மிகப்பெரிய உருவமும், பலமும் கொண்ட யானையை சிறியதாய் இருக்கும் யானைப்பாகன் அதன் மீது அமர்ந்துகொண்டு எப்படி கட்டுப்படுத்துகிறான்? என எப்போதாவது சிந்தித்ததுண்டா? இந்த ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொண்டால், மூளையின் செயல்பாட்டையும் அதனால் நம்முடைய வாழ்க்கை எந்த அளவுக்கு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
ஒரு யானையை யானைப்பாகன் கட்டுப்படுத்துவதற்கு அவனுடைய மூலையில் ஏதோ ஒரு ஓரத்தில் யானையை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கைதான் காரணமாக இருக்கிறது. அது மற்ற பாகன்கள் யானையை கட்டுப்படுத்துவதால், அதைப் பார்த்து இவனுக்கு வந்த தைரியமாக இருக்கலாம். அல்லது யானையை எப்படி கட்டுப்படுத்தலாம் என்ற யுக்தியை இவன் தெரிந்து கொண்டதால் அந்த தைரியம் வந்திருக்கலாம்.
எனவே நம் வாழ்வில் மிகப்பெரிய விஷயங்களை நம் கட்டுக்குள் வைத்திருக்க, அவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்ற யுக்தி நமக்குத் தெரிந்திருந்தால் போதும். ஆனால் நம்மில் பலர் இத்தகைய யுக்திகளை தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில், ஒரு மனிதனை பல விஷயங்கள் அவனை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
ஒருவன் தனக்கான ஒன்றை தைரியமாக செய்யாமல் போவதற்கு, பிறரால் நாம் ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்ற மனநிலை முதல் காரணமாக உள்ளது. ஏனெனில் நாம் அனைவருமே சமூகங்களைச் சார்ந்து வாழ்வதால், அதிலிருந்து சரியான அங்கீகாரம் கிடைக்காதபோது ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதன் காரணமாகவே பலர் புதிய முயற்சிகளில் தைரியமான முடிவுகளை எடுப்பதில்லை.
அதேபோல உங்களுடைய மூளை சில உணவுகளுக்கு அடிமையாகிவிடுகிறது. உணவிற்கும் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்? என நீங்கள் கேட்கலாம். ஆனால் உணவுதான் நம் உடலையும் மனதையும் நிர்ணயிக்கிறது. உடல்நலம் சரியாக இருந்தால் மனநலம் சீராக இருக்கும். மனநலம் சீராக இருந்தால் நம்முடைய செயல்கள் சிறப்பாக மாறி வாழ்வில் நல்ல நிலையை அடைய உதவும். இங்கே பலருக்கு, தினசரி நாம் எதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே தெரிவதில்லை. எல்லா நேரமும் ஒரே மாதிரியான உணவை உட்கொள்வதால், பல உடல் உபாதைகளில் சிக்கி பிரச்சனைகளை சந்திக்க நேர்கிறது.
இறுதியாக, நாம் வெற்றி பெற்றாலும், வெற்றி பெறவில்லை என்றாலும் நம் மனித இனம், உயிர் வாழ்தல் மற்றும் இனப்பெருக்கத்தை நம்முடைய டீஃபால்ட் எண்ணங்களாக விதைத்துக் கொண்டே இருக்கிறது. இந்த இரண்டிற்காக எல்லா தரப்பு மனிதர்களும் பல பிரச்சினைகளில் மாட்டிக் கொள்கிறோம் என்பதுதான் உண்மை.
இவை அனைத்தையும் கடந்து ஒரு மனிதன் அவ்வளவு எளிதில் வெற்றி பெற முடியாது. இவை அனைத்தையும் புரிந்து கொண்டு யானைப்பாகன் அசாதாரண யானையை சிறு நம்பிக்கை மூலமாக கட்டுப்படுத்துவது போல, உங்களின் மூளைக்கு வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் யுக்திகளை கற்றுக் கொடுங்கள். மற்ற விஷயங்களை உங்களது மூளை பார்த்துக் கொள்ளும்.