மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தந்திரங்கள்!
மன ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருப்பது மிகவும் எளிதானதுதான் என்றாலும், அதைச் செய்ய நேரம், பயிற்சி, முயற்சி போன்ற அனைத்தும் தேவை. உங்களது மனம் சரியாக இருந்தாலே, வாழ்க்கையில் உங்களால் சரியான முடிவுகளை எடுக்க முடியும். எல்லா விஷயங்களும் உங்களுக்கு அழகாகத் தெரிய ஆரம்பிக்கும்.
மன ஆரோக்கியத்தை மேம்படுத்த எதிர்மறை விஷயங்களை முதலில் தவிர்க்க வேண்டும். எதிர்மறை விஷயங்களைத் தவிர்ப்பதென்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில் உங்களது தினசரி வாழ்க்கையில் எதிர்மறை விஷயங்களை ஒருபோதும் உங்களால் சந்திக்காமல் இருக்க முடியாது. இருப்பினும் சில தந்திரங்களைப் பயன்படுத்தி அவற்றை கண்டுகொள்ளாமல், மனநிலையை மேம்படுத்த முடியும்.
பெரும்பாலும் எதிர்மறை விஷயங்கள் இரண்டு விதமாக உங்களை பாதிக்க வாய்ப்புள்ளது. அதாவது வெளிப்புறத்தில் இருந்து வரும் எதிர்மறை மற்றும் உங்களுக்குள்ளேயே தோன்றும் எதிர்மறை. இந்த இரண்டையும் நீங்கள் சரி செய்ய வேண்டும்.
1. வெளிப்புறத்தை சரி செய்யுங்கள்: என் வாழ்க்கையில் நான் செய்த மிகச்சிறந்த விஷயங்களில் ஒன்று, வெளியே இருந்து வரும் விஷயங்களை எனது மூளைக்குள் தேவையில்லாமல் செலுத்தாமல் இருப்பதாகும். இத்தகைய தேவையற்ற செய்திகள் உங்களது மூளைக்குள் நுழைந்து தேவையில்லாத சிந்தனைகளை ஊக்குவித்து நேரத்தை வீணடிக்கும்.
எனவே தேவையற்ற செய்திகள் பார்ப்பதை நிறுத்துங்கள். குறிப்பாக டிவி, சமூக வலைதளங்கள் போன்ற அனைத்துமே பலவகையான விளம்பரங்களை நமக்குக் காட்டி, மூளையை குழப்புவார்கள். அத்தகைய தேவையில்லாத செய்திகள், நமக்கு முக்கியமானவற்றின் மீது கவனம் செலுத்தாதபடி மாற்றிவிடும்.
உங்கள் மனநிலையை மோசமாக மாற்றும் உள்ளடக்கங்களை தடுங்கள். குறிப்பாக சமூக வலைதளங்களில், உங்களுக்கு பிடிக்காத கணக்குகள், நபர்களின் உள்ளடக்கம் உங்களுக்கு தெரியாதபடி தடுப்பது நல்லது.
இவற்றை தவிர்த்து நிஜ உலகில் உங்களது நண்பர்களையும், சமூக வட்டத்தையும் மேம்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் சிந்தனைக்கு ஒத்த நபர்களுடன் பழகுங்கள். உங்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் கூட்டத்துக்கு நடுவே உங்களை வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் மனநிலையை எப்போதும் சிறப்பாக வைத்திருக்க உதவும்.
2. உட்புறத்தை மாற்றுங்கள்: உட்புறம் என்பது உங்களுக்குள் இருக்கும் விஷயங்களை மாற்றுவதாகும். அதாவது உங்களுடைய சிந்தனை, செயல்கள், ஈடுபாடுகள், பங்களிப்புகள் போன்றவற்றில் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். நீங்களாகவே உங்களைப் பற்றி தவறாக நினைப்பதை நிறுத்துங்கள்.
ஒவ்வொரு நாளையும் சிறப்பாகத் தொடங்குங்கள். காலைப் பொழுதை உங்களுக்கு ஏற்றதாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். பிறர் தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில், உங்களது நாளைத் தொடங்கி, உங்களை சிறப்பாக மாற்றும் விஷயங்களில் ஈடுபடுங்கள்.
உங்கள் வாழ்வில் கிடைத்த அனைத்திற்கும் நன்றியுணர்வுடன் இருங்கள். ஒவ்வொரு நாளையும் சிறப்பாக கட்டமைத்து, என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே வரையறுத்து செயல்படுங்கள். அது உங்களுக்கு சரியான ரிசல்ட் கொடுக்கவில்லை என்றாலும், உங்களது முயற்சி என்பது தவறாமல் இருக்க வேண்டும்.
நல்ல அனுபவங்களை சேகரியுங்கள். புதிய விஷயங்களை முயற்சித்துப் பார்த்து, அதன் உண்மையை நீங்களாகவே தெரிந்து கொள்ளுங்கள். பிறர் சொல்வதைக் கேட்டு எதையும் முயற்சிக்காமல் விட்டு விடாதீர்கள். இத்தகைய விஷயங்கள்தான் உங்கள் வாழ்க்கையை சுவாரசியமாக வைத்திருக்கும். எந்த அனுபவமும் இல்லாமல் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் ஒரே சூழலில் சிக்கி, வாழ்க்கை ஒரே வட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். அதிகப்படியான அனுபவங்கள் உங்களுக்கு பல வாய்ப்புகளைப் பெற்றுத் தரும்.
இந்த இரண்டு விஷயங்களை சரி செய்தாலே, தேவையில்லாத எதிர்மறைகளை நீங்கள் தவிர்த்து மனநிலையை எப்போதும் சிறப்பாக வைத்திருக்க முடியும்.