தனிப்பட்ட வளர்ச்சி என்பது சுய முன்னேற்றம், சுயக் கண்டுபிடிப்பு மற்றும் ஒருவரின் உண்மையான திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் வாழ்நாள் பயணமாகும். இந்த பயணத்தில் இலக்குகளை நிர்ணயித்து தொடர்ச்சியாக பல புதிய விஷயங்களைக் கற்பதால், வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே ஒருவர் தனிப்பட்ட வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவது மூலமாக, திறன்களை மேம்படுத்தி, அறிவை விரிவுபடுத்தி வாழ்க்கையில் முன்னேறலாம். இப்பதிவில் உங்களது உண்மையான ஆற்றல்களை வெளியே கொண்டு வர, நாம் எதிலெல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என்ற சில யுக்திகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
Growth Mindset: தனிப்பட்ட வளர்ச்சியில் நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டியது நம்முடைய மனநிலைக்குதான். அதுவும் வளர்ச்சி மனநிலையை ஏற்படுத்திக்கொள்வது மூலமாக, முயற்சி, பயிற்சி மற்றும் தோல்விகளிலிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு நம் திறமைகளை தொடர்ச்சியாக மேம்படுத்திக்கொள்ள முடியும். எனவே இத்தகைய மனநிலையை முதலில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
இலக்குகளை சரியாக அமைக்கவும்: இலக்கை நிர்ணயிப்பது தனிப்பட்ட வளர்ச்சியின் ஒரு முக்கிய அம்சமாகும். உங்கள் குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்குகளை தெளிவாகப் புரிந்து கொண்டு, அவற்றை எப்படி அடையப் போகிறீர்கள் என்பனவற்றை சரியாக வரையறுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக உங்கள் இலக்குகள் எப்படி இருக்கிறது என்பதை அவ்வப்போது கண்காணிக்கவும்.
தொடர்ச்சியான கற்றல் மற்றும் திறன் மேம்பாடு: வாழ்க்கையில் கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டிய ஒன்றாகும். ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் குறிப்பிட்ட கட்டத்திற்கு பிறகு கற்றலை முழுவதுமாக நிறுத்திவிடுகிறோம். நீங்கள் எந்த அளவுக்கு தொடர்ச்சியாக கற்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் புத்தி விசாலமடைந்து, பல திறன்கள் மேம்படும். எனவே புத்தகங்கள் படிக்கவும், ஆன்லைன் கோர்ஸ்களில் சேரவும், உங்கள் வாழ்க்கையை முன்னேற்றும் வாய்ப்புகளைத் தொடர்ச்சியாக தேடிக்கொண்டே இருக்கவும்.
மாற்றத்தை நோக்கி பயணியுங்கள்: “மாற்றம் என்பது மாறாதது” என்று நாம் டயலாக் கூறினாலும், எத்தனை பேர் தைரியமாக மாற்றத்தை எதிர்கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறிதான். வாழ்க்கையில் மாற்றத்தை நினைத்து பயப்படாதீர்கள். தைரியமாக புதிய விஷயங்களை நோக்கி பயணித்து, உங்களின் Comfort Zone-ல் இருந்து வெளிவாருங்கள். இது உங்களின் தனிப்பட்ட முன்னேற்றங்களுக்கும், தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கும், புதிய திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் வழி வகுக்கும்.
நேர்மறையான எண்ணம் கொண்டவர்களுடன் பழகுங்கள்: உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களது தனிப்பட்ட வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றனர். எனவே எப்போதும் உங்களை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரவு தரும் நபர்களை உங்களைச் சுற்றி வையுங்கள். உங்களுக்கு சரியான திசையை காட்டுபவர்களைத் தேடிச் செல்லுங்கள், அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடுங்கள். அது உங்களது தனிப்பட்ட வளர்ச்சியில் நிச்சயம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.