ஒருவர் தன் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான அறிகுறிகளை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
சோம்பேறித்தனம்,
எதையும் முயற்சிக்காமல் இருப்பது,
நேரத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பது,
பணத்தின் பின்னால் மட்டுமே ஓடுவது என்று பல விஷயங்களைச் சொல்லலாம்.
ஆனால் பலர் கவனிக்காத ஒரு குறிப்பிட்ட விஷயம் என்னவென்றால், தன்னை சிறப்பிக்கும் விஷயங்களை அவ்வப்போது பிறரிடம் எடுத்துரைப்பது. அது உண்மையாக இருந்தாலும் பரவாயில்லை, பலர் தங்களைப் பற்றிய பொய்யான நல்ல பிம்பத்தை ஏற்படுத்த முயல்வார்கள்.
தன்னை சிறப்பித்துக் காட்டும் செயல் மனிதர்களுக்கு இயல்பான ஒன்று என நீங்கள் நினைத்தாலும், அதை அதிகமாகச் செய்வது உண்மையில் நேர விரயம் தான்.
(அதுபோன்ற நபர்களை நாம் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.)
தான் செய்யும் அனைத்தையும் ஸ்டேட்டஸ் போட்டுத் தள்ளுவார்கள்.
தன்னை சிறப்பிக்கும் எதையாவது ஒன்றை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
இலைமறை காய்மறையாகவும் அவர்களைப் பற்றிய விஷயங்களை நம்மிடம் புகுத்துவார்கள்.
தான் வெளிப்படையாக இருக்கிறேன் என்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்வார்கள் சிலர்.
ஆனால் அவர்கள் சொல்லும் விஷயங்கள் செயலில் இருக்கிறதா என்று பார்த்தால், நிச்சயமாக இருக்காது. அவர்களின் செயலை வைத்து நாமே ஒரு நாள் அதை கண்டுபிடித்து விடலாம், இவர்கள் வெறும் வாய் வார்த்தை பேசுபவர்கள் என்று. நமது நட்பு வட்டத்தில் யாராவது ஒருவராவது இப்படி இருப்பார்கள்.
அவ்வாறு செய்வதால் 5 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை என்று சுற்றி இருப்பவர்களுக்கு தெரியும்.
ஆனால் அவர்களுக்கு அதைப் பற்றி ஏதும் தெரியாது. ஏனென்றால் அவர்கள் அந்த போதைச் சுழலில் மாட்டி இருப்பார்கள்.
அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இவரைக் கூறலாம். இவர்தான் ரஷியன் ஹல்க். தன்னை Hulk போன்று பிறரிடம் காட்டிக் கொள்ள வேண்டி, இவர் செய்த செயல் இவருக்கே விபரீதமாக முடிந்துவிட்டது.
ஹல்க் போன்று மாற வேண்டும் என்ற ஆசை தவறல்ல, ஆனால் அதற்கு குறுக்கு வழியை பயன்படுத்தி பிறருடைய கவனத்தை ஈர்க்க முயற்சித்தார். 6 லிட்டர்களுக்கும் அதிகமான ஸ்டெராய்டு எண்ணையை தனது கையில் ஊசி மூலம் ஏற்றிக்கொண்டார்.
தொடக்கத்தில் அவர் எதிர்பார்த்த மக்களுடைய கவனம் அவருக்கு கிடைத்தது. அதனால் பிரபலமாகவும் மாறினார். ஆனால் எத்தனை காலத்திற்கு தான் ஒரு பொய்யானது தாக்குப்பிடிக்கும்.
அவர் உள்ளே செலுத்திய ஸ்டெராய்டு சில மருத்துவ ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தியது. தன் அழகிய கைகளின் தோற்றமே முற்றிலும் பாழாகிவிட்டது.
தன்னை பலசாலியாக மக்கள் பார்க்க வேண்டும் என நினைத்தவரை, மக்கள் கோமாளியாகவே பார்த்தார்கள்…
என்ன ஆனாலும் உண்மை ஒருநாள் வெளியே வரும்.
பிறரை ஈர்க்க பொய்யாகக் காட்டிக்கொள்வது, அப்பட்டமான நேர விரயம்…