ஒரு மனிதனின் மிகப்பெரும் அடையாளமே அவனது தன்னம்பிக்கைதான். தன்னம்பிக்கை உள்ள மனிதன் பிற மனிதர்களை எளிதில் கவர்வான். ஒருவருக்கு தன்னம்பிக்கை இல்லை என்பதை அவர் பேசும் வாக்கியங்களை வைத்து கண்டுபிடிக்கலாம். அதை எப்படி மாற்றி பேசலாம் என்றும் இந்தப் பதிவில் பார்க்கலாம்
1. ‘’எனக்கு சரியாத் தெரியல. ஆனா’’ என்று ஒருவர் சொல்லும்போது தன் தயக்கத்தையும், தான் சொல்வது தவறாக போய்விடுமோ என்ற அவ நம்பிக்கையும் சேர்ந்து இதில் தெரிகிறது. ‘’எனக்கு ஓரளவு தெரியும்’’ என்று சொல்வது சரியாக இருக்கும்.
2. ‘’நான் சொல்றது தப்பா கூட இருக்கலாம்’’ என்ற ஆரம்பிக்கும்போது மையொழுகும் பேனாவை வைத்து வெள்ளைத் தாளில் எழுதுவது போல இந்த வாக்கியம் ஒலிக்கிறது. இதற்கு பதிலாக ‘’நான் சொல்றது சரியானு பாருங்க’’ என்று சொல்வதுதான் சரி.
3. ‘’உங்கள தொந்தரவு படுத்தணும்ங்கறது என்னுடைய எண்ணம் இல்ல’’ என்று சொல்வதற்கு பதிலாக ‘’உங்ககிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் நான் பேசணும். ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி நான் சுருக்கமா சொல்றேன்’’ என்று சொல்லலாம்.
4. ‘’இது ஒரு முட்டாள்தனமான ஐடியாவா இருக்கலாம்’’ என்று சொல்வதற்கு பதிலாக, ‘’நான் ஒரு ஐடியா சொல்றேன். அது ஓகேவானு பாருங்க’’ என்று சொல்லலாம்.
5. ‘’நீங்க இதுக்கு ஒத்துக்குவீங்களான்னு தெரியல’’ என்று சொல்வதற்கு பதிலாக ‘’நான் ஒன்னு சொல்றேன். நீ கண்டிப்பா ஒத்துக்குவீங்கன்னு நம்புறேன்’’ என்று சொல்லலாம்.
6. ‘’நான் சொல்றத நீங்க கவனிக்கணும்னு அவசியம் இல்ல’’ என்ற சொல்லும் போது ‘இதைக் கவனிக்கவே தேவையில்லை’ என்கிற தொனி தென்படுகிறது. ‘’ நான் சொல்லப் போறதை நீங்க காது கொடுத்து கேட்பீங்கன்னு நம்புறேன்’’ என்று சொல்லலாம்.
7. ‘’இது சரியானு தெரியல’’ என்று சொல்லும்போது கேட்பவர்கள் அதை புறக்கணிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ‘’இது ஓரளவு சரியாக தான் இருக்குன்னு நினைக்கிறேன்’’ என்று சொல்லலாம்.
8.’’ இதை சொல்றதுக்கு எனக்கு தகுதி இருக்கான்னு தெரியல’’ என்று சொல்லும் போது ஒருவர் தன்னையே மிகவும் தாழ்த்திக் கொள்கிறார். தன்னம்பிக்கை உள்ள மனிதர்கள் அவ்வாறு பேசுவதில்லை. அதற்குப் பதிலாக ‘’இந்த கேள்வியை கேட்பதற்கு சரியான சிறந்த நபர் நீங்கள்தான் என்று நினைக்கிறேன்’’ என்று சொன்னால் அது மிகவும் சிறப்பாக இருக்கும்.
தன்னம்பிக்கை என்பது வெளியில் இருந்து வரும் விஷயம் இல்லை. ஒருவரின் தோரணை, பார்வை, பேச்சு, செயல்கள் போன்றவையே அதை கட்டமைக்கின்றன.