அது உண்மையைத் தேடும் உச்சம். வாழ்விலும் இயற்கையிலும் நிலவும் அழகையும் உண்மையையும் காணும் முயற்சிதான் அறிவின் சாதனைகள். சில சமயம் அந்த சாதனைகள் தற்பெருமை யுடன் தொடர்பு கொண்டிருக்கின்றன. சுயலாபம் இழையோடும் குறிக்கோள்களாக மாறிவிடுகின்றன.
ஆனால் சாதனைகள் இந்த குணங்களால், தற்பெருமையால், சுயலாபத்தால் ஏற்பட்ட விளைவுகள் அல்ல. சாதனைகள் எல்லாம் ஒரு மனிதன் நெடுங்காலம் தொடர்ந்து கஷ்டப்பட்டதன் விளைவு. தூய்மையான தன்னலமற்ற எண்ணங்களின் முடிவு. புனிதமான ஆசைகளின் உந்துதலால் ஏற்பட்ட பூரணத்துவம்தான் ஆன்மிக சாதனைகள்.
உயர்ந்த எண்ணங்களிலும் பெருந்தன்மையான எண்ணங்களிலும் உருவாகி அதிலே நிரந்தரமாக வாழ்பவன் தேர்ந்த ஞானம் பெற்றவனாகவும் புனிதமான மனிதனாகவும் ஆகிறான். சூரியனால் உச்சத்தில் ஜொலிப்பது எவ்வளவு நிச்சயமோ சந்திரன் பௌர்ணமியன்று தண்ணொளி வீசுவது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமான நிலை அவனுக்கு வந்தே தீரும்.
முயற்சி நம் தலையில் சூட்டும் மணிமகுடம்தான் சாதனைகள்.எண்ணங்களின் வெளிப்பாடுதான் அவை. சுயக்கட்டுப்பாடு, உறுதியான தீர்மானம், தூய்மை நேர்மை எண்ணங்களைத் சரியான திசையில் செலுத்தும் மனோபாவம் ஆகியவற்றை உள்ளவன் எழுகிறான் உயர்கிறான். மிருக உணர்வுகளினால், சோம்பலினால், தூய்மையற்ற நிலையினால் நேர்மையற்ற செயல்களினால், குழப்ப எண்ணங்களால் மனிதன் வீழ்கிறான்.
ஓரு மனிதன் உலகில் உயர வெற்றியை அடையமுடியும். ஆன்மிக வெளியில் உயர்நிலைகளைத் தொடமுடியும். அதேபோல் ஆணவம், சுயநலம், நேர்மையற்ற எண்ணங்கள் அவனை ஆட்கொள்ளும் போது அவன் தாழ்ந்து போக முடியும்.
நேர்மையான எண்ணங்கள் தந்த வெற்றியை சரியாக கண்காணிப்பதன் மூலம்தான் நிரந்தரமாக்க முடியும். பாதுகாக்க முடியும். வெற்றி வந்ததும் பலர் முன்பு கொண்டிருந்த மன உறுதியை இழந்து விடுகிறார்கள் தோல்வி அவர்களை வேகமாகத் தழுவுகிறது.
தொழிலிலும் சரி, அறிவியல் அல்லது ஆன்மிகத் துறையானாலும் சரி, சாதனை என்பது எண்ணங்களை சரியான திசையில் செலுத்துவதைப் பொறுத்து இருக்கிறது சிறிய அளவில்.
சாதனைகளை சாதிக்க விரும்புகிறவர்கள் சிறிய அளவில் தியாகம் செய்தால் போதும். அதிகமாக சாதிக்க விரும்புபவர்கள் அதிக தியாகம் செய்ய வேண்டும். மகத்தான சாதனைக்கு மகத்தான தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.