தைரியமாக பேசுபவர்கள் மற்றும் சமூகத்துடன் எளிதாகத் தொடர்பு கொள்பவர்களை மக்கள் அதிகம் விரும்புவதாக பிம்பம் இருந்தாலும், தனியாக இருக்க விரும்புபவர்கள் மீதே பலருக்கு ஈர்ப்பு அதிகம் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. இத்தகைய தனிமை விரும்புவீர்கள் நம் கவனத்தை ஈர்த்து, ஆர்வத்தைத் தூண்டும் தனித்துவமான ஆற்றலைக் கொண்டுள்ளனர். இந்த பதிவில் தனிமை விரும்பிகளை பிறருக்கு ஈர்ப்பு மிக்கவர்களாகக் காட்டும் விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.
தன்னம்பிக்கை மற்றும் சுதந்திரம்: தனிமை விரும்பிகள் தன்னம்பிக்கை மற்றும் சுதந்திர உணர்வை வெளிப்படுத்துகின்றனர். இது பிறருக்கு ஈர்ப்புமிக்க ஒன்றாக இருக்கிறது. வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களையும் இவர்களின் சொந்த விருப்பத்திற்கு ஏற்ப வழிநடத்தும் அவர்களின் திறன், அவர்களின் தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. இந்தத் தன்னம்பிக்கை, வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு கவர்ச்சிகரமாகத் தோன்றுகிறது. ஏனெனில் பெரும்பாலான நபர்களின் வாழ்க்கையை பிறரே நிர்ணயம் செய்கிறார்கள். அவர்களின் மதிப்பை வெளிப்படுத்த பிறரது தேவை இருக்கிறது. எனவே தனிமை விரும்பிகள் வித்தியாசமாக இருப்பது அவர்கள் மீது ஈர்ப்பை ஏற்படுகிறது.
மர்மம்: தனிமை விரும்பிகள் பிறரைப் போல எல்லா விஷயங்களையும் வெளிப்படுத்த மாட்டார்கள். அவர்களின் மர்மமான தன்மை பிறருக்கு வசீகிரமிக்க ஒன்றாகத் தெரியும். அவர்கள் எப்போதுமே பிறரால் புரிந்துகொள்ள முடியாத புதிரான குணத்தையே வெளிப்படுத்துவார்கள். அவர்களைப் பற்றி அதிக விஷயங்கள் பிறருக்குத் தெரியாது. இத்தகைய நடத்தை பிறருக்கு அவர்களின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
மன உறுதி: தனிமை வாழ்க்கையை விரும்புபவர்கள், யார் இல்லை என்றாலும் தைரியமாக வாழ முடியும் என்ற வலிமை பெற்றவர்கள். தனிமையில் செழித்து வளரும் அவர்களின் திறன், உள்வலிமை மற்றும் மன உறுதியைக் காட்டுகிறது. இந்த வலிமையானது பிறருக்கு கவர்ச்சிகரமாகத் தெரியும். பல கடினமான சூழ்நிலைகளை தனிமை விரும்பிகளால் கடக்க முடியும் என்பதால், பிறருக்கு இவர்கள் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.
தனித்துவம்: தனிமை விரும்பிகள் பெரும்பாலும் தனித்துவமாக இருக்க விரும்புபவர்கள். வாழ்க்கையில் அவர்களுக்கென தனி கோட்பாடுகள் இருக்கும். பிறரை பின்பற்றாமல் தனக்கான பாதையை வகுத்துக்கொண்டு அதில் செல்வார்கள். இவர்கள் சமூக அழுத்தங்களை எதிர்ப்பதால் பிறரால் அதிகம் விரும்பப்படுகிறார்கள். கூட்டத்திலிருந்து தனித்து நிற்பவர்கள் எப்போதுமே சிறப்பானவர்கள் என்ற பிம்பம் மக்கள் மத்தியில் இருக்கிறது. இதன் காரணமாகவே அதிக நபர்கள் தனித்துவமானவர்களை விரும்புகிறார்கள்.
அறிவுத்திறன்: தனிமை விரும்பிகள் தங்களின் பெரும்பாலான நேரத்தை சுயபரிசோதனை, சுய பிரதிபலிப்பு மற்றும் அறிவை வளர்த்துக் கொள்வதில் செலவிடுகின்றனர். இது அவர்களை அறிவார்ந்தவர்களாக மாற்றுகிறது. எனவே தனிமை விரும்பிகள் ஆழ்ந்த சிந்தனை கொண்ட புத்திசாலிகளாக இருக்கின்றனர். இத்தகைய நபர்களுடன் பேசும்போதே சிறப்பான உணர்வை ஏற்படுத்தும். மேலும் இவர்கள் அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபடுவதால், மக்களுக்கு இவர்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவதில் எவ்விதமான ஆச்சரியமும் இல்லை.