யாருக்காக இப்படித் தியாகம் செய்கிறீர்கள்?
-மரிய சாரா
இன்றைய காலகட்டத்தில் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் ஓய்வு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பணம், பெயர், புகழ், வசதி இவற்றின் பின்னால் ஓடும் இடைவிடா ஓட்டத்தில், வாழ்க்கையைக் கொஞ்சம் நின்று, நிதானித்து, ரசித்து வாழ மறக்கிறோம். நல்ல நிம்மதியான ஓய்வு தரும் புத்துணர்ச்சியை இந்த உலகத்தில் யாராலும், எந்தப் பொருளாலும் தரவே முடியாது.
முன்பெல்லாம் மனிதர்களுடன் மனிதன் அதிகமான நேரத்தைச் செலவிட்டான். ஆனால் இன்று? அனைத்தும் கணினி மயம், கைப்பேசி மயம். ஓய்வாக இருக்கும் நேரத்தில்கூட shorts, reels games என மூழ்கி இருக்கும் நிலைதான் எங்கும். இரவில் பாதி நேரம் வரை கண்முழித்துக்கொண்டு இருந்துவிட்டு, பகலில் வேலை என உறங்கி ஓய்வெடுக்க நேரத்தைச் செலவிடாமல் போவதால் இளவயதிலேயே பல வியாதிகளும் மரணங்களும் இப்போதெல்லாம் அதிகமாகப் பார்க்கிறோம்.
வாழ்வில் சாதிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதெல்லாம் மிகச்சரியான விஷயங்கள்தான். அதே சமயம் உடலைப் பேணி பாதுகாப்பதும் நமது முக்கியக் கடமைதான். இரவு நிம்மதியான உறக்கம் என்பது உடலுக்கு மட்டுமல்ல, நாள் முழுக்க நமக்காக யோசித்துக்கொண்டிருக்கும் நமது மூளைக்கும் தேவைப்படும் மிக முக்கியமான ஒன்றாகும்.
ஓய்வில்லாமல் உழைக்கும்போது, மின்னணு சாதனங்கள்கூட வெடிக்கிறதை நாம் பார்க்கிறோம். அதைப்போலத்தான் நமது மூளையும் உடலும். மூளைக்கு நல்ல ஆழ்ந்த உறக்கம் இல்லையென்றால் stress, depression, anxiety முதலிய மனம் சார்ந்த பிரச்னைகளும் அதிகமாக நம்மை வந்து சேரும். உடலுக்கு ஓய்வில்லையென்றால் இதயம் தொடர்பான வியாதிகள், ரத்த அழுத்தம் ஆகியவை நம்மை வந்து சேர்ந்துகொள்ளும்.
உடலின் வியாதிகளுக்கு மருத்துவமனைகள் பெருகிக்கொண்டே வருவதைப்போலவே மன நலம் சார்ந்த நிறுவனங்களும் பெருகிக்கொண்டே வருகின்றன என்பதுதான் மிகவும் வேதனையான விஷயம். யாருக்காக இப்படி நம்மைத் தியாகம் செய்து உழைக்கிறோம்? நம் குடும்ப உறுப்பினர்களுக்காகவும் நமக்காகவும்தானே.
ஆனால், நாம் இப்படி ஓய்வின்றி வேலை செய்வதால் நமக்கு ஏற்படும் பாதிப்பு நமது குடும்ப உறுப்பினர் களையும் தாக்கும்தானே? சற்றே அல்ல, மொத்தமாய் ஆழமாய்ச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில்தான் இன்று நாம் இருக்கின்றோம்.
இனியேனும் உங்களின் ஓய்வு நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். அந்த ஓய்வு நேரங்களில் குடும்பத்துடன் இருங்கள். உங்களுக்கான நேரத்தையும் சற்றே ஒதுக்குங்கள். குறைந்தது 6 மணிநேரமாவது தொந்தரவு இல்லாத நிம்மதியான தூக்கத்தைப் பழகிக் கொள்ளுங்கள். அதன்பிறகு நீங்களே பார்க்கலாம் உங்களில் ஏற்படும் மாற்றத்தையும், உங்களுக்குக் கிடைக்கும் புத்துணர்ச்சியையும்.