
மனிதன் எங்கே போக விரும்புகிறானோ அங்கேதான் அவன் இருப்பிடம் என்றார் வான் பிரான் என்ற ஜெர்மன் நாட்டு விஞ்ஞானி. வான் பிரான் ஜெர்மனியிலிருந்து அமெரிக்கா வந்தவர். இருபது ஆண்டுகளாக அமெரிக்க வான்வெளித் திட்டத்தை நிர்வகித்து வருகிறார். சந்திரமண்டலத்துக்கு முதல் மனிதனை அனுப்பிவைக்க காரணமாக இருந்தவர் இவர்.
நம் வாழ்வில் முடியாது என பல காரியங்களை சொல்லுகிறோம். நம் தர்க்கவாத புலனறிவை வைத்துக்கொண்டு முடியாது என முடிவு கட்டிவிட்டால் போகிற பாதையின் முகப்பையே நாம் கதவை. இறுக்கி சாத்திவிடுகிறோம். முடியும் என்று எண்ணும்போதுதானே வழி பிறக்கும்.
குறிக்கோள் அல்லது இலட்சியம் என்பது நம் மனதில் சங்கிலித் தொடராக எண்ணங்களை ஏற்படுத்துகிறது. லட்சியம் வலுப்பெற ஆக்க சக்தி செயலாக மாறுகிறது. செய்ய விரும்புவதை வாழ்க்கையில் சாதிக்க முயலவேண்டும்.
நாம் ஆசை மட்டும்தான் படுகிறோம். ஆசை என்பது பாறை மீது ஓடும் தண்ணீர்போல். தண்ணீர் உள்ளே இயங்குவதில்லை. ஆசை என்பது மேலெழுந்தவாரியான நினைப்பு. ஒரு உருது பழமொழி உண்டு "ஆசைகள் குதிரைகள் ஆனால் பிச்சைக்காரர்கள் கூட சவாரி செய்வார்கள், என்று. வெறும் ஆசையினால் காரியம் நிறைவேறும் என்றால் சோம்பேறி பிச்சைக்காரர்கள் கூட ஆனந்தமாக குதிரையில் போவார்கள் என்கிறது பழமொழி.
லட்சியம் தீர்மானிக்கப்பட்டுவிட்டால் நாளடைவில் பாதை தெரியும். பாதையில் நடக்கும்போது லட்சியம் தீபமாக வழிகாட்டும். ஆரம்ப நிலைகளில் பெரிய லட்சியங்களை மனதில் கொள்ளக்கூடாது. பெரிய சாதனைகளை சாதிக்க முடியாதபோது ஏமாற்றம் ஏற்படுகிறது.
ஒருமுறை தோற்றால் மனம் தளரக்கூடாது. அடுத்தமுறை வெற்றி அடைவேன் என்ற நம்பிக்கை வேண்டும். எளிதாக சாதிக்கத்கூடிய காரியங்களைக் கொடுத்து குழந்தைகளை உற்சாகமூட்டுங்கள் என்கிறார்கள் மன நூலார். சிறிய சாதனைகள் மனதில் ஒரு பழக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த அனுபவம் பின்னால் பெரிய லட்சியங்கள் சாதனையாவதற்கு வழி காட்டுகிறது. "என் மகளுக்கு ஒரு காரியம் உருப்படியாகச் செய்யத் தெரியாது" என்று திட்டும் தாய் குழந்தையின் மனதில் எத்தகையதோர் எண்ண அமைப்பை உருவாக்குகிறார் என்பதை யோசித்துப்பாருங்கள்.
குழந்தைகள் தீர்மானங்களில் தவறு செய்யும்போது கரித்துக்கொட்டாமல் "போனால் போகிறது. அடுத்தமுறை நன்றாகச் செய்ய" என்றுதான் அவர்களிடம் கூறவேண்டும். இளம் உள்ளங்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்த வேண்டும். மாறாக அவர்களை கேவலமாக்கி சிறுமைபடுத்துவதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தையே பாழாக்குகிறோம்.
அதே போலத்தான் நம் மனமும். நம் சிறு சாதனைகளை பாராட்டுவதன் மூலம் நாம் வெகுதூரம் போகலாம். சிறு சாதனைகளில் ஏற்படும் வெற்றி, லட்சிய தீபமாய் நமக்கு வழி காட்டும்.