட திறமை இருந்தும் சமூகத்தில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் மனம் வருத்தப்படத்தான் செய்யும்.
தொடர்ச்சியான அங்கீகாரமின்மை உள்ளார்ந்த ஊக்கத்தைக் குறைக்கும். சவாலான பணிகள், பின்னூட்டம் அல்லது வெளிப்படையான வெகுமதிகள் இல்லாதபொழுது, ஊக்கமுள்ள நபர்கள் தங்களுக்குத் தாங்களே சவால் விடுவதை நிறுத்தி விடுவார்கள்.
உள்ளார்ந்த திறன் உயர்வாக இருந்தாலும், வளர்ச்சி ஒரு தேக்க நிலையை அடைந்துவிடும். இது மன அழுத்தத்தை அதிகரித்து சுய செயல்திறனைக் குறைத்துவிடும். மேலும் மனச்சோர்வு, பதட்டம், குறைந்த வேலை திருப்தியுடன் தொடர்புடையதாக மாறிவிடும்.
இதற்கு தனக்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் புறக்கணிக்கப்படுவதை முதலில் உள்வாங்கிக்கொண்டு தங்களுடைய லட்சியங்களையும், குறிக்கோள்களையும் குறைத்துக் கொள்ளாமல் சில ஆக்கபூர்வமான விஷயங்களில் ஈடுபட வேண்டும்.
திறமை இருந்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லையா? இது பலருக்கும் ஏற்படும் இயல்பான ஏமாற்றம்தான். ஆனால் அதுவே நம் வாழ்க்கைப் பயணத்தின் முடிவு அல்ல. வெறும் திறமை மட்டும் போதாது. அதற்கான சரியான அணுகுமுறையும், சூழலும் மிகவும் அவசியம். திறமை என்பது ஒரு விதையைப் போன்றது. அது சரியான மண்ணிலும், வெளிச்சத்திலும் வளர சில முக்கிய உத்திகளும் பொறுமையும் தேவைப்படுகின்றன.
திறமையான ஒருவர் அங்கீகாரம் பெற விரும்பினால், அவர் தன்னைத்தானே சந்தைப்படுத்திக் கொள்வது நல்லது. ஒருவர் என்ன செய்கிறார் என்று யாருக்கும் தெரியாவிட்டால், அவர் எப்படி கவனிக்கப்படுவார்? வெற்றி பெறுபவர்களுக்குத் திறமையும் சந்தைப்படுத்தும் திறனும் தேவை. சொல்லப்போனால் திறமையை விட சந்தைப்படுத்துதலே மிகவும் முக்கியமானது.
திறமைக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு சிறிது மெனக்கெட்டாலே போதும். முதலில் நமக்கு இருக்கும் திறமையை வெளிப்படுத்துவது அதாவது மற்றவர்கள் பார்வைக்கு வெளிக் கொணர்வது அவசியம்.
நம் திறமையை மற்றவர்கள் பார்க்கும் வகையில் டிஜிட்டல் தளங்கள் மூலம் வெளிப்படுத்தலாம். வலைப்பதிவு, யூடியூப் போன்றவை மூலம் வெளிப்படுத்த அது நிறைய பேரைச் சென்றடையும்.
நம் திறமை யாருக்குத் தேவை, எங்கு தேவை என்பதை சரியாக அறிந்து செயல்பட வேண்டியது அவசியம். அதாவது சரியான இலக்கு என்பது தேவை. அடுத்ததாக அங்கீகாரத்தைப் பெறுவதற்கு தொடர் கற்றல் என்பது மிகவும் முக்கியம். உலகம் மாறுகிறது; அதற்கேற்ப நம் திறனை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். புத்திசாலித்தனம் என்பது காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும். பலனை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் நம் பணியில் முழு கவனத்தையும் செலுத்தலாம். பொறுமை மற்றும் விடா முயற்சியுடன் செயல்பட நம் தகுதிக்கேற்ற உரிய அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்.
நாம் உயர விரும்பும் துறையில் உள்ள வல்லுனர்கள் மற்றும் பிறருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். காலத்திற்கேற்ப நம் திறமைகளை எப்போதும் புதுப்பித்துக் கொண்டே இருப்பதும், பிறரின் பாராட்டுக்காக மட்டும் உழைக்காமல், நம் செயலின் திருப்திக்காகவும் உழைக்கப் பழகவேண்டும்.
போலி அங்கீகாரங்களைத் தவிர்த்து (பணம் கொடுத்து வாங்கும் பட்டங்கள் பதவிகள் போன்றவற்றைத் தவிர்த்து) உழைப்பில் மட்டும் கவனம் செலுத்த நிச்சயம் நம் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கப் பெறலாம். அங்கீகாரம் என்பது தகுதியானவர்களால் தகுதியான நேரத்தில் தானாகவே தேடிவரும். அதுவரை நம் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பது தான் சரி.
அலுவலகத்திலோ அல்லது தனிப்பட்ட வாழ்விலோ உங்களது திறமை உரிய காலத்தில் கவனிக்கப்பட்டு, சுய நம்பிக்கையுடன் இலக்குகளை நோக்கி முன்னேறும் மனப்பக்குவத்தையும், நிலையான தொழில் வளர்ச்சிக்கான முறையான உத்திகளையும் இந்த வழிகாட்டுதல் உங்களுக்கு வழங்குகிறது.