-பி.ஆர். லக்ஷ்மி
குடும்பம் என்றால் கணவன், மனைவி, குழந்தைகள் நிறைந்தவர்கள் என்ற பொதுவான பொருள் உண்டு.
திருமணம் செய்யாமல் வாழ்பவர்கள்.
கணவன் அல்லது மனைவி இறந்தவர்கள் தனிமையில் தங்கள் குடும்பத்தை அமைத்து வாழ்பவர்கள்.
திருமணம் செய்யாமலேயே குடும்பமாக வாழ்பவர்கள் என சொல்லலாம்.
குடும்பம் என்ற வட்டத்திற்குள் வாழ ஒரு நாள் பொழுதிற்கு என்ன தேவை?
நல்ல மகிழ்ச்சி, ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கம் இவை மூன்றும்தான் முக்கியம்.
இவை மூன்றும் பணம் இருந்தால் தானாக வரும்.
அப்படி பணம் சம்பாதிக்க என்ன வழி?
அவரவர் உடல் பலம், படிப்பு பலம், மூளை பலம் இவற்றைப் பயன்படுத்தி சம்பாதிக்கலாம்.
பொய் சொல்லி வாழும் வாழ்க்கை வாழ்க்கையாகாது.
இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்று சம்பாதித்தால்தான் குடும்ப வண்டி ஓடும். அப்படி இருக்கும்போது வயதானவர்கள் வீட்டில் இருந்தால் சுமை என்று நினைக்கிறார்கள்.
1960களில் இல்லாத புதுமையான வழக்கம் இன்று தலை தூக்கியுள்ளது. முதியோர் வீட்டில் இருந்தால் சுமை என நினைத்து அவர்களை முதியோர் இல்லத்தில் தள்ளி விட்டு இயந்திரத்தனமான பணம் சம்பாதிக்கும் உலகில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
வயதானவர்கள் வீட்டில் இருந்தால் குடும்பத்து உறுப்பினர்கள் வயதானவரின் இறுதிக்காலம் வரை கூடவே இருக்கவேண்டும். அதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் கடமை. பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பவர் களுக்கும், கூடப் பிறந்தவர்களுக்கும் நாம் செய்யும் கைம்மாறு இதுதான்.
நாம் இந்த உலகை விட்டுப்போகும்போது நகையையோ, பணத்தையோ வாரிக்கொண்டு செல்லப்போவது கிடையாது என்ற ஆழமான சிந்தனை நம்மில் விழுந்துவிட்டால் உலகம் நம் கைவசமாகும்.
பள்ளிக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணம் தேவையாக இருக்கிறது. இதற்கு மாற்றாக அரசு பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கலாம். தனியார் பள்ளியில் செலவாகும் ஃபீசை பிள்ளைகளுக்கு இடமாக வாங்கி வைக்கலாம் அல்லவா! நல்ல நகையாக வாங்கி வைக்கலாம்தானே!
பணி என்பது நாம் படிக்கும் படிப்பில்தான் இருக்கிறதே தவிர தனியார் பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ அல்ல!
நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது நாமாக தேடிக்கொள்வதுதானே!
உட்கார்ந்து யோசித்து ஒரு தாளில் நமது குடும்பத்தவருடன் பேசி எழுதச் சொல்லவேண்டும்.
ஒவ்வொருவருடனும் பிடித்தவை, பிடிக்காதவை என எழுதச் செய்யவேண்டும்.
தினமும் ஒரு மணி நேரமாவது குடும்பத்து உறுப்பினர்களுடன் செலவு செய்யவேண்டும்.
திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் சொந்தம் என முகம்பார்த்து பரிமாறும் காலம் மாறி அவர்களின் படிப்பு, சொத்து, நகை இவற்றைப் பார்க்கும் காலமாக மாறியுள்ளதை நினைக்கும்போது மகிழ்ச்சி எப்படி வரும்? அதற்குப் பெயர் பொறாமை.
பொறாமை எப்போது மாறும்?!
நல்ல நூல்களை ஆழ்ந்து கற்கும்போது இயல்பாக இப்பொறாமை எண்ணங்கள் நம்மை விட்டு அகலும்…
படிக்காதவர்கள் நாங்கள் என்ன செய்வது எனக் கேட்பவர்கள் நல்ல சான்றோர்கள் கூறும் மொழிகளைக் கேட்கலாமே!
மகிழ்ச்சியாக குடும்பம் நடத்த இதுதானே வழிகள்!!