50 வயதைக் கடந்து வாழ்வது என்பது ஒருவரது வாழ்க்கையில் மிக முக்கியமான மைல்கல். இதை பெரும்பாலும் “இரண்டாவது இன்னிங்ஸ்” என்று குறிப்பிடலாம். ஏனெனில், மக்கள் தங்கள் தொழிலில் நல்ல நிலையை அடைந்து, குடும்ப பொறுப்புகளைக் குறைத்து, ஓய்வு பெற தயாராக இருக்கும் காலமாகும். 50 வயதிற்கு பிறகான மனநிலை என்பது ஒவ்வொரு நபருக்கும் மாறுபட்டதாக இருந்தாலும், சில பொதுவான விஷயங்களும் இதில் இருக்கவே செய்கின்றன.
மகிழ்ச்சியின் காலம்:
50 வயதிற்கு மேற்பட்ட பலர் தங்கள் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாழ்க்கையில் அதிக அனுபவங்களைப் பெற்றுள்ளனர். எனவே, நல்லது கெட்டது என அனைத்துமே அவர்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த அனுபவங்கள் அவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொடுத்து மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது. அவர்களால் சிறிய விஷயங்களில் கூட மகிழ்ச்சியைக் காண முடியும்.
50 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலும் வலுவான குடும்பம் மற்றும் நண்பர்களின் ஆதரவைக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற உறவுகள் அவர்களுக்கு ஆதரவு, அன்பு மற்றும் மகிழ்ச்சியான உணர்வை வழங்குகின்றன. குறிப்பாக, இவர்கள் தங்களது தொழிலில் ஒரு நல்ல நிலையை அடைந்து, ஓய்வு காலத்திற்காக பணத்தை சேமித்து வைத்திருப்பார்கள். இது அவர்களுக்கு மன அமைதியையும், விரும்பும் விஷயத்தை செய்யும் சுதந்திரத்தையும் வழங்குகிறது.
சவால்கள் மற்றும் சோகங்கள்:
50 வயதிற்குப் பிறகு சிலர் சவால்கள் மற்றும் சோகங்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். அதில் முதலாவதாக உடல்நலப் பிரச்சனைகளை சொல்லலாம். இது அவர்கள் விரும்பும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் கடினமாக்குகிறது. 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெற்றோர், வாழ்க்கை துணை அல்லது நண்பர்கள் போன்ற அன்புக்குரியவர்களை இழக்க நேரிடும். இது மிகவும் வேதனையான அனுபவமாக இருக்கும்.
அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஓய்வு காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பதால், ஓய்வுக்குந் பிந்தைய வாழ்க்கை சமநிலையை நினைத்து சோகத்தில் இருக்கலாம். சிலருக்கு குடும்ப சூழல் காரணமாக ஓய்வு பெறுவதில் தாமதம் ஏற்பட்டு, 50 வயதிற்குப் பிறகும் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டிய தேவை இருக்கும் என்பதால், அவர்களது வாழ்க்கை சோகமானதாக இருக்கும்.
ஆனால், முடிந்தவரை உங்கள் உடல்நிலையையும் மன நிலையையும் ஆரோக்கியமாக வைத்திருந்தாலே 50 வயதிற்கு மேல் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். எனவே, அதிகமாக எதைப் பற்றியும் சிந்திக்காமல், உங்களது உடல் நலத்தின் மீது முழு கவனம் செலுத்துவது நல்லது. லேசான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு மற்றும் போதுமான தூக்கம், உங்களை எல்லா விதங்களிலும் புத்துணர்ச்சியாக இருக்க வைக்கும்.
இவற்றைப் பின்பற்றி மீதம் இருக்கும் காலத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும்.