

உடல் மனத்தின் சொல்லுக்குக் கட்டுப்படுகிற பணியாள். மனம் போடும் திட்டங்களுக்கு உடல் கட்டுப்பாட்டுடன் செயல்படுகிறது. முறையற்ற எண்ணங்கள் உள்ளத்தில் புகுந்துள்ள உடல் உடனடியாக நோயினாலும், அழிவினாலும் தாழ்ந்து போகிறது. அழகிய எண்ணங்கள் மனதின் இணையாகப் புறப்படும்போது உடல் இளமையாகவும், அழகாகவும் போர்த்தப்படுகிறது. நோய் பிடித்த எண்ணங்கள் ஒரு நோய்கொண்ட உடல் மூலம் வெளிப்படுகிறது. தூய்மையற்ற எண்ணங்கள் நம் நரம்பு மண்டலத்தையே சிதற அடித்துவிடும். தூய்மையற்ற எண்ணத்தால் ரத்த ஓட்டம் தூய்மையற்றதாக ஆகிவிடுகிறது.
நம் செயலுக்கெல்லாம் ஆரம்ப இடம் எண்ணம்தான். இதுதான் நீரூற்று. இந்த நீரூற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால் எல்லாம் சுத்தமாக இருக்கும். தூய்மையான எண்ணங்கள் தூய்மையான பழக்கவழக்கங்களுக்குக் காரணமாகிறது. அப்படியிருப்பவர்களை நோய்கள் தாக்குவதில்லை. உடலை ஓருநெறிக்குக் கொண்டுவர வேண்டுமானால் உங்கள் எண்ணங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
உடலுக்கு புதிய வடிவம் கொடுக்க வேண்டுமென்றால் மனதை முதலில் அழகு செய்யுங்கள். ஏமாற்றம், பொறாமை, வெறுப்பு முதலிய எண்ணங்கள் உங்கள் ஆரோக்கியத்தை சூறையாடிவிடும்.
சுத்தமான காற்றையும், சூரியவெளிச்சத்தையும் தாராளமாக உள்ளே விடும்போது இனிமை சூழ்ந்த ஆரோக்கியமான வீடு அமைவது போன்று, வலிமையான உடல் பளிச்சென்ற முகம், நிறைவு கொண்ட தோற்றம் எல்லாம் நல்லெண்ணம், நிறைவு என்ற எண்ணங்களை தாராளமாக உள்ளே விடுவதன் மூலம் விளையும். சுய பச்சாதாபம் போட்ட கோடுகளை சில வயது வந்தவர்கள் முகத்தில் காணலாம். அமைதியாக மறையும் அந்தி சூரியன் போல் நேர்மையாக வாழ்வோரிடம் வயது மென்மையாக அடங்கி ஒடுங்கிவிடுகிறது.
உடலில் நோய்களைக் கரையச் செய்வதற்கே உத்சாகமான எண்ணத்தைப் போன்ற மருத்துவர் யாரும் கிடையாது. துக்கம், சோகம் என்ற இருளை ஒழிப்பதில் நல்லெண்ணம் தரும் ஆறுதல் போல வேறு எதுவும் கிடையாது. உடல் பலகீனமானவன் எப்படி பொறுமையாகப் பயிற்சி செய்து தன்னைப் பலப்படுத்திக்கொள்ள முடியுமோ அதேபோல் பலகீனமான எண்ணங்களை உடைய மனிதன் சரியான எண்ணங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் தன் வாழ்விற்கு வலிமை ஊட்டமுடியும்.
எண்ணங்களை மாற்றாக மனிதன் எத்தனை கட்டுப்பாடான உணவு முறைகள் மேற்கொண்டாலும் எந்த உதவியையும் அது அவனுக்குச் செய்யாது. எண்ணங்கள் தூய்மையாக இருக்கும்போது தூய்மையற்ற உணவுகளின் மீது அவனுக்கு ஆசை எழுவதில்லை.
எந்த எண்ணை முத்திரைகள் உள்ளே விழுகின்றனவோ அதற்கேற்ப உடல் இசைந்து செயல்படுகிறது. நல்லதோ கெட்டதோ எண்ணத்திற்கேற்ப விளைவு நேர்கிறது. பயம் நிறைந்த எண்ணங்கள் துப்பாக்கி குண்டைவிட மனிதனை வேகமாகப் கொன்றுவிடும். ஒரு நொந்த முகமும் துக்கக் கோடுகளும் திடீரென்று ஏற்பட்டதல்ல. அவை ஏமாற்றமும் வெறுப்பும் கொண்ட உள்ளத்தின் பிரதிபலிப்புகளே. உடல் நோயைக் கரையச் செய்வதற்கு உத்சாகமான எண்ணங்களைத் தவிர வேறு நல்ல மருத்துவர் யாரும் இல்லை.
கெட்ட எண்ணமும், எதிலும் துன்பத்தையே எதிர்பார்ப்பதும் சந்தேகமும் பொறாமையும் உள்ள வாழ்க்கையை நடத்துவதும் நமக்கு நாமே சிறை அமைத்துக் கெட்டு வாழ்வதற்கும் சமமாகும். எல்லோரும் வளமுடன் வாழவேண்டும் என்று எண்ணுவது, எல்லோருடனும் உத்சாகமாகப் பழகுவது எல்லோரிடமும் இருக்கும் நல்லதைப் பொறுமையுடன் தெரிந்துகொள்ள முயல்வது போன்ற சுயநலமற்ற எண்ணங்கள்தான் சொர்க்கத்தின் நுழைவாயில்கள்.
ஒவ்வொரு நாளும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டி வாழுங்கள் வாழ்வில் சாந்தத்தைக் கடைபிடியுங்கள். மாசுமறுவற்ற நிறைவு உங்கள் வாழ்வில் பெறுவதை உணர்வீர்கள்.
உங்கள் மன எண்ணங்களே உடலின் ஆரோக்கியத்தையும் இளமையையும் தீர்மானிக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டு, நேர்மறை சிந்தனைகள் மூலம் ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம்.