வளரும் பருவத்தில் இருக்கும் பிள்ளைகள் ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறார்கள். அதில் சிலர் வெற்றியடைகிறார்கள். பலரும் பல வேலையை ஒரே நேரத்தில் செய்வதால் கவனச் சிதறல் ஏற்படுகிறது. இதனால் சரிவர எதையும் செய்ய முடியாதபடிக்கு ஒரு இழுநிலை காணப்படுகிறது. அதற்குப் பதிலாக ஒரே வேளையில் கவனம் செலுத்தி தொடர்ந்து அதையே முயற்சித்து வந்தால், ஒரே வேலையை நன்றாக, ஒரே நாளில் இனிதாக, செய்து முடித்துவிட்டு அடுத்த வேலையைத் தொடங்கலாம். இதனால் வெற்றி பெறுவதும் வெற்றி இலக்கை அடைவதும் எளிதாகும்.
ஏலே லே சிங்கர் என்கிற பெரும் செல்வந்தர் திருவள்ளுவரின் மாணவராய் இருந்தார். அவர் தன் மாளிகையில் சிவ வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் செய்யும் வழிபாடு ஆரவாரமாக இருக்கும். வழிபாட்டின்போது தங்க பாத்திரங்களைத்தான் பயன்படுத்துவார். ரொம்ப நேரம் வழிபடுவார்கள். ஒரு தடவை அவர் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது திருவள்ளுவர் அங்கு வந்தார். மாணவரோட வழிபாட்டிற்கு இடைஞ்சல் செய்ய வேண்டாமே என்று நினைத்த அவர் அவர் வீட்டுத் திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டார்.
ரொம்ப நேரம் கழித்து வழிபாடு எல்லாம் முடிந்து வெளியே வந்தவர், திண்ணையில் அமர்ந்திருந்த திருவள்ளுவரைப் பார்த்து திடுக்கிட்டுப் போய் "நீங்கள் உள்ளே வந்து வழிபாட்டிலே கலந்து கொண்டிருக்கலாமே" என்று பணிவோடு கேட்க, "உன் வழிபாடு என்னால் தடைப்படக்கூடாது என்று நினைத்தேன். அதனால்தான் இங்கேயே காத்திருந்தேன்" என்றார் திருவள்ளுவர்.
நான்கு மணி நேரமாக சிவ வழிபாடு செய்தேன். நீங்கள் எப்பொழுது வந்தீர்கள் என்று சொல்ல முடியுமா? "என்று கேட்க,
அதற்கு திருவள்ளுவர் "திருவல்லிக்கேணியில் நூல் கொடுத்த பாக்கித் தொகை இன்னும் வரவில்லையே நேரில் போய் கேட்டால்தான் கிடைக்கும் போல் இருக்கிறது என்று நினைத்தீர்களே அப்போது வந்து விட்டேன்" என்று சொல்ல, உள்ளம் ஒன்றி வழி படாத தன் நிலைக்காகவும், தற்பெருமைக்காகவும் வருந்தினாராம் ஏலேல சிங்கர்.
ஆதலால் அனைவரும் நாம் செய்யும் வேலையை மனம் ஒன்றி செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி கற்றுக் கொண்டால் வெற்றி இலக்கை அடைவது சுலபம்.