ஆழ்மனம் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கும் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அது இரவும் பகலும் விடாது ஓய்வின்றி செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. நேர்மறையான எண்ணங்களை 'என்னால் முடியும்' போன்ற நம்பிக்கைகளை மனதில் தொடர்ந்து ஊட்டும்போது ஆழ்மனதில் அவ்வெண்ணங்கள் வேரூன்றுகின்றன.
இடர்கள் ஏற்படும்போது ஆழ்மனம் எங்கிருந்தோ நம்பிக்கை வெளிப்படுத்தும் ஆதாரமாக மாறிவிடும். சிறந்தவற்றை எதிர்பார்த்து நல்ல நேர்மறையான உபயோகமான செயல்களை தொடர்ந்து செய்யும் பொழுது ஆழ்மனதில் உந்து சக்தி அச்செயலில் கூடவே வருவதை உணர முடியும்.
நீர், காற்று முதலியவற்றிற்கு வாசமோ, வடிவமோ கிடையாது. எந்த பாத்திரத்தில் நீரை தேக்கி வைக்கிறோமோ அந்த பாத்திரத்தின் வடிவத்தை நீர் பெறுகிறது. எந்த வாசனைகளை நீரில் சேர்க்கிறோமோ அவ்வாசனைகளையே நீர் பிடித்துக் கொள்கிறது. காற்றும் அதைப்போலவே செயலாற்றுகிறது. ஆழ்மனதும் நீர், காற்று போலத் தான். எந்த இயக்கங்கள், கனவுகள், தேவைகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றால் மனதை நிரப்புகிறோமோஅதன் பிரதிபலிப்பாகவே ஆழ்மனதும் மாறிவிடுகிறது. எந்த கோணத்திலிருந்து உலகை தொடர்ந்து காண்கிறோமோ அதே கோணத்தில் நம்மை வேரூன்ற வைக்கிறது ஆழ்மனம்.
சரியான தருணத்தில் உதவும் உற்ற நண்பனாக ஆழ்மனம் செயலாற்ற வேண்டுமெனில் பேட்டரியை சார்ஜ் செய்ய மின்சாரத்தை பயன்படுத்துவது போல மனதை சார்ஜ் செய்ய தொடர்ந்து சரியான இலக்கிற்கு தேவையான அறிவையும் கருத்துக்களையும் உட்செலுத்திக் கொண்டே இருத்தல் அவசியம்.
நாம் என்ன ஆகவேண்டும், எப்படி மற்றவர்களால் எண்ணப்பட விருப்பப்படுகிறோம், நம் சுயமதிப்பு என்ன என்பனவற்றை ஆழ்மனம் தீர்மானிப்பதால் தகுந்த பயிற்சி, முயற்சியின் மூலம் ஆழ்மனதின் வல்லமையை நம் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த முடியும்.
ஆழ்மனம் நீர் ,காற்று போன்று திடமின்றி இருப்பதால் புதுப்புது கருத்துக்களையும் அறிவையும் ஏற்றுக்கொள்ள எப்போதும் தயாராகவே இருக்கும். எந்தக் கருத்துக்களை ஆழ்மனதில் விதைக்க வேண்டும் என்பது குறித்து நாம் தீர்மானித்து செயல்பட்டால் உடலின் உந்து சக்தியாக மனம் மாறிவிடும்.
முயற்சி செய்து திரும்பத் திரும்ப மனதின் ஆழத்தின் தேவையான கருத்துக்களை பதிக்க வேண்டும். ஆழத்தில் விழும் விதை உயிர்பெற்று மரம் ஆவது போல் ஆழ்மனதில் உறுதியாக விதைக்கப்படும் எண்ணங்கள் தானாக வளரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஆழ்மனதில் திடமாக பதிந்தவை வார்த்தை வடிவம் பெற்று சொற்களாக உணர்ச்சிகளாக செயல்களாக வெளிப்படுத்தப்படுகிறது. எனவே வாழ்க்கை எந்த திசையை நோக்கி செல்ல வேண்டும் என்று விரும்புகிறோமா அந்த எண்ணங்களை ஆழ்மனதில் பதிக்க வேண்டும். எனவே, சிறிது சிறிதாக உயர்ந்த எண்ணங்களாலும் நேர்மறை சிந்தனைகளாலும் மனதை நிரப்ப வேண்டும். அதற்கு தேவையான அறிவை வளர்க்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.