மனித மனம் என்பது ஒரு சிக்கலான இயந்திரம் போன்றது. அது தொடர்ச்சியாக எண்ணங்களை உருவாக்குகிறது. சில எண்ணங்கள் நம்மை செயல்களை செய்யத் தூண்டுகின்றன, படைப்பாற்றலை வெளிப்படுத்துகின்றன, நம்மைப் பற்றி அதிகமாக சிந்திக்க வைக்கின்றன. ஆனால், சில நேரங்களில் எண்ணங்கள் அதிகமாகி, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்து ‘அதீத சிந்தனை’ என்ற நிலைக்கு தள்ளப்படுகிறோம். எண்ணங்கள் மற்றும் அதீத சிந்தனைக்கு இடையேயான வித்தியாசம் என்ன?, அவற்றின் இடையே இருக்கும் முக்கிய வேறுபாடுகளைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
எண்ணங்கள்: எண்ணங்கள் என்பது நமது மனதில் தோன்றும் கருத்துக்கள், உணர்வுகள் மற்றும் யோசனைகள். அவை நமது அனுபவங்கள், நினைவுகள் கற்பனைகள் மற்றும் நம்பிக்கைகளால் ஏற்படுகின்றன. எண்ணங்கள் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்கலாம். இத்தகைய எண்ணங்கள் தற்காலிகமானதாகவே இருக்கும்.
அதீத சிந்தனை: அதீத சிந்தனை என்பது ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி அதிகமாகவும், தேவையற்ற முறையிலும் சிந்திப்பதைக் குறிக்கிறது. இது பெரும்பாலும் எதிர்மறையான எண்ணங்களால் நிரம்பி இருக்கும். கவலை, பயம் மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். அதீத சிந்தனை நம்மை செயல்பட முடியாமல் தடுத்து, தூக்கத்தை பாதித்து, உறவுகளில் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
எண்ணங்கள் மற்றும் அதீத சிந்தனையின் முக்கிய வேறுபாடுகள்:
எண்ணங்கள் நம்மை செயல்களை செய்யத் தூண்டி, படைப்பாற்றலுடன் செயல்பட வைக்கும் நோக்கம் கொண்டவை. அதீத சிந்தனை பெரும்பாலும் எந்த நோக்கமும் இல்லாமல் ஒரு பிரச்சனையைப் பற்றி மீண்டும் மீண்டும் சிந்திப்பதில் கவனம் செலுத்துகிறது.
எண்ணங்கள் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்கலாம். அதீத சிந்தனை என்பது பெரும்பாலும் கவலை, பயம், சோகம் மற்றும் கோபம் போன்ற எதிர்மறையான உணர்ச்சிகளுடன் தொடர்புடையது.
எண்ணங்களை நாம் கட்டுப்படுத்தலாம் அல்லது அவற்றை அப்படியே விட்டுவிடலாம். ஆனால் அதீத சிந்தனையை கட்டுப்படுத்துவது கடினம். அவை நம் மனதை ஆக்கிரமித்து அதிகமாக துன்புறுத்தும்.
எண்ணங்கள் பெரும்பாலும் நம் வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதீத சிந்தனை என்பது மன அழுத்தம், சோர்வு மற்றும் உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
எனவே, உங்களுக்கு ஏற்படும் எண்ணங்களை சரியாகப் புரிந்து கொண்டு, அவற்றை முன்னேற்ற பாதைக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், உங்களது கஷ்டங்களைப் பற்றி அதிகமாக சிந்திக்காமல், அதீத சிந்தனையால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய புரிதலை ஏற்படுத்திக்கொண்டு, நேர்மறையான செயல்களைச் செய்ய முற்படுங்கள்.