மனிதன் சிந்திக்கும் போதுதான் அவனுடைய செயல்பாடுகள் சிறப்பாக அமைகிறது. சிந்திப்பதின் மூலம் பல விஷயங்களை நாம் கற்று வெற்றி பெறவும் முடியும்.
சிந்தனையில் இருந்துதான் அறிவு தோன்றுகிறது. அது பண்பட்ட பல கேள்விகளை எழுப்பி விடை காண வைக்கும். ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாவை எழுப்பி அறிவைப் பயன்படுத்தச் செய்யும்.
சிந்தனை இல்லாவிட்டால் உலகத்தில் இயங்குகின்ற சக்தியே இருக்காது. சிந்தனையின் மூலமே முன்னேற்றம் காண முடியும். ஒன்றைப் பற்றி தொடர்ந்து எண்ணிக் கொண்டு இருப்பதும், ஆராய்ந்து கொண்டிருப்பதும்தான் சிந்தனை.
இதன் மூலம்தான் செயலைச் செய்ய முடியும். சிந்தனைதான் நமது வாழ்வின் அடிப்படை. வாழ்வே இதனால்தான் ஆக்கப்பட்டது என்கிறார் புத்தர். நாம் அனுபவிக்கும் இன்பங்கள் எல்லாம் மனிதர்களுடைய சிந்தனையிலிருந்து பிறந்ததுதான்.
அவர்களுடைய சிந்தனையே செயலாக மாறி கண்டுபிடிப்புகளாகத் தோன்றின. நாம் யாராக இருந்தாலும் எந்தத் தொழிலைச் செய்பவர்களாக இருந்தாலும் சிந்தனையை உயர்வாகக் கொண்டிருக்க வேண்டும். சிந்தித்துச் செயல்படுவதின் மூலமே சிறப்பாக வாழ முடியும்.
சிந்தனை மட்டும் இருந்து செயலைச் செய்யாவிட்டால் அதனால் எந்தவிதப் பயனும் ஏற்படாது. சிந்தனையில் தொடர்ந்து ஈடுபடும் பொழுது நம்முடைய அறிவு நாளுக்கு நாள் பெருகும்.
சிந்தனையே ஆழமான அறிவுக்கு வித்தாக அமையும். அந்த அறிவின் தன்மை வாழ்க்கையை வளமுடன் வாழ வழிகாட்டும். சிந்தனையிலிருந்து பயனுள்ள அறிவை வெளியில் கொண்டு வந்து செயலில் காட்டினால்தான் வெற்றி பெற முடியும்.
சிந்தனைப் பெருகும்போது அறிவு வளரும். அறிவு தெளிவு பெறும் போது மனநிலையில் வரவேற்கத் தகுந்த பல மாறுதல்களை உண்டு பண்ணும். அதன் மூலம் முன்பு செய்ய இயலாத பல செயல்களைத் திறம்பட முடிக்க முடியும்.
நாம் விரும்புகின்ற ஒவ்வொரு சிந்தனையும் நமது விருப்பப்படியே அமையும். நாம் விரும்பாத எந்தச் சிந்தனையும் தானாகவே தோன்றாது. நல்ல சிந்தனையை நினைக்க வேண்டிய அதிகாரமும் உரிமையும் நம்மிடம் இருக்கும் பொழுது எப்படி வெற்றி பெற முடியாமல் போகும்?
ஒரு இலட்சியத்தை சிந்தனையிலே முளைக்க வைத்து விட்டு நன்றாக வேர் விட்டு வளரும் வகையில் அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்தாலே போதும். அது தானாகவே வெற்றி பெற்று விடும்.