நீங்கள் சராசரியா? சாமானியனா? பிறக்கும்போதே பெருந்திறனோடு பிறக்கவில்லையே என்று வருந்துபவரா..? அப்போது இந்த விஷயம் உங்களுக்குத்தான்.
ஐன்ஸ்டீன் ஜெர்மானிய விஞ்ஞானி அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தார். அங்கு ப்ரின்ஸ்டன் நகரில் உள்ள ஆராய்ச்சி சாலை அவருக்காக ஒதுக்கப்பட்டது. அங்கு ஏதேனும் வசதிக் குறைவுகள் உள்ளதா என்று அமெரிக்க விஞ்ஞானிகள் அவரை விசாரித்தனர். தயங்கித் தயங்கி ஐன்ஸ்டீன் "இங்கு எல்லாம் வசதியாகத்தான் இருக்கிறது. ஆனால் இங்குள்ள குப்பைக் கூடை சிறியதாக இருக்கிறதே. கொஞ்சம் பெரிய கூடையாக வைக்கலாமே." என்றாராம். எதற்கு பெரிய கூடை என்று அவர்கள் கேட்க, "நான் என்ன மேதாவியா, எல்லா ஆராய்ச்சிகளையும். முதலிலேயே சரியாகச் செய்ய. தப்பு தப்பாகச் செய்வேன். உடனே கிழித்து விட்டு மீண்டும் மீண்டும் எழுதுவேன். இந்த முட்டாளுக்கு ஒரு விஷயத்தைச் சரியாகச் செய்ய நிறைய சந்தர்ப்பம் வேண்டும். தவறுகளைப் புதைக்க கொஞ்சம் பெரிய குப்பைக் கூடையும் வேண்டும்" என்றாராம். இப்போது தெரிகிறதா சராசரிகள்தான் சக்கரவர்த்தி ஆகிறார்கள். நாம் சாதாரணம் என்று நினைக்காதீர்கள். நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள். சின்னச் சின்ன சறுக்கல்கள், வீழ்ச்சிகள் ஒரு பெரிய விஷயமே அல்ல.
காது மந்தமான 4வயது குழந்தைக்கு டாமி என்ற செல்லப் பெயர். அவர் தாயார் அவனை பள்ளியில் சேர்த்தார். அவனுக்குக் காது மந்தம். பள்ளி ஆசிரியர் ஒரு நாள் ஒரு கடிதம் கொடுத்து அவனை தாயாரிடம் கொடுக்கச் சொன்னார். அக்கடிதத்தில் அப்பையனை முட்டாளாகிய டாமி இனி பள்ளி வரவேண்டாம் என எழுதியிருந்தார். ஆவேசமான தாய் டாமியை நானே படிக்வைப்பேன் என்று வைராக்கியமானாள். அந்த பையன்தான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் உருவாக்கிய தாமஸ் ஆல்வா எடிசன்.
நேற்றைய சராசரி இன்றைய சக்கரவர்த்திக்கு இவர் இன்னொரு உதாரணம். இன்னொரு முக்கியமான விஷயம். அதே எடிசன் பலமுறை தோற்றுதான் வெடிக்காத பல்பை கண்டுபிடித்தார். அவருடைய 67வது வயதில் அவருக்கு நேர்ந்த விபத்து தாங்கக் கூடியதே அல்ல. பாடுபட்டு உருவாக்கிய அவர் ஆராய்ச்சிக் கூடம் பற்றி எரிந்தது. என் தவறுகள் யாவும் எரிந்துவிட்டன என்றார் அவர். விபத்து நடந்த மூன்றாம் வாரத்தில் ஃபோனோக்ராப் என்பதைக் கண்டுபிடித்தார்.
ஒரு ஜென் துறவியின் குடிசை பற்றி எரிந்தது.நெருப்பு தன் பல நாக்குகளை சுழற்றி தன் பசி ஆறியது. பலர் அழுதனர். ஆறுதல் சொல்லினர். வானத்தைப் பார்த்தபடி துறவி "ஆஹா நிலவின் ஒளியைக் தடுத்த கூரை எரிந்து விட்டது" என்று கொண்டாடினார். எப்போதும் நம்பிக்கையோடு இருந்தால் வெற்றி நிச்சயம்.