
மனித வாழ்க்கை என்பது நிலை இல்லாத ஒன்று. இருக்கும் நாட்களில் அதை பயனுள்ளதாக மாற்றினால் நமக்கும் பயன்படும். நம் எதிர்கால சந்ததிக்கும் பயன்படும். இருக்கும் நாளை நல்லபடியாக திட்டம் போட்டு செய்தால் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும்.
ஒரு அரசன் ஒருவன் கிராமப்புறம் வழியாக வந்து கொண்டிருந்தான். வழியில் தள்ளாடும் கிழவன் ஒருவர் வயலில் ஒரு மரக்கன்றினை நட்டுக் கொண்டிருந்தார்.
அதனைப் பார்த்து அரசன் என்ன கிழவரே! காடு வாவா என்கிறது வீடு போ போ என்கிறது இதுதான் உன் நிலை. இந்நிலையில் மரக்கன்றினை நட்டுக் கொண்டிருக்கிறீர். இம்மரம் வளர்ந்து பயனளிக்கும் வரையில் நீர் உயிரோடு இருப்பீர் என்ற நம்பிக்கை உமக்கு உள்ளதோ என்று கேட்டான்.
அதற்கு அந்த கிழவன் அரசே என் முன்னோர்கள் நான் பயன்படுத்துவதற்காக இந்த மரங்களை நட்டு சென்றுள்ளார்கள். அதுபோல நானும் என் பின்னால் வருபவர்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும். அதற்காக இந்த மரக்கன்று நட்டு கொண்டு இருக்கிறேன் என்றான்.
இதைக்கேட்ட அரசன் முதியவரே, உம் போன்றவர்களால் தான் நாடு நலமாகவும் வளமாகவும் உள்ளது என்று கூறி அவரை கட்டித் தழுவிக்கொண்டு தமது பாராட்டினைத் தெரிவித்தார்.
இந்த அரசன் செய்தது சரிதானே... அதேபோல் அந்த முதியவரைப்போல நாமும் நம் வாழ்நாளில் இருக்கும் நாட்களில் பயனுள்ள மரங்களை நடுதல் முதியவர்களுக்கு உதவி செய்தல் உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்தல் இதுபோன்ற பல நல்ல செயல்களை செய்தால் வாழ்நாள் என்றும் நமக்கு மகிழ்ச்சியான நாளாக கழியும்.
நம் எதிர்கால சந்ததியினர் நம்மை உதாரணம் காட்டி பேசுவார்கள். (Victory is in your hands!) நம் வாழ்நாளும் பயனுள்ளதாக இருந்ததாக அமையும். நாம் செய்யும் செயல்கள்தான் நமக்கு பிறகும் நம்மை பற்றி பேச வைக்கும்.