ஒரு சிற்றூருக்கு துறவி ஒருவர் வந்தார். அவரிடம் ஒருவன், "நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்," என்றான்.
அதற்கு துறவி,
"ஒரு முறை காட்டை சுற்றிப்பார். காடு முழுவதும் புதர்செடிகளும், நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் இருக்கும் அல்லவா? கடவுள் புதர் செடி மற்றும் மூங்கிலுக்கான விதைகளை எப்போது விதைத்தாரோ, அப்போதே மிக பொறுப்பாக வெளிச்சம், நீர், காற்று என அனைத்தையும் அச்செடிகளுக்கு வழங்கி வளரச் செய்தார். ஆனால், மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. கடவுள் கைவிடவில்லை.
ஐந்து ஆண்டுகள் கழித்து மூங்கில் விதை முளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வந்தது. புதர்செடியை விட சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது. ஆறு மாதங்கள் கழித்து ஓங்கி வளர்ந்து கம்பீரமாக காட்சி அளித்தது. இத்தனை ஆண்டுகளில் மூங்கில் விதை செத்து விடவில்லை. தான் வாழ்வதற்கு தேவையான அளவிற்கு வேர்களை பரப்பி, நன்கு உறுதியாகி, பின் தன் வளர்ச்சியை துவக்கியது.
நீ எப்போதெல்லாம் பிரச்னைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ, அப்போதெல்லாம நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மற்றவர்களுடன் உன்னை ஒரு போதும் ஒப்பிட்டுப் பார்க்காதே. அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட ஒருவேளை இருப்பார்கள். மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவை. ஆனால் இரண்டும் வெவ்வேறானவை. உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு நீ முன்னேற முடியும். உனக்கான வாழ்க்கையை நீ வாழ்வாயாக. நம்பிக்கையுடன் போ."
என்றார்.