நாம் எந்த செயல் செய்தாலும் அதில் ஒரு தயக்கத்தோடுதான் செய்கிறோம். தயக்கம் என்பது நமக்கு நெகடிவ் எனர்ஜியைத்தான் தரும். சரி இந்த தயக்கத்தைப் போக்க என்ன செய்ய வேண்டும் ஏதேனும் வழி உண்டா என்றால் நிச்சயம் உண்டு இதோ இப்பதிவை படியுங்கள்.
எந்தெந்த சூழ்நிலைகளில் தயக்க எண்ணங்கள் உண்டாகிறது என்பதை ஆராய வேண்டும். மீண்டும் அதே சூழ்நிலை வரும் போது எப்படி தயக்கமின்றி செயல்படுவது என்பதைத் திட்டமிட்டு ஒத்திகை செய்து கொள்ள வேண்டும்.
தயக்கம் உண்டாக்கும் சூழ்நிலைகள் தவிர்க்காமல் அதை அடிக்கடி அணுகினால் தயக்கம் குறையும். உதாரணத்திற்கு, உயர் அதிகாரி ஒருவரை பார்க்கப் போவதில் தயக்கம் இருந்தால், அவரை பார்க்க வாய்ப்புகிட்டும் போதெல்லாம் சந்தித்து விடவேண்டும். பயத்தினால் சந்திப்பதை தவிர்க்கக்கூடாது.
புதிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்புகளில் நாமாக சென்று ஒரிரு –நிமிடங்கள் உரையாடுதல் தயக்கத்தை குறைக்கும். பிறருடன் உரையாடும்போது, புன்னகைத்தல், கைகுலுக்குதல், கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசுதல், தலையசைத்து ஆமோதிப்பு காட்டுதல் போன்ற பழக்கங்களை வளர்க்க வேண்டும்.
பிறர் பேசும்போது ஆவலுடன் கவனிப்பதே தயக்கத்தை போக்கும் சிறந்த வழியாகும். வேலை செய்யுமிடத்தில், கூட்டமைப்புகளில் மற்றும் சமுதாய சங்க அமைப்புகளில் சேர்ந்து பங்கேற்றால் தயக்கம் குறையும்.
மற்றவர்களிடம் உரையாடுதலுக்கு பொருளே இல்லாவிட்டாலும் தொழில், குடும்பம் மற்றும் சுற்றுப் பயணங்கள் பற்றிய பொதுமான அம்சங்களில் நம்மை பற்றியும் பிறரைப் பற்றியும் பேசுதல் சிறந்த உரையாடலாகும்.
சிலருக்கு, பள்ளியில், குடும்ப சூழ்நிலையில், வேலை செய்யுமிடத்தில் அதிகப்படியான தயக்கத்தை உண்டு பண்ணும் மனிதர்கள் இருப்பார்கள். அது போன்றவர்கள், வாய்ப்பு ஏற்படும்போது வேலையை, தொழிலை, இருப்பிடத்தை மாற்றலாம்.
இறுதியாக, பயிற்சி செய்தலே சிறந்த வழியாகும். சிறந்த பாடகர் ஆயிரக்கணக்கான முறை பாடிய பிறகே, எவ்வளவு கூட்டமான மேடையிலும் தயங்காமல் பாடுகிறார்கள். பேச்சாளர்கள் நூற்றுக்கணக்கான முறை முன் ஒத்திகை பார்த்துவிட்டுத்தான் மேடையில் தெளிவாக பேசுகிறார்கள்.
எங்கெல்லாம் தயக்கம் வருகிறதோ, அந்த செயல் பலமுறை முன் ஒத்திகை பார்த்தால் தயக்கம் ஓடி விடும். திரும்ப திரும்ப செய்யும் பயிற்சி ஒன்று தான் தயக்கத்தை விரட்டும் சிறந்த வழியாகும்.
உங்களுடைய மனதை எண்ணங்களை எப்போது வேண்டுமாயினும் மாற்ற உரிமை உண்டு. நீங்கள் செய்யும் செயலில் தவறுகள் ஏற்படலாம். அது பெருங்குற்றம் அல்ல. தவறை ஒப்புக் கொள்வதில் தவறில்லை.
உங்களுக்கு ஏதாவது தெரியாத போது ‘எனக்கு தெரியாது‘ என்று வெளிப்படையாக கூறவேண்டும். மற்றவர்கள் உங்களை கட்டாயப்படுத்தும்போது அதை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு. உங்களுடைய செயலை மாற்றியமைக்கும்போது அதற்காக மற்றவர்களிடம் காரணத்தைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை உங்கள் சம்பந்தப்பட்ட பிறருடைய நன்மை தீமைகளை பற்றி ஆய்ந்து அதைப்பற்றிய முடிவு எடுக்க உங்களுக்கு உரிமை உண்டு.
பிறர் சொல்லும் போது, ”எனக்கு புரியவில்லை” என்று வெளிப்படையாக சொல்லாம். உங்களுடைய உடன்பாடில்லாமல் மற்றவர்கள் உங்களை ஆட்டுவிக்க முயலும்போது அவர்களை மறுப்பதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது.
உங்களுடைய சிந்தனை, உணர்வுகள் மற்றும் செயல்கள் பற்றி நீங்களே முடிவு செய்ய வேண்டும். பிறர் என்ன சொல்வார்களோ என்ற யோசனை தேவையில்லை. பிறரிடம் மறுப்பு சொல்லிவிட்டு தவறு செய்து விட்டோமா? என்ற குற்றவுணர்வு தேவையில்லை.