

சிலருக்கு ஒருவர் பசியோடு இருந்தால் அவரை சாப்பிட வைத்து பார்ப்பதில் ஆனந்தம். மற்றும் சிலருக்கு உதவி செய்தால் அதைப்பற்றிக் கொண்டு வளருவான் என்று தீர்மானித்து விட்டால், எந்தவித ஒரு தடையையும் தாண்டி பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவி செய்பவர்கள் உண்டு.
அது போல் தான் ஒரு பெரியவர். அவர் மிகவும் வசதியானவர் கிடையாது என்றாலும் அந்த ஊரில் இருந்த ஒரு பையன் நன்றாக படித்து ஒழுக்கமானவனாக இருப்பதைக் கவனித்து அவனுக்கு உதவ வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டார். அதனால் அந்தப் பையனை கண்காணிப்பதில் தீவிரமானார். பள்ளி ஆரம்பிக்கும் நாளில் சீருடையை அவர்தான் அந்தப் பையனுக்கு வாங்கித் தருவார். அதேபோல் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் நாட்களில் சாப்பிடுவதற்கு தட்டு, கிண்ணம், டம்ளர் போன்றவற்றை வாங்கி கொடுத்து அனுப்புவார்.
இப்படி சிறுசிறு உதவிகளாக செய்து வந்தார். அந்தப் பையன் நன்றாக படித்து வேலைக்கு செல்வதற்கு ஆயத்தமான பொழுது நோய்வாய் பட்டு போய்விட்டார்.
இதனை கவனித்த அந்த பெரியவர் மிகவும் ஒல்லியான தேகம் அந்த பையனுக்கு, பெற்றோர்கள் வேறு இல்லை. ஆதலால் கையில் காசு கிடைக்கும் பொழுதெல்லாம் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, சர்க்கரை என்று உடம்புக்கு எது நல்லது என்று தோன்றுகிறதோ அவற்றையெல்லாம் வாங்கி வந்து தான் சாப்பிடுவது போல் இரண்டு ஒன்று வாயில் போட்டுக் கொண்டு அதை அந்தப் பையனிடம் கொடுத்து சாப்பிட சொல்லுவார். "தான் சாப்பிடுவதற்காக வாங்கி வந்தேன்" என்று கூறி அவரை சாப்பிட வைத்து அழகு பார்ப்பார். இல்லையென்றால் அவன் சாப்பிட மாட்டானே என்பார். அதேபோல் அந்தந்த சீசனில் கிடைக்கும் காய்கறி பழம் போன்றவற்றையும் வாங்கித் தருவார்.
இதனால் அந்த மெலிந்த தேகம் சற்று சதை பிடிப்பாய் பார்ப்பதற்கு அழகாகமாறி இருந்தார். இதனால் அந்தப் பையனுக்கும் தன் தேகத்தைப் பற்றிய ஒரு தாழ்வு மனப்பான்மை நீங்கியது. இன்டர்வியூக்கு செல்லும் பொழுது ஆடை அணிந்து கண்ணாடியில் பார்த்தால் தன் தோற்றம் தனக்கே நம்ப முடியாததாக இருந்தது.
மனு போட்ட இடத்தில் இருந்து எல்லாம் அவரை அழைத்தார்கள். இரண்டு மூன்று இடங்களில் வேலை கிடைத்து எங்கு சேர்வது, எந்த வேலையை விடுவது என்று ஒரு தவிப்பு ஏற்பட்டது. ஆனால் நல்ல வேலையா தேர்ந்தெடுத்து சேர்ந்து விட்டார்.
அந்தப் பையன் வேலைக்கு சேர்ந்த பிறகு அவர் அந்தப் பையனை நாடி செல்வது, தொடர்ந்து உதவுவது இல்லை. நிறுத்திக் கொண்டு விட்டார். அவரிடம் ஏன் இப்படி இவ்வளவு நன்றாக செய்து ஒதுங்கி விட்டீர்கள் என்று கேட்டால் அதற்கு அவர் கூறும் பதில் இதுதான். "தேவையான நேரத்தில் நாம் உதவி செய்ய வேண்டும். அப்படி உதவி செய்யும் பொழுது நம் உழைப்பை வீணாக்காமல் அவன் பயன்படுத்திக் கொள்வானா என்று கவனிக்க வேண்டும். அப்படி பயன்படுத்துவான் என்றால் அது விரோதியின் மகனாக இருந்தால் கூட பரவாயில்லை உதவலாம். ஏனென்றால் அவன் படித்து முன்னேறி நாலு பேருக்கு உதவுவான். இப்படித்தான் உதவி செய்யும் பண்பு வளரும். நாம் உதவி முடிந்தவுடன் அதையே அவன் நினைவு கூறும் வகையில் சொல்லிக் காட்டவும், அவன் திருப்பித் தர வேண்டும் என்று எதிர்பார்க்கவும் கூடாது" என்று கூறினார்.
ஆதலால் உதவி செய்பவர்களே இதை கொஞ்சம் கவனியுங்கள். தான் செய்யும் உதவியால் ஒருவரின் வளர்ச்சி மேலோங்கும் என்றால் கஷ்டப்பட்டாவது உதவுங்கள். பிறகு பெரியவர் சொல்வது போல் செய்த உதவியை மறந்து விடுங்கள். அது தான் நீங்கள் உதவியதின் தனிச்சிறப்பு.
நாம் மட்டும் வாழ்வது வாழ்வல்ல; பிறரையும் வாழ்விப்பதே வாழ்க்கை. வள்ளுவன் மருந்து மரத்தை உதவுவதற்கு உமையாக்குகிறான். மருந்து மரத்தின் அனைத்து உறுப்புகளும் பயன்படுவது போல் உங்கள் வாழ்வின் அனைத்து நாட்களும் பிறருக்கு ஈந்து இறவா புகழைப் பெறுங்கள்.