இரு மாணவர்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி. இருவருமே சரிசமமான திறமைகள் கொண்டவர்கள். இருவரும் படிப்பிலும் விளையாட்டிலும் முன்னணியில் இருப்பவர்கள் என்பதால் வெற்றி பெற்றவர் யார் என்பது அல்லது திறமைசாலி இருவரில் யார் என்பதை அறிவதற்காக அவர்கள் இந்த போட்டியில் இறங்கினர்.
போட்டிக்கு நன்கு தெரிந்த படித்த இளைஞர் ஒருவரை நடுவராக இருக்குமாறு கேட்டுக் கொண்டனர். இருவருக்கும் இடையில் நடக்கும் அந்த போட்டி என்னவென்று கேட்டார். ஒரு பெரிய மைதானத்தைத் தாண்டி குளக்கரையின் மறுபுறம் இருந்த பனை மரத்தின் உச்சிக்கு சென்று கொடியைக் கட்டுவதுதான் அந்த போட்டி என்றனர்.
போட்டி துவங்கியது. இருவரும் ஒரே நேரம் மைதானத்தில் இருந்து கிளம்பினர். இருவரில் வெகு வேகமாக ஒரு மாணவன் பனைமரத்தின் உச்சியை அடைந்து தன் கையிலிருந்த கொடியை கட்டி விட்டு கீழே இறங்கினான். வெற்றி பெற்றது நிச்சயம் தான் தான் என்ற மகிழ்ச்சி அவன் முகத்தில்.
இன்னொரு மாணவனோ சிறிது நேரம் கழித்து வந்து தனக்கு தந்த கொடியை பனை மரத்தின் உச்சியில் கட்டி விட்டு கீழே இறங்கினான். அவன் முகத்திலும் ஒரு நிறைவு இருந்தது.
இளைஞர் பார்த்தார் இருவரில் யார் வெற்றி பெற்றவர்? நிச்சயம் அந்த முதலில் வந்த மாணவனைத்தானே சொல்ல வேண்டும். ஆனால் அந்த இளைஞரோ இரண்டாவதாக வந்த அந்த மாணவர் தான் வெற்றி பெற்றவராக அறிவித்தார். முதலாவதாக வந்த மாணவனுக்கு பெருத்த சந்தேகம் எதனால் தன்னை விடுத்து அந்த மாணவனை வெற்றி பெற்றதாக சொல்கிறீர்கள் என்று இளைஞரிடம் கேட்டான் அந்த இளைஞர் சொன்னார்.
"தம்பி நீ ஓட துவங்கியதுமே உன் குறி அனைத்தும் அந்த பனை மரத்தின் உச்சியில் மட்டுமே இருந்தது அதுவும் சிறந்த வெற்றிதான்… நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த மாணவன் ஓடும்போது வழியில் மைதானத்தில் ஒரு சிறு பறவை ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்தான். அதை எடுத்து அதன் கூட்டில் விட்டு விட்டு ஓட துவங்கினான். அதில் சிறிது நேரம் ஆயிடுச்சு.
அந்த காட்சி உன் கண்களிலும் பட்டதுதான் ஆனால் நீ உன்னுடைய வெற்றியை மட்டுமே சுயநலத்துடன் நினைத்தாய். ஆனால் அந்த மாணவனோ அந்த உயிர்களை காப்பாற்றும் நோக்குடன் பொது நலத்துடன் செயல்பட்டான்.
மேலும் உண்மையான வெற்றி என்பது தானும் மகிழ்ந்து தன் உடன் இணைந்து வரும் சமூகத்தையும் வாழ வைப்பதுதான்" என்று கூறினார். இதை கேட்ட அந்த மாணவன் மற்றொரு சக மாணவனை பாராட்டி இந்த நிகழ்வின் மூலம் தான் ஒரு பெரிய விஷயத்தை கற்றுக் கொண்டதாக இருவருக்கும் நன்றி சொன்னான்.
ஆம், வெற்றி என்பது நாம் அடையும் உயரங்களால் மட்டும் அளவிடப்படுவதில்லை. அதை அடையும் முன் கடந்து வந்த செயல்கள் மற்றும் தடைகளாலும் அளவிடப்படுகிறது என்பதை அந்த மாணவர்களுடன் நாமும் புரிந்து கொண்டு வரும் தடைகளை வென்று வெற்றி நடை பழகுவோம்.