

வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றி பெற அறிவு மட்டும் போதாது; செயல் தான் முக்கியம். ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்வது முதல் படி; அதை நடைமுறைப்படுத்தி முடிப்பதுதான் உண்மையான பலனை தரும். தொடர்ந்து பயிற்சி, நேர மேலாண்மை, தெளிவான இலக்கு, திட்டமிடல், கவனச் சிதறலை தவிர்த்தல் ஆகியவை சேர்ந்து செயல்திறனை உயர்த்தி நம்மை நிபுணராக மாற்றும்.
எதைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பது முதல் படியாக இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்தி முடிப்பதுதான் (execution) வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றியைத் தரும். வெறும் யோசனைகள் அல்லது தகவல்கள் எந்த மாற்றத்தையும் தராது. அதைச் செய்து முடிக்கும் பொழுதுதான் திட்டவட்டமான முடிவுகள் கிடைக்கும்.
ஒரு விஷயத்தை நாம் செய்யும் பொழுதுதான் அதில் உள்ள சிரமங்கள் புரியும். அதைத் தீர்க்கும் வழிமுறைகளை கற்றுக் கொள்வதுடன், அதை எப்படி மேம்படுத்துவது என்ற அனுபவமும் கிடைக்கும். எந்த ஒரு செயலையும் பாதியில் விடாமல் முடித்துக் காட்டுவது நம் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.
வெறும் அறிவு மட்டும் ஒருவரை வெற்றியாளராக மாற்றி விடாது. செயலே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. ஒரு செயலை எப்படி செய்யவேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பது மட்டும் போதாது. அதை செய்து முடிக்கும் போதுதான் முழுமையான பலன் கிடைக்கும்.
ஒருமுறை செய்வதை விட ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப செய்யும் பொழுதுதான் அதில் நாம் நிபுணத்துவம் பெறமுடியும். பயிற்சியே திறமையை வளர்க்கும். சிந்தனைகளும் திட்டங்களும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். ஆனால் செயல் மட்டுமே நிஜ உலகில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.
இதனை ஒரு எளிய உதாரணம் கொண்டு விளக்கலாம். நீச்சல் அடிப்பது எப்படி என்று புத்தகத்தில் படிப்பதைவிட தண்ணீரில் இறங்கிப் பழகினால் மட்டுமே நீந்த முடியும். அதேபோல் ஒரு தொழிலைத் தொடங்குவது எப்படி என்ற பிசினஸ் பிளான் வைத்திருப்பதைவிட அதைக்களத்தில் இறங்கி நடத்திக் காட்டுவதே முக்கியம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அறிவு என்பது விதை, செயல் என்பதுதான் அறுவடை!
ஒரு விஷயத்தை தெரிந்திருப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், அதைத் திறம்பட செய்து முடிக்க நமக்கு சில முக்கியமான திறன்கள் தேவை. புத்தக அறிவை விட களத்தில் இறங்கி வேலை செய்யும்போது ஏற்படும் நடைமுறை அனுபவம் மிகவும் முக்கியம். வேலை செய்யும் பொழுது ஏற்படும் எதிர்பாராதத் தடைகளையும், பிரச்னைகளையும் சமாளிக்கும் திறனும், கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் அந்த வேலையை சரியாக முடிப்பதற்கு நேர மேலாண்மை என்பதும் அவசியம்.
தொடர்ச்சியான பயிற்சி மூலம் எந்த ஒரு செயலையும் தொடர்ந்து செய்வதன் மூலம் அதில் முழுமையான திறன் பெற முடியும். அறிவு என்பது ஒரு கதவைத் திறப்பதற்கான 'சாவி' போன்றது. ஆனால் அந்தக் கதவை திறந்து இலக்கை அடைவது நம் 'முயற்சி' மற்றும் 'செயல்பாடுகளால்' மட்டுமே முடியும்.
எந்த ஒரு செயலையும் திறம்பட செய்து முடிக்க தெளிவான இலக்கு, முறையான திட்டமிடல் மற்றும் கவனச் சிதறலை தவிர்த்தல் போன்றவை மிகவும் அவசியம். மிக முக்கியமான அல்லது கடினமானப் பணிகளை முதலில் முடிக்க வேண்டும்.
ஒவ்வொரு சிறிய பணிக்கும் குறிப்பிட்ட கால அளவை ஒதுக்கி அதைத் தவறாமல் பின்பற்றினால் நம்மால் எந்த ஒரு செயலையும் தொய்வில்லாமல் திறம்பட முடிக்க இயலும்.
நினைத்த செயல்களை முடிக்கும் வரை சமூக வலைதளங்கள், தேவையற்ற விவாதங்கள் போன்ற கவனத்தைச் சிதறடிக்கும் விஷயங்களை சிறிது ஒதுக்கி வைக்கலாம். பணியை முடித்த பிறகு அதில் கிடைத்த அனுபவத்தை அடுத்த முறைக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவையே நம்மை எந்த ஒரு விஷயத்தையும் திறம்பட செய்வதற்கு உதவும்.
நடைமுறை அனுபவத்தைப் பெறுவதன் மூலம், எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக்கொண்டு, உங்கள் இலக்குகளைத் தடையின்றி அடைவதற்கான முழுமையான நிபுணத்துவத்தைப் பெறலாம்.