நம் வாழ்வில் தேவையற்ற 3 செயல்கள்!

Unnecessary Actions
Unnecessary Actionshttps://tamil.boldsky.com
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

வாழ்வில் முன்னேற நாம் செய்யும் செயல்கள் தேவையானதாகவும், அடிப்படையில் நமக்கு உதவுவதாகவும் இருக்க வேண்டும். தேவையற்ற செயல்கள் நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும். அவ்வகையில், நம்மில் பலரும் பொதுவாக செய்யும் 3 தேவையற்ற செயல்களை இந்தப் பதிவில் காண்போம்.

நம் முன்னேற்றத்தைத் தடுக்க வேறு யாரும் இங்குத் தேவையில்லை. நாம் செய்யும் தேவையற்ற செயல்களும், சிந்தனைகளுமே போதும். அதீத கற்பனைத் திறன் கொண்டவர்களுக்கு பயமும் அதிகமாக இருக்கும் என்பார்கள். கற்பனைத் திறன் நல்லது தான்; இருப்பினும் உங்களின் கற்பனைத் திறன் நல்லவற்றைச் சார்ந்தும், முன்னேற்றத்தைச் சார்ந்தும் இருப்பது நலம். ஆனால், இங்கு பலரும் தேவையற்றதை எண்ணிக் கற்பனையில் திளைக்கின்றனர். இம்மாதிரியான செய்கையால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை.

கடந்த காலத்தை நினைத்து வருந்துவது:

கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் திரும்ப வராது என்று நம் அனைவருக்குமே தெரியும். இருப்பினும் கடந்த காலத்தில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வுகளை நினைத்து வருந்துவது எந்தவிதப் பலனையும் தரப்போவதில்லை. நடந்தவை நல்லவை எனில் நினைவுகளாகவும், கெட்டவை எனில் அனுபவமாகவும் வைத்துக் கொள்ளலாம். அதற்காக அதையே நினைத்து வருந்துவது நல்லதல்ல. இதனால் நம்முடைய நிகழ்கால நேரம் வீணாவதோடு, நம்முடன் இருக்கும் உறவுகளையும் தொலைக்க நேரிடலாம்.

அடுத்தவருடன் ஒப்பிடுதல்:

நமக்கு என்ன கிடைக்க வேண்டும் என இருக்கிறதோ, அது கண்டிப்பாக கிடைக்கும். நாம் வேலை செய்யும் இடத்தில் பலருக்கும் சம்பளம் ஒரு மாதிரி இருக்காது. இதனால், அடுத்தவருடன் நம்மை ஒப்பிட்டு நமக்கு மட்டும் ஏன் சம்பளம் குறைவாக உள்ளது என்று மனம் வருந்துவார்கள். இதே மாதிரி பல இடங்களில் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு மனம் வருந்துவது பலருக்கும் இயல்பாகவே இருக்கிறது. இதனால் நமது பொன்னான நேரம் வீணாவதோடு, மன அழுத்தமும் ஏற்படும். நம்முடைய தற்போதைய நிலையை முன்னேற்ற நினைத்தால் இதுபோன்ற தேவையற்ற சிந்தனையைத் தவிர்ப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
Deep Work: செயல் திறனை சிறப்பாக்கும் தந்திரம்!
Unnecessary Actions

அடுத்தவரை திருப்திபடுத்த நினைப்பது:

'மகிழ்வித்து மகிழ்' என்பது அடுத்தவர்களை மகிழ்விக்கச் செய்து, அதனைக் கண்டு நாமும் மகிழ்ச்சி அடைவது. இருப்பினும் அடுத்தவரின் திருப்திக்காக நம்மை நாம் வருத்திக் கொள்வது தேவையற்ற செயல் தான். இப்படி நீங்கள் திருப்திபடுத்தினாலும் அது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. உங்களை வருத்திக் கொண்டு தான் மற்றவர்களை மகிழ்விக்க வேண்டுமென்றால் இனி அதனை நாம் நிறுத்திக் கொள்வது தான் நல்லது.

சில செயல்கள் நம்மை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும். சில செயல்கள் நம்மை முன்னேற விடாமல் தடுக்கும். மேற்கண்ட இந்த 3 செயல்களும் நம் முன்னேற்றத்தைத் தடுத்து, மன அழுத்தத்தையும் துன்பத்தையும் தான் தரும். ஆகையால் இனி இதுபோன்ற தேவையற்ற செயல்களைத் தவிர்ப்பது மட்டுமின்றி, உங்களின் கவனத்தை வளர்ச்சிப் பாதையை நோக்கி செலுத்துங்கள்.

logo
Kalki Online
kalkionline.com