மனநல ஆரோக்கியம்தான் மனபலமே. அதுவே ஆக்க சக்தி. மனநலம் உயர உயர ஆக்கப்பூர்வமான சிந்தனையும், சக்தியும் மேலே உயரும். நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் விளங்குவதுடன் வாழ்வும் மேன்மை அடையும். மனம் ஒரு நாளில் எவ்வளவு நேரம் மகிழ்ச்சியாக இருக்கிறதோ அதுவே மனித சக்தி. மனம் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் ஒழுங்காக வேலை செய்யும், வீரியத்துடன் வேலை செய்யும், அனைத்து நோய்களையும் குணப்படுத்தும், ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.
மன நலத்தை பாதுகாக்க உங்களைப்பற்றி நல்ல எண்ணத்தை உங்களுக்குள் வளர்ந்துக் கொள்ளுங்கள். நல்லதையே செய்யுங்கள், நல்லதையே பெறுங்கள். உங்களின் தனித்தன்மையை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். எதிலும் ஒன்றி செயல்படுங்கள். மனம் மற்றும் உடல் அழுத்தத்தை சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு வாழ பழகுங்கள். உங்களை பாதிக்கும் விஷயங்களிலிருந்து விரைவில் வெளியே வர பழகுங்கள்.
மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உங்களை சுற்றி இருக்கும் பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள், நண்பர்கள் என எல்லோரையும் ரசியுங்கள், கொண்டாடுங்கள்.
நல்ல நண்பர்களை சம்பாதித்து அவர்களுடன் நேரம் செலவிடுங்கள், உங்களுக்கு ஊக்கமளிக்கும் நண்பர்கள், நம்பிக்கையை சிதைக்காத நண்பர்களோடு நேரத்தை செலவிடுங்கள். இது உங்கள் பாசிட்டிவ் எனர்ஜியை குறைக்காமல் வைத்திருக்கும். தினசரி ஐந்து கனிவான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்கள் மற்றும் நன்றியை பலரிடம் பகிர்கின்றவர்கள் ஆரோக்கியமான மனநிலையில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
எப்போதும் உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி உள ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது. உடற் பயிற்சிகளில் ஈடுப்படும்போது மன நிலையும் ஆரோக்கியமாக இருக்கும். ஸ்விம்மிங், சைக்கிளிங், வாக்கிங், ஜாகிங் ஆகியவற்றை வழக்கமாக மேற்கொள்வதால் மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்.
புதிதாக ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உங்கள் திறமையை வெளிகொண்டு வருவது உங்கள் மன மலர்ச்சியை அதிகரிக்கும் என்கிறார்கள். சின்ன சின்ன சந்தோஷங்களை உங்கள் உடன் இருப்போருக்கு பகிர்ந்து மகிழ்வதும், அன்றாடம் ஏதேனும் அற்புதம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் நாளை தொடங்குவதும் உங்களை நல்ல மனநிலையில் வைத்திருக்க உதவும் என்கிறார்கள் என்ரான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
இரவில் தூங்கச் செல்லும்போது அன்று நடந்த பிரச்சனைகள், நெருக்கடிகள் அனைத்தையும் மறந்து விட்டு நிம்மதியாக தூங்குங்கள்.
ஒவ்வொரு நாள் விடிந்த பின்பும் நல்லதையே நினையுங்கள். நல்லதையே செய்யுங்கள். நல்லதையே எதிர் பாருங்கள். இந்த நிலையில் அன்று முழுவதும் உங்கள் வாழ்க்கையை நடத்தினால். அன்று உங்களுக்கு நடப்பதெல்லாம் நல்லதாக அமையும்.
எல்லாவற்றையும் தானே தனியாக நின்று செய்து காட்டி சாதிக்க வேண்டும் என்று எல்லா நேரமும் சுமைகளை தூக்கி தலைக்கு மேல் வைத்துக் கொள்ள வேண்டாம். உங்களால் செய்ய முடிகிறது வேலைகளை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள். அதனை சிறப்பாக செய்து முடித்து விடுங்கள்.
முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவுங்கள். மற்றவர் களுக்கு உதவுவதும், மற்றவர்களை மதிப்பதும், பாராட்டுவதும் உங்களுக்கு அதிக மனோபலத்தையும், சந்தோஷத்தையும் தரும்.
உங்கள் வாழ்க்கையில் பிரச்சனையே ஏற்படாது என்று சொல்ல முடியாது. நீங்கள் எவ்வளவு தான் உஷாராக இருந்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனை தேடி வரத்தான் செய்யும். அப்படி பிரச்சனைகள் வரும்போது "நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது அது நமக்கு சரியான வழியைக் காட்டும்" என்று நம்புங்கள்.
எப்போதோ செய்த தவறை எண்ணி இன்று வரை வருந்துவதில் எவ்வித பயனும் இல்லை. அதேபோல் எதிர்காலத்தை நினைத்தும் கவலை அல்லது பயம் கொள்வதும் மன அழுத்தத்திற்கே வித்திடும். பொரும்பாலும் மனிதர்களின் மகிழ்ச்சியை பாதிக்க கூடிய விசயம் என்னவென்றால், நடந்து முடிந்த விஷயங்களை நினைத்து கவலைப்படுவதும் எதிர்காலத்தை நினைத்து பயம் கொள்வதும்தான். எனவே எப்போதும் மனதை நிகழ்காலத்தில் வைத்திருக்க முயற்ச்சி செய்தாலே போதும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.