-ராதாரமேஷ்
வாழ்வின் நீண்ட தூர மாரத்தானில் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களே! வெற்றியைப் பற்றி நம்மில் சிந்திக்காதவர் எவருமில்லை. ஆனால் தோல்வியை நாம் சிந்தித்ததுண்டா? அந்த தோல்வி கொடுக்கும் அனுபவங்களை நாம் என்றாவது கருத்தில் கொண்டதுண்டா?
உங்களுக்கு தெரியுமா! வெற்றி என்பது பெரும் கற்கண்டை போன்றது. அதில் சுவைப்பதற்கு இனிப்பைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் தோல்வி என்பது பல சுவைகளை கூட்டிச் செய்த உணவைப் போன்றது. அதில் ரசிப்பதற்கும் ருசிப்பதற்கும் ஆராய்வதற்கும் அனுபவிப்பதற்கும் நிறைய உண்டு.
ஒரு தோல்வி நமக்கு என்னவெல்லாம் கொடுக்கும் தெரியுமா?
நம்மை முதலில் நிதானப்படுத்தும். நமக்குள் பொறுமையை வளர்க்கும். சரியான ஒரு திட்டமிடலை ஏற்படுத்தும். நம்மை நாமே புரிந்து கொள்வதற்கும் நம்முடைய இலக்கை அடைவதில் நமக்குள்ள சிக்கல்களை கண்டறிவதற்கும் அது மிகப் பெரிய திறவுகோலாய் அமையும்.
தோல்வியை தழுவாத ஒரு மனிதன் அடையும் வெற்றியானது கதவுகளைப் பூட்டிக் கொண்டு சாவியை தொலைத்து விட்டு பூட்டிய கதவுக்குள் வாழும் வாழ்க்கையை போன்றது. அதில் எந்த ஒரு சுவாரசியமும் இருக்கப் போவதில்லை. ஆகவே, மனிதனுக்கு தோல்வி என்பது மிகப்பெரிய அனுபவம், பின்னால் அடையக் கூடிய வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கு அது ஒரு மிகப்பெரிய வழிகாட்டி.
ஒருபோதும் தோல்வியை நினைத்து மனம் தளராதீர்கள், உங்களை நீங்களே வெறுக்காதீர்கள், தோல்வி நமக்கு கற்றுத் தரும் பாடங்களை இந்த உலகில் கற்றுத் தருவதற்கு வேறு எந்த ஆசிரியரும் இல்லை, அதுதான் வாழ்க்கையின் மிகப் பெரிய அழகே. எனவே வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வாருங்கள். ஒவ்வொரு நொடியும் மிகவும் கவனத்துடன் எதிர் கொள்ளுங்கள், போன பொழுதுகள் ஒருபோதும் திரும்ப போவதில்லை.
தோல்வி என்பது அறுசுவை விருந்து பரிமாறுவதற்காக வைக்கப்பட்ட இலையில் முதலில் வைக்கப்படும் உப்பை போன்றது. அறுசுவை உணவுகளின் சுவையை கூட்டவோ குறைக்கவும் செய்யும் மந்திர கலை அதன் மடியில்தான் உள்ளது, விரக்தியை தவிர்த்து வாழ்க்கையை வளமையோடு வாழுங்கள்.