

மற்றவர்களின் தேவையற்ற விமர்சனங்களையும் தொல்லைகளையும் கண்டு நாம் சோர்ந்து போகாமல், நம் இலக்கை நோக்கி உயரே பறந்தால், நம்மைத் தொந்தரவு செய்பவர்கள் தானாகவே விலகிப் போவார்கள். இதை புரிந்து கொள்ள ஒரு கதை.
ஒரு காட்டில் கழுகும், காகமும் பக்கத்து பக்கத்து மரத்தில் கூடு கட்டி வாழ்ந்து வந்தன. கழுகினுடைய கம்பீரத்தையும் புகழையும் எல்லோரும் சிறப்பாகப் பேசுவது, காகத்திற்கு எரிச்சலாக இருந்தது. ஒருநாள் அந்த கழுகு பறக்க முற்படும்போது, காகம் தன் மனதில் இருக்கும் வன்மத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்த கழுகின் மீது ஏறி அதைக் கொத்த ஆரம்பித்தது.
இதைப் பார்த்த மிருகங்கள், "சே! கழுகு எவ்வளவு பெரிய ஆள்? அதன் மேலேயே இந்த காகம் அமர்ந்து அதைக் கொத்துகிறதே!" என்று பேசிக்கொண்டன. இதைக் கேட்ட காகத்திற்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால் கழுகு இதைப் பொருட்படுத்தவில்லை; உயர உயரப் பறப்பதிலேயே கவனத்தைச் செலுத்தியது. ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும், காகம் கழுகை விட்டு விலகி வேறு திசையை நோக்கிப் பறந்து சென்றுவிட்டது.
சிறிது நேரம் கழித்து கழுகு தன் கூட்டுக்கு வந்தது. அப்போது அங்கிருந்த விலங்குகள், "ஏம்பா, நீ எவ்வளவு பெரிய ஆள்? உன் பலத்திற்கு முன்னால் அந்த காகத்தால் ஏதாவது செய்ய முடியுமா? அப்படி இருந்தும் நீ ஏன் அந்த காகத்தை எதுவும் செய்யவில்லை?" என்று கேட்டன.
அதற்குக் கழுகு, "என் ஆற்றலை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, நான் ஏன் இந்தக் காகத்திடம் சண்டையிடப் பயன்படுத்த வேண்டும்?" என்று கேட்டது.
இதைக் கேட்ட விலங்குகள், "அப்படியென்றால் நீ தோற்றுப்போனவன் ஆகிவிடுவாயே? உன்னைக் குத்திக் குத்தி அந்த காகம்தானே ஜெயித்தது?" என்று கேட்டன.
"மற்றவர்கள் பார்வைக்கு வேண்டுமானால் காகம் ஜெயித்தது போலத் தெரிந்திருக்கலாம். ஆனால் உண்மையில் நடந்தது வேறு. ஒரு என் அளவிற்கு உயரத்தில் பறக்கக்கூடிய ஆற்றல் எந்தப் பறவைக்கும் கிடையாது. நான் உயரப் பறக்கப் பறக்க, ஆக்சிஜன் (பிராண வாயு) பற்றாக்குறையால் காகத்தால் மூச்சுவிட முடியாமல் போனது. அதனால்தான் அது என்னை விட்டுப் பறந்தது. மற்றவர்கள் பார்வைக்கு காகம் ஜெயித்தது போலத் தெரிந்தாலும், உண்மையில் ஜெயித்தது நான்தான்."
அந்தக் கழுகைப் போலத்தான் (Eagle Formula) நாமும் இருக்க வேண்டும். மற்றவர்கள் நமக்குக் குடைச்சல் தரும்போது அதைக் கண்டுகொள்ளாமல் முன்னேறுங்கள். நம் கவனத்தைச் சிதறடிக்கும்போது கலங்காமல் முன்னேறுங்கள். நீங்கள் மேம்படும்போது, உங்கள் வாழ்க்கையும் தானாக மேம்படும்.